கடவுள் அருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடவுள் அருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 ஜூன், 2016

கடவுள்களுக்கு நோய்கள் வராதா?

                                  Image result for கடவுள்

கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பது ஒரு பெரும் விவாதத்திற்குரிய விஷயம். அந்த விவாதம் இப்போது வேண்டாம். கடவுள் இருக்கிறார் என்று வைத்துக்கொண்டு இந்தப் பதிவை எழுதுகிறேன்.

கடவுளை மனிதன்தான் உருவாக்கினான் என்பது எல்லோருக்கும் தெரியும்.  அப்படி கடவுள்களை உண்டாக்கும்போது அந்தக் கடவுள்களை தன் உருவம் மாதிரியே உண்டாக்கினான். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று சில கடவுள்களுக்கு நான்கு தலை, ஆறு தலை, நான்கு கைகள், பனிரெண்டு கைகள் என்று உருவகப்படுத்தினான்.

அத்துடன் நில்லாது கடவுள்களுக்கு தன்னைப்போலவே ஆசா பாசங்களையும் கற்பித்தான். கல்யாணம், குடும்பம், குழந்தை குட்டிகள், பலதார மணம், சக்களத்திச் சண்டை, பங்காளிச் சண்டை, கற்பழிப்பு, பிறன் மனை விழைதல் இப்படி எல்லாம் கற்பித்தான். அப்புறம் கடவுள்களுக்கு பசி, தாகத்தையும் உண்டு பண்ணினான்.

கடவுள்களும் இப்படியே ஆசா பாசங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடவுள்கள் இப்படி இருப்பதில் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. எனக்கு சில சந்தேகங்கள் அவ்வப்போது வருகின்றன. அவைகளுக்கு பல காலமாக விடை தேடுகிறேன். அவ்வளவுதான்.

1. கடவுள்கள் காலையில் எழுந்ததும் குளிக்கிறார்கள். சாப்பிடுகிறார்கள், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். மாலை வந்தால் ஆடல் பாடல்களைக் கண்டு களிக்கிறார்கள், இரவானால் சகதர்மிணியுடன் பள்ளியறை எழுந்தருள்கிறார்கள். இவ்வளவும் செய்கிறார்கள். ஆனால் மனிதர்கள் மாதிரி அவர்கள் காலை எழுந்தவுடன் ஏன் பாத்ரூம் போவதில்லை என்று தெரியவில்லை. எந்தக் கோவில்களிலும் கடவுள்களுக்காக பாத் ரூம் கட்டப்படவில்லையே, ஏன்?

2. மனிதர்களில் நோய்வாய்ப் படாதவர்கள் அபூர்வம். அவர்களுக்கு நோய் தீர்க்க தெருவிற்குத் தெரு பல விதமான ஆஸ்பத்திரிகள் இருக்கின்றன. இப்படி கடவுள்களுக்கும் நோய் வராதா? தேவலோகத்தில் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்களே. அவர்களுக்கு நோய் வந்தால் எப்படி அந்த நோயைக் குணப்படுத்திக் கொள்வார்கள்?

பல நாட்களாக இந்த இரண்டு சந்தேகங்களும் என் மண்டையில் புரண்டு கொண்டேயிருக்கின்றன. இந்த சந்தேகங்கள் வந்ததினால் நான் கடவுள்களுக்கு விரோதியாய் விடுவேனோ என்ற சந்தேகமும் இப்போது புதிதாய் முளைத்திருக்கிறது. இந்த சந்தேகங்களுக்கு நான் உங்களிடம் விடை கேட்கப்போவதில்லை. ஏனெனில் உங்கள் மனம் புண்படலாம். ஆகவே இந்தப் பதிவைப் படித்து விட்டு ஒரு ஸ்னானம் செய்து நீங்கள் இதைப் படித்த பாவத்தைப் போக்கிக்கொள்ளவும்.

எனக்கு நரகம்தான் பலிக்கும் என்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என் ஆப்த நண்பர்கள் எல்லோரும் அங்குதான் இருப்பார்களாகையால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

வெள்ளி, 19 டிசம்பர், 2014

என் பெட்ரூமில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும்


1962 ம் வருடம். அப்போது எனக்கு 28 வயது. கல்யாணம் ஆகவில்லை. ஆனால் குடும்பப் பொறுப்பு முழுவதும் என் தலையில். என் தகப்பனார் குடும்பச் சுமையைத் தாங்கிக்கொள்ள முடியாத மன நிலையில் பொறுப்பை என்னிடம் விட்டு விட்டு சொல்லாமல் கொள்ளாமல் தேசாந்திரம் சென்று விட்டார்.

அப்போது இந்தப் படம் வந்து சக்கைப்போடு போட்டது. அதில் இடம் பெற்ற "சிங்கார வேலனே " பாட்டு தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலித்துக்கொண்டிருந்தது. அப்போது இருந்த பாட்டுக்கேட்கும் சாதனங்கள் ரேடியோவும் கிராமபோன் பிளேயரும்தான்.

என்னிடம் ரேடியோ கூட கிடையாது. எங்காவது ரோட்டில் போய்க்கொண்டிருக்கும்போது இந்தப் பாட்டு ஏதாவது கல்யாண வீட்டில் இருந்தோ அல்லது கோயில் திருவிழாவிலிருந்தோ, ஒலி பெருக்கி மூலம் மூலம் காதில் விழுந்தால் அந்தப் பாட்டு முடியும் வரை அங்கேயே நின்று கேட்டுவிட்டுத்தான் போவேன்.

அப்போது என் மனதில் தோன்றிய எண்ணம் என்னவென்றால், எனக்கு வசதி வந்தால் ஒரு கிராமபோன் பிளேயரும் இந்தப் பாட்டின் ரெக்கார்டும் வாங்கி சலிக்கும் வரைக்கும் கேட்கவேண்டும் என்பதுதான்.

                           

காலம் மாறியது. தொழில் நுட்பங்கள் மாறின. எனக்கு வசதி வந்த நாளில் கிராமபோன் மிஷின் காணாமல் போயிற்று. ஆனலும் என்ன? அதன் இடத்தில் வேறு நுட்பங்கள் வந்து விட்டன.

டேப் ரிகார்டர் வந்து ஒரு இருபது ஆண்டுகள் கோலோச்சியது. ஐபாட் வந்தது. உங்கள் அபிமான பாடல்களை பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு போகலாம். ஆனாலும் இன்று வந்துள்ள டேப்ளட்டுகளும் கிண்டில் கருவிகளும் இசை கேட்கும் அனுபவத்தை தலைகீழாய் மாற்றிவிட்டன.

இன்று, இதோ என் பெட்ரூமில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் என் கைப்பிடியில் எனக்காகப் பாடுகிறார்கள். என் பெட்ரூமில் கச்சேரி மேடையே போட்டாகி விட்டது. சுதா ரகுநாதனின் கச்சேரியைக் கண்ணுக்கு எட்டாத தூரத்திலிருந்து கேட்டது போய், இப்போது என் கைக்கெட்டும் தூரத்திலிருந்து பாடுவதைக் கேட்க, காண முடிகிறது.

இப்படிப்பட்ட தொழில் நுட்பங்களை உண்டாக்கி, அந்தக் கருவிகளை வாங்கி இந்த இன்பங்களை அனுபவிக்க பழனி. கந்தசாமிக்கு அருள் புரிந்த அந்த சிக்கில் சிங்கார வேலவனுக்கும் என்னப்பன் பழனி முருகனுக்கும் என் நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.