விதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

மும்பையில் தனியாகத் தவித்தேன்



மும்பையில் என்னுடன் படித்த நண்பர் ஒருவர் ஒரு பெரிய கம்பெனியில் மேனேஜராக இருந்தார். அவரைத் தொடர்பு கொண்டு, மாணவர்கள், ஆசிரியர் ஆகியோர், நாங்கள் 80 பேர், மும்பைக்கு இத்தனாம் தேதி டூர் வருகிறோம், எங்களுக்கு தங்குவதற்கும் பார்க்க வேண்டிய இடங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கும் உதவி செய்ய முடியுமா என்று கேட்டிருந்தோம். அவரும், ஆஹா, செய்து விடுகிறேன் என்று பதில் அனுப்பியிருந்தார்.

ஹைதராபாத்தில் இருந்தும் எங்கள் வருகையை உறுதிப் படுத்தி-யிருந்தோம். நாங்கள் மும்பையில் விக்டோரியா டெர்மினஸ்ஸுக்கு பல ஸ்டேஷனுக்கு முன்பு வந்துகொண்டிருந்தபோதே, என் நண்பனின் சகாக்கள் மூன்று பேர் எங்கள் கோச்சில் ஏறி அறிமுகம் செய்து கொண்டார்கள். அவர்கள் சொன்ன திட்டத்தின்படி, நாங்கள் அனைவரும் விக்டோரியா டெர்மினஸ் போகாமல் மாதுங்கா ஸ்டேஷனில் இறங்கிக் கொள்ளவேண்டும். அங்குள்ள தமிழ்ச்சங்கத்தில்தான் எங்களுக்குத் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எங்களை ஏற்றிச்செல்ல இரண்டு பஸ்களும் அங்கே காத்துக்கொண்டு இருக்கின்றன. நாங்கள் விக்டோரியா டெர்மினஸ் போய் அங்கிருந்து திரும்பி வருவதென்றால் அதிக தூரம், தவிர நேரமும் அதிகம் ஆகும் என்றார்கள்.

நாங்களும் அவர்களை நம்பி மாதுங்கா ஸ்டேஷனில் மூட்டை முடிச்சுகளுடன் இறங்கி விட்டோம். எங்கள் கோச் நாங்கள் வந்த ரயிலுடன் விக்டோரியா டெர்மினஸ் போய் விட்டது. கோச் அங்குதானே இருக்கும், இந்த தங்குமிடம் மற்றும் மும்பை புரொக்ராம் வேலைகளை முடித்து விட்டுப் போய்ப் பார்த்துக்கொள்ளலாம் என்று எதார்த்தமாக நம்பினோம். (வடிவேலு பாணியில் - நம்ப்ப்ப்ப்ப்ப்பினோம்) இங்குதான் நாங்கள் தவறு செய்து விட்டோம்

எல்லோரும் அவரவர்கள் உடைமைகளை வைத்துவிட்டு குளித்து டிபன் சாப்பட்டோம். கூட வந்த இரண்டு ஆசிரியர்களும் மாணவர்களைக் கூட்டிக்கொண்டு புரொக்ராமுக்கு சென்று விட்டார்கள். நான் மட்டும் ரயில்வே பார்மாலிடிகளைக் கவனிக்க விக்டோரியா டெர்மினஸ் சென்று ஸ்டேஷன் சூப்பிரன்ட் ஆபீசுக்குப் போய், நாங்கள் ஸ்பெஷல் கோச்சில் சென்னையிலிருந்து வந்து மாதுங்காவில் இறங்கிவிட்டோம். எங்கள் கோச் இங்கே வந்திருக்கும். நாங்கள் அந்தக் கோச்சில் இத்தனாம் தேதி இந்த ரயிலில் டில்லி போகவேண்டும். அதற்குண்டான ஆர்டர்கள் போடுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.

அவர்கள் என் தலையில் ஒரு பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டார்கள். உங்கள் கோச்சா? அது காலியாக வந்ததா, அதை ஒரு கல்யாணப் பார்ட்டிக்கு கொடுத்துவிட்டோம் என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார்கள். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. என்னடா இது, நேத்து வந்தவன் பொண்டாட்டியை இண்ணைக்கு வந்தவன் கூட்டீட்டுப் போன கதையாக இருக்கிறது? என்று நினைத்துக்கொண்டு, அவர்களிடம் அதெப்படி எங்களுக்கு என்று கொடுக்கப்பட்ட கோச்சை இன்னொருவருக்கு கொடுக்கலாம் என்று கேட்டேன்அவர்கள் உங்கள் கோச்சை அனாதையாக விட்டுவிட்டு நீங்கள் எங்கே போனீர்கள்? கோச் காலியாக வந்ததினால் நாங்கள் அதை வேறு பார்ட்டிக்கு கொடுத்து விட்டோம். உங்களுக்கு வேண்டுமானால் வேறு கோச் அலாட் செய்கிறோம் என்று சொன்னார்கள். நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த புது கோச்சை சென்னையிலிருந்து வாங்கி வந்தோம், அதை இப்படி செய்து விட்டீர்களே, எங்களுக்கு அதே மாதிரி புது கோச் கொடுக்காவிட்டால் மாணவர்கள் உங்கள் ஆபீசுக்கு முன்னால் வந்து தர்ணா செய்வார்கள், பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

நாங்கள் புறப்படும் அன்று ஸ்டேஷனுக்கு சென்று பார்த்தபோது நாங்கள் வந்த அதே மாதிரியான கோச் எங்களுக்கு அலாட் செய்திருந்தார்கள். நான்கு டிஜிட் கோச் நெம்பரில் கடைசி நம்பர் மட்டும்தான் மாற்றம். யாராவது சொன்னால் தவிர கோச் மாறினது யாருக்கும் தெரியாது. அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன். வேறு ஏதாவது பழைய கோச் கொடுத்திருந்தார்களானால் மாணவர்கள் மத்தியில் என் மானம் மரியாதை எல்லாம் கப்பலேறிப் போயிருக்கும். அன்று என்னைக் கடவுள்தான் காப்பாற்றினார்.

செவ்வாய், 8 மார்ச், 2011

கோர்த்து விடுதல் (பெயர்க் காரணம் – தொடர் பதிவு)



முதலில் ஒரு கதை கேளுங்கள்.
ஒரு ஊர்ல ஒரு செட்டியார் வியாபாரஞ் செய்து வந்தார். அவர் ஒரு வேலைக்காரனை வேலைக்கு அமர்த்தியிருந்தார். வெளியூர் செல்லும் சமயங்களில் அவனையும் துணைக்குக் கூட்டிப்போவார். அந்த வேலைக்காரனுக்கு கொஞ்சம் விவேகம் கம்மி. இருந்தாலும், சொன்ன வேலையைத் தட்டாது செய்வான். அதனாலேயே செட்டியார் அவனை வேலையை விட்டு நீக்காமல் வைத்திருந்தார்.

அப்படி ஒரு சமயம் வெளியூருக்கு பண வசூலுக்குப் போய்விட்டு காட்டு வழியில் திரும்பும் சமயம் இருட்டிவிட்டது. அப்போது திருடர்கள் வரும் சத்தமும் கேட்டது. செட்டியார் வேலைக்காரனிடம்சத்தம் போடாமல் கட்டை மாதிரி படுத்துக்கொள் என்றுகூறிவிட்டு, தானும் ஒரு புதர் மறைவில் படுத்துக்கொண்டார். வேலைக்காரனும் ஒரு கட்டை போல் படுத்துக்கொண்டான். அந்த வேலைக்காரனுக்கு செட்டியார் சாப்பாட்டு செலவிற்குக் கொடுத்ததில் ஒரு பணம் (கால் ரூபாய்) மிச்சம் பண்ணி இடுப்பில் வேட்டியில் முடி போட்டு சொருகி வைத்திருந்தான்.

திருடர்கள் அந்த வழியில் வரும்போது, ஒரு திருடன் இந்த வேலைக்காரன் படுத்திருந்ததைக் கவனிக்காமல் வந்தான். அப்போது தடுக்கியது. உடனே அந்தத் திருடன் வழியில் ஏதோ கட்டை கிடக்கிறது, பார்த்து வாருங்கள் என்று கூறினான். வேலைக்காரனுக்கு ரோஷம் வந்து விட்டது. அவன் சொன்னான், “உங்க வீட்டுக் கட்டை இடுப்புல ஒரு பணம் சொருகி வச்சிருக்குமோஎன்றான். திருடர்கள் அவனைப் பிடித்து உதைத்து அந்த ஒரு பணத்தைப் பிடுங்கிக் கொண்டார்கள்.

அதைப் பிடுங்கிய திருடன் அந்தக் காசை தடவிப்பார்த்துஇந்தப் பணம் செல்லுமோ செல்லாதோஎன்று சொன்னான். உடனே வேலைக்காரன், “செல்லும் செல்லாததற்கு பக்கத்துப் புதரில் செட்டியார் படுத்திருக்கிறார், அவரைக் கேட்டால் சொல்லி விடுவார்என்றான். திருடர்கள் அப்படியா சங்கதி என்று சொல்லி செட்டியாரைப் பிடித்து அவரிடம் இருந்த பணத்தைப் பூராவும் பிடுங்கிக் கொண்டு சென்று விட்டார்கள்.

கதையின் நீதி ஒருபுறம் இருக்கட்டும். இந்தக் கதைக்கும் இந்தப் பதிவிற்கும் என்ன தொடர்பு என்று பார்க்கலாமா?

நான் சிவனே என்று என் வேலையைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். விதி வலியது. அது எந்த ரூபத்திலும் வரும் என்பது தெரிந்ததே. எனக்கு கோபி ராமமூர்த்தி ரூபத்தில் வந்தது.

தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்

கோபி ராமமூர்த்தி நல்ல நண்பர். ஆனால் விதி விளையாடினால் அவர் பாவம், என்ன செய்வார்? அவருக்குத் தெரிந்தவர்களையெல்லாம் கோர்த்து விட்டுவிட்டார். என்னையும் அதில் சேர்த்து விட்டார். இனி தப்பிக்க முடியாது.

எனக்குப் பெயர் வந்த காரணத்தைச் சொல்லவா? இந்தப் பதிவுக்கு பெயர் வந்த காரணத்தைச் சொல்லவா?

எனக்குப் பெயர் என்னைக்கேட்டு வைக்கவில்லை. அதனால் என்ன காரணத்தினால் அப்படிப் பெயர் வைத்தார்கள் என்று நான் இது நாள் வரை யோசித்ததில்லை. கோபி ராமமூர்த்தி கேட்ட பிறகுதான் ஏன் இந்தப் பெயரை எனக்கு வைத்தார்கள் என்று யோசிக்கிறேன். பதில் சொல்ல வேண்டிய இருவரும் (தந்தையும் தாயும்) வேறு ஊரில் இருப்பதால் நானும் அங்கே போன பிறகு இந்தக் கேள்விக்கு விடையைக் கேட்டு, நீங்களும் அங்கே வரும்போது மறக்காமல் சொல்கிறேன். அது வரையில் பொறுமை காக்கவும்.

இந்தப் பதிவுக்குப் பெயர் வைத்தவன் நான்தான். ஆகவே அதற்கான காரணத்தைச் சொல்ல முடியும். என் மனதில் ஓடும் எண்ணங்கள் அலை அலையாய் ஓடும். ஆகவே என் பெயரைச் சுறுக்கி அலைகளைச் சேர்த்துசாமியின் மன அலைகள்என்று பெயர் வைத்தேன். அவ்வளவுதான்.

அப்பாடா, பெரிய சிதம்பர ரகசியத்தை வெளியில் சொல்லியாயிற்று. இனி எல்லோரும் நிம்மதியாகத் தூங்கலாம்.