விலைவாசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விலைவாசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 நவம்பர், 2011

விலை உயர்வை சமாளிப்பது எப்படி?


பால் விலை, பஸ் கட்டணம், மின் கட்டண உயர்வு ஆகியவை உங்களைக் கவலைக்கு உள்ளாக்குகிறதா? கவலைப்படாதீர்கள். உங்கள் நலம் கருதி பல சிக்கன யோசனைகளை இங்கே கொடுக்கிறேன்.

நீங்கள் மாத சம்பளக்காரராக இருந்தால் ஏற்கெனவே ஒரு குடும்ப பட்ஜெட் வைத்திருப்பீர்கள். அதை தூசி தட்டி வெளியில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பட்ஜெட்டின் முக்கிய அம்சம் என்னவென்றால் உங்கள் வரவின் பாதிக்குள்தான் செலவினங்களை கட்டுப் படுத்தி வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் மீதி இருக்கும் சேமிப்பில் ஒரு கால் பங்கு அவசர செலவுகளுக்குப் பயன்படும். மீதி இருக்கும் கால் பங்கு சேமிப்பாக வளரும்.

இப்படி போட்டிருக்கும் பட்ஜெட்டை இப்போது கடைப்பிடித்தீர்களானால் உங்களை இந்த விலைவாசி உயர்வு ஒன்றும் செய்துவிட முடியாது. எப்படி என்று பார்ப்போம்.

இப்போது பால் விலை அதிகமாகி இருக்கிறது. இதை அம்மா ஏன் செய்தார்கள் என்றால் மக்கள் நலம் கருதியே. பால் எதற்கு உபயோகப்படுத்துகிறோம்? காப்பி குடிக்க. காபியினால் உடலுக்கு எவ்வளவு தீங்கு ஏற்படுகிறது தெரியுமா? தமிழ் நாட்டில் ஹார்ட் அட்டேக்கில் இறப்பவர்களில் பாதிப்பேர் காப்பிக் குடியர்கள். அதனால்தான் அவர்களுக்கு ஹார்ட் அட்டேக் வந்தது. இந்த எச்சரிக்கையையும் மீறி காப்பி குடிக்கவேண்டுமென்றால் இதுவரை குடித்த அளவில் பாதி அளவே குடியுங்கள். பால், காபித்தூள், சர்க்கரை செலவு பாதியாகக் குறைந்துவிடும்.

அப்புறம் பால் தயிருக்காக உபயோகப்படுத்துகிறோம். தயிரில் கொலஸ்ட்ரால் இருக்கிறது. இதுவும் ஹார்ட் அட்டேக் வருவதற்கு ஒரு காரணமாகும். ஆகவே தயிரை மோராக்கி உபயோகப்படுத்துங்கள். அதற்கு பாதி பால் இருந்தால் போதும். ஆகவே உங்கள் பால் தேவை பாதியாகக் குறைந்துவிட்டதல்லவா? இப்படி பால் விலை உயர்வை சமாளித்தாகி விட்டது.

அடுத்து பஸ் கட்டண உயர்வு. பஸ் செலவிற்கென உங்கள் பட்ஜெட்டில் ஒரு தொகை ஒதுக்கியிருப்பீர்கள் அல்லவா? அதை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். என்ன சங்கடம் என்றால் அந்தப் பணம் இப்போதுள்ள பஸ் கட்டணத்திற்கு போதாது. அதற்கு மூன்று உபாயங்கள் இருக்கின்றன.

1.   ஆபீசுக்கு போகும்போது பஸ்சில் போய்விட்டு, வரும்போது நடந்து வரலாம்.
2.   பாதி தூரம் மட்டும் பஸ்சில் போய்விட்டு மீதி தூரத்தை நடந்து கடக்கலாம்.
3.   ஒரு நாளைக்கு பஸ், மறுநாள் நடை என்று மாற்றி மாற்றி வைத்துக்கொள்ளலாம்.
நடைப் பயிற்சிக்காக தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை.

அடுத்து மின் கட்டண உயர்வு. இது உங்களை அதிகமாகப் பாதிக்க வழியில்லை. ஏனென்றால் இனி வரும் காலங்களில் மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் ஆதலால் மினசார உபயோகம் தானாகவே கட்டுக்குள் வந்து விடும்.

ஆக மொத்தம் இந்த விலை உயர்வு மக்களின் நன்மைக்காக கொண்டு வரப்பட்ட ஒன்றாகும். மக்களின் பெரிய அறியாமை என்னவென்றால் தங்களுக்கு எது நன்மை பயக்கும் என்பதை அறியாமலிருத்தலேயாகும். மக்கள் அனைவரும் இந்த அறியாமை இருளிலிருந்து வெளிவர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

டிஸ்கி: இந்தப் பதிவைப் படித்தபின் எனக்கு ஏதாவது செய்யவேண்டுமென்று யாராவது நினைத்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடவும். ஆவன செய்து கொடுக்கப்படும்