ரேஷன் கடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரேஷன் கடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 நவம்பர், 2012

தொழில் நுட்ப பதிவு - ரேஷன் கடை


ரேஷன் கடை நடத்துவது பற்றி நான் எழுதுவது எல்லோரும் அறிவீர்கள். இந்த அனுபவங்கள் அனைத்தும் 1976ல் ஏற்பட்டவை. அந்த அனுபவங்களுக்கும் இன்றைய காலகட்ட நடைமுறைகளுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்று முழு மனதுடன் நம்புகிறேன். அதற்குப்பின் வந்த அரசுகள் மக்களின் நல்வாழ்வுக்காக  பல சீர்திருத்தங்கள் கொண்டுவந்துள்ளார்கள். அதனால் இந்த தில்லு முல்லுகள் இப்போது இல்லை என்று உண்மையாக நம்புகிறேன். படிப்பவர்களும் இந்த கால வித்தியாசத்தை நன்கு உணர்ந்து படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ரேஷன் அரிசி தயாராகும் முறையை விவரமாகப் பார்த்தோம். இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு. தஞ்சாவூர் மாவட்டம் தவிர இதர மாவட்டங்களில் கொள்முதல் செய்யும் நெல் இந்த மாதிரி ஈரத்துடன் இருக்காது. அங்குள்ள சில "வெள்ளைச்சோள" மில்காரர்கள் அந்த நெல்லை எப்போதும்போல் வேகவைத்து, காயவைத்து, அரைத்து அனுப்புவார்கள். இந்த அரிசி நன்றாகவே இருக்கும். இந்த மாதிரி லோடு வந்தவுடன் சிவில் சப்ளை கோடவுனில் இருக்கும் கலாஸ்காரர்கள் அதை மோப்பம் பிடித்து அந்த மூட்டைகளை தனியாக அடுக்கிவைத்து விடுவார்கள்.

ரேஷன் அரிசியை சாப்பிடும் முறைபற்றி தோழர் வலிப்போக்கன் எழுதியுள்ளதை இந்தப் பதிவில் பார்க்கவும்.

தனியார் ரேஷன் கடைக்காரர்களுக்கு இந்த விஷயம் தெரியும். அவர்கள் கலாஸ்காரர்களுக்கு "சம்திங்க்" கொடுத்து இந்த மூட்டைகளில் நான்கைந்தை வாங்கிக்கொள்வார்கள். அவர்களின் ரேஷன் கடைக்குப்போகும் வழியில் ஏதாவது ஒரு ஓட்டல்காரரிடம் அக்ரீமென்ட் இருக்கும். இந்த மூட்டைகளை அங்கு இறக்கிவிட்டுப் போய்விடுவார்கள். அப்படியே ஓரிரு சர்க்கரை மூட்டைகளும் "தானாகவே" அங்கே இறங்கிக்கொள்ளும்.

இப்படி சரக்குகள் குறைந்தால் ரேஷன் கடை கணக்குகளை எப்படி சரி செய்வது? அந்தக் காலத்தில் நிறைய கணக்குப்புலிகள் இருந்தார்கள். அவர்களுக்கு ஆடிட்டர்கள் என்று பெயர். ஆனைக்கு அல்வா வாங்கின கணக்கையும் கூட சரி செய்யக்கூடிய சாமர்த்தியசாலிகள் அந்தக் காலத்தில் உண்டு. இதற்கு மேல் இந்த விஷயத்தின் உள் வயணத்தைச் சொல்ல எனக்கு கூச்சமாக இருக்கிறது. ஏனென்றால் நானும் அப்படி செய்திருக்கிறேன்.

ரேஷன் கடைகளில் எடை குறைவாகப் போடுவது என்பது காலம் காலமாக வந்த ஒரு நடைமுறை. ஒரு 200 கிராம் எடைக்கல்லை சாமான் போடும் தட்டின் கீழ் புளியை வைத்து ஒட்டி விட்டால் அது பாட்டுக்கு தன் வேலையை செய்து கொண்டிருக்கும். ஒரு கிலோ போடும்போது 200 கிராம் குறைந்தால் அப்பட்டமாகத் தெரிந்து விடும். அதனால் ஒரு கிலோ போடும்போது தாராளமாகப்போடுவது போல் அதிகமாகப்போடுவார்கள். நாலு கிலோ போடும்போது 200 கிராம் குறைந்தால் தெரியாது. யாராவது அதிகாரிகள் வந்தால் அதை நைசாக எடுத்து விடலாம். இந்த விஷயத்தில் ஒரு தார்மீக நியாயமும் இருக்கிறது.

சர்க்கரை மூட்டை ஒன்று 100 கிலோ. இந்த எடை சாக்கையும் சேர்த்து உண்டான எடை. சாக்கு ஒன்றரை கிலோ. ஆக சர்க்கரை 98.5 கிலோதான் இருக்கும். இதை எப்படி நூறு கிலோவாக பில் போடமுடியும்? தவிர இந்த சில்லரை வியாபாரத்தின் இன்னொரு நுணுக்கம்- நூறு கிலோ சரக்கை ஒவ்வொரு கிலோவாக நிறுத்து விற்றால் 97 அல்லது 98 கிலோதான் வரும். அதற்குக் காரணம்- ஒரு கிலோவை தங்கம் எடை போடுகிறமாதிரி அவ்வளவு துல்லியமாகப் போட முடியாது. அப்படிப் போட்டால் வாங்குகிறவர்கள் சண்டைக்கு வருவார்கள். ஒரு பத்துப் பதினைந்து கிராம் கூடப் போய்விடும். இப்படி நூறு கிலோவிற்கு ஒன்றிரண்டு கிலோ குறைபாடு வந்துவிடும்.

ஆக மொத்தம் 100 கிலோ சர்க்கரை மூட்டையைப் பிரித்தால் 97 கிலோதான் விற்க முடியும். இதை சட்டம் ஏற்றுக்கொள்வதில்லை. நூறு கிலோவிற்கும் பில் போடவேண்டும். இது எப்படி சாத்தியமாகும்? மறுபடியும் கணக்குப்புலிகளின் கிருபைதான்.

மண்ணெண்ணை விற்பனை இன்னும் மோசம். கொஞ்சம் ஏமாந்தால் எண்ணை வழிந்துவிடும். அந்த எண்ணையை ஒன்றும் செய்யமுடியாது. தவிர எண்ணை ஆவியாகிக்கொண்டே இருக்கும். எவ்வளவு ஜாக்கிரதையாக அளந்து விற்பனை செய்தாலும் 200 லிட்டர் பேரலுக்கு 5 லிட்டர் எண்ணை கணக்கில் வராது. இந்த 5 லிட்டருக்கு யார் பணம் கட்டுவது? மறுபடியும் புலிகள்தான்.

இவ்வளவு போதும் என்று நினைக்கிறேன். மேல் விபரங்கள் தேவைப்படின் நேரில் வரவும். 

திங்கள், 12 நவம்பர், 2012

நான் நடத்திய ரேஷன் கடை - பாகம் 1


சமீபத்தில் வந்த ஜெயதேவ் அவர்களின்

 "பூமத்திய ரேகையில் நிகழும் அறிவியல் அற்புதம்." என்ற  பதிவில்  அவர் எழுதியிருந்த ஒரு வாசகம்.

நீங்கள் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கும்போது [கம்பியூட்டர் எல்லாம் பார்க்கிறீங்க, நீங்க எங்கே வாங்கியிருக்கப் போறீங்க..........!!] 

இதற்கு என்னுடைய பின்னூட்டம்
என்னங்க இப்படிச் சொல்லிப்புட்டீங்க? நான் ரேஷன் கடையே நடத்தீருக்கேன். அது பற்றி ஒரு தனிப் பதிவு போடுகிறேன்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வீராப்பா பின்னூட்டம் போட்டுட்டேன். பதிவு எழுதித்தானே ஆகணும்.


என்னுடைய உத்தியோகத்திற்கும் ரேஷன் கடைக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் சம்பந்தம் உண்டாகி விட்டது. எப்படியென்றால் எனக்கு 1976 ல் மதுரை விவசாயக் கல்லூரிக்கு உத்தியோக உயர்வுடன் மாற்றல் வந்தது. மிகுந்த மனக் கஷ்டத்துடன் போய் வேலையில் சேர்ந்தேன். மனக்கஷ்டத்திற்கு காரணம் சில குடும்ப சூழ்நிலைகள். பிற்பாடு அவைகள் சரியாகிவிட்டன. மதுரையில் வேலை செய்த காலம் பொற்காலம் என்று நினைக்குமளவிற்கு சூழ்நிலைகள் மாறிவிட்டன.

மதுரை விவசாயக்கல்லூரி மதுரையிலிருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் ஒத்தக்கடை என்னும் இடத்தில் யானைமலை அடிவாரத்தில் இருக்கிறது.இங்கு பணி புரியும் அலுவலர்களுக்கு குடியிருப்புகள் உண்டு. தவிர சுமார் ஆயிரம் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கிறார்கள். இவர்களுக்கு வேண்டிய அன்றாடத்தேவைக்கான பொருள்களை வாங்க வேண்டுமென்றால் மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒத்தக்கடை என்னும் கிராமத்திற்குத்தான் போகவேண்டும்.

இவர்களுக்கு உதவுவதற்காக கல்லூரி வளாகத்திலேயே ஒரு கூட்டுறவு பண்டகசாலை ஆரம்பிக்கப்பட்டது. ஒரு சிறிய பொட்டிக்கடை மாதிரிதான் இருக்கும். இங்கு சோப்பு, பேஸ்ட், பிரஷ், பேனா, பென்சில், பலசரக்கு சாமான்கள் இத்தியாதி பொருட்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். இங்கேயே ரேஷன் பொருட்களும் விற்பதற்கு அனுமதி வாங்கி, அந்த விற்பனையும் நடந்து கொண்டிருந்தது. ஆகவே அந்த ஸ்டோர் ஒரு பலசரக்கு மற்றும் ரேஷன் கடையாக பயன்பட்டுக் கொண்டிருந்தது. இதை நடத்துபவர் அங்கு குடியிருப்பில் வசிக்கும் ஏதாவது ஒரு பேராசிரியர். அவருக்கு அந்த ஸ்டோருக்கு செக்ரடரி என்று பதவிப்பெயர். ஊதியம் இல்லா கௌரவப் பதவி.

நான் அங்கு போய் வேலைக்கு சேருவதற்கு முன்பே,, அங்குள்ள கல்லூரித் தலைவர் எனக்கு அந்த வேலையைக் கொடுப்பதென்று முடிவு செய்திருக்கிறார். இந்த விஷயம் பிற்பாடுதான் எனக்குத் தெரிந்தது. அவர் எனக்கு ஆசிரியரும் கூட. அதனால் அவருடைய விருப்பத்தை என்னால் மறுக்கமுடியவில்லை. அங்கு போய் சில நாட்களிலேயே இந்தப் பதவி எனக்கு கொடுக்கப்பட்டது.

மாலை 6 மணி முதல் 8 மணி வரை கடையின் விற்பனை நேரம். ஆபீசிலிருந்து வீட்டுக்குப் போய் காப்பி குடித்து விட்டு கடைக்குப் போவேன் எனக்கு உதவிக்காக இன்னொரு பேராசிரியரையும் கல்லூரித்தலைவர் போட்டிருந்தார். எடுபிடி வேலைக்காக இரண்டு உதவியாளர்களை நாங்கள் நியமித்துக்கொண்டோம். எல்லாம் கல்லூரியில் வேலை செய்யும் நபர்கள்தான். 

ஸ்டோர் பதவி எடுத்துக்கொண்டவுடன் வியாபார நுணுக்கங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். சரக்கு கொள்முதல் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்தில்தான் வாங்கவேண்டும். அதுதான் சிறு கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு உண்டான சட்டம். அங்கு இல்லாத பொருட்களை வெளியில் வாங்கிக்கொள்ளலாம். ரேஷன் பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணை இவைகளை சிவில் சப்ளை டிபார்ட்மென்டிலிருந்து வாங்கிக்கொள்ளவேண்டும்.

இதில் இந்த ரேஷன் வியாபார நுணுக்கங்களை மட்டும் பார்க்கலாம். ரேஷன் அரிசி என்பது ஒரு தனி ரகம். அதை எவ்வளவு பேர் சாப்பிட்டுப் பார்த்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. அதை சாப்பிடுவதற்கு தனி தைரியம் வேண்டும். உடல் உழைப்புத் தொழிலாளிகள் இந்த சாப்பாட்டைத்தான் சாப்பிடுவார்கள்.  அதுதான் அவர்களுக்குக் கட்டுப்படியாகும்.

இந்த அரிசி ஏன் இப்படிப்பட்ட மகத்துவம் பெற்றது என்பது ஒரு தனிக்கதை. அதையும் எழுத ஆசைதான். ஆனால் தேசத்துரோகி என்று பிடித்து உள்ளே போட்டு விடுவார்களோ என்ற பயத்தினால் எழுதவில்லை.

இந்த ரேஷன் பொருட்களை வாங்க முதலில் சிவில் சப்ளை ஆபீசில் பணம் கட்டிவிட்டு கோடவுனுக்குப் போகவேண்டும். பணம் கட்டின ரசீதைக் காட்டினால் அங்குள்ள சிப்பந்திகள் அரிசி, கோதுமை, சர்க்கரை ஆகியவைகளை நாம் கொண்டு போயிருக்கும் வாகனத்தில் ஏற்றி விடுவார்கள். ஏற்றுக்கூலி தனியாகக் கொடுத்து விடவேண்டும். இதை இந்தப் பொருள்களின் விற்பனை விலையில் சேர்த்தக்கூடாது. சிவில் சப்ளை டிபார்ட்மென்ட் நிர்ணயித்துள்ள விலையில்தான் ரேஷன் பொருட்களை விற்கவேண்டும்.

கூட்டுறவு விற்பனை நிலையங்கள் தங்கள் மற்ற வியாபாரத்திலிருந்து வரும் லாபத்திலிருந்துதான் இந்தச் செலவை ஏற்றுக் கொள்ளவேண்டும்.  கூட்டுறவு விற்பனை நிலையங்கள் இந்தச் செலவை இவ்வாறு சரிக்கட்ட முடியும். ஆனால் தனியார் நடத்தும் ரேஷன் கடைகளில் எப்படி இந்த செலவை சமாளிக்க முடியும்?

இங்குதான் ரேஷன் கடை தில்லு முல்லுகள் ஆரம்பிக்கின்றன. எப்படி என்று அடுத்த பதிவில் பார்ப்போமா.