உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

செய்நன்றியை எதிர் பார்ப்பது முட்டாள்தனம்

                               Image result for திருவள்ளுவர் images

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு - குறள்.

ஒரு வேளை இந்தக் குறள் திருவள்ளுவர் காலத்திற்குப் பொருத்தமாய் இருந்திருக்கலாம். ஆனால் நிச்சயம் இந்தக்
காலத்திற்குப் பொருந்தாது. என்னடா இவன் சுத்தக் கிறுக்கனா இருக்கானே என்று நீங்கள் நினைக்கலாம். ஒரு வகையில் நான் கிறுக்கன்தான். பதிவுலகில் கிறுக்கிக்கொண்டு இருக்கிறேனே, அதிலிருந்தே தெரியவில்லையா, நான் முழுக்கிறுக்கன் என்று?

விஷயத்திற்கு வருவோம். நன்றி என்பது என்ன? ஒருவர் இன்னொருவருக்கு உதவி செய்தால், அந்த உதவி பெற்ற நபர், அந்த உதவியைச் செய்தவருக்கு நன்றியுடன் இருக்கவேண்டும். இது ஓரளவுக்கு நியாயமானதாய்த்தான் தெரிகிறது. ஆனால் இந்த நன்றி உணர்வை எத்தனை காலத்துக்கு வைத்திருப்பது?

உதவி பெற்றவன் தன்னுடைய ஆயுள் காலத்திற்கும் இந்த நன்றியை மறவாதிருக்கவேண்டும் என்றால் பிரச்சினை இங்குதான் உருவாகிறது. ஒருவன் தன் ஆயுள் காலத்தில் பலரிடமிருந்து பலவிதமான உதவிகளைப் பெற்றிருப்பான். அத்தனை உதவி செய்தவர்களுக்கும் இவன் நன்றி பாராட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்றால் இவன் வேறு ஒரு வேலையும் செய்ய முடியாது.
தன்னையும் தன் குடும்பத்தையும் எப்படிக் காப்பாற்றுவான்?

உதாரணத்திற்கு ஒருவனுடைய பெற்றோர்களை எடுத்துக்கொள்ளுங்கள். இவன் பிறந்ததிலிருந்து இவனை வளர்த்து ஆளாக்கி, படிப்பித்து, வேலையில் சேர்த்து, கல்யாணம் செய்து வைத்து இவனை ஒரு மனிதனாக்கியவர்கள் அவர்கள்தான். அவர்கள் செய்த சேவைக்கு ஈடு இணை உண்டோ? ஆகவே ஒவ்வொருவனும் தன்னுடைய பெற்றோர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பாராட்டிக்கொண்டு இருக்கவேண்டும். இதுதானே நியாயம்!

நியாயத்தைப் பார்த்துக்கொண்டு குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டு இருந்தால் ஒருவன் முன்னேறுவது எப்போது? படிச்சமா, அமெரிக்கா போனமா, அங்கேயே செட்டில் ஆனமா, கல்யாணம் கட்டுனமா, குழந்தை, குட்டி பெத்தமா, ஒரு வீடு வாங்கினமா, நெண்டு கார் வாங்கினமா அப்படீன்னு இருந்தாத்தான் ஒருவன் முன்னேறியதற்கு அடையாளம். அதை விட்டு விட்டு இங்க உள்ளூர்ல ஒரு குமாஸ்தா உத்தியோகம் பார்த்துட்டு அப்பா அம்மாவைச் சுத்திச் சுத்தி வந்தா அது என்ன வாழ்க்கைங்க?

இதே மாதிரிதான் உதவி செஞ்ச மத்தவங்களையும் ஒரு தேங்க்ஸ் சொல்லிவிட்டு மறந்து விடவேண்டும். அப்படி மறக்காமல் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் "அன்னிக்கு நீங்க உதவி பண்ணாட்டா நான் வாழ்க்கையில முன்னேறியே இருக்க முடியாதுங்க" என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் இருக்கும் நிலையிலேயே இருக்கவேண்டியதுதான்.

மேலே போவதற்கு ஏணி அவசியம்தான். அதற்காக மேலை போனபின்பும் அந்த ஏணியையே பிடித்துக்கொண்டிருந்தால் அதற்கு மேலே போவது எப்படி? ஏறி வந்த ஏணியை உதைத்துத் தள்ளிவிட்டு அடுத்த ஏணியைப் பிடிக்க வேண்டும். அதுதான் வாழ்க்கையில் முன்னேற வழி.

இதைப் படிப்பவர்கள் அனைவரும் இந்த அறிவுரைகளை கடைப்பிடித்து வாழ்க்கையில் முன்னேறுவார்களாக!
                                     Image result for ஏணிப்படிகள்

ஞாயிறு, 6 மே, 2012

ஒரு அனுபவமும் அதன் நீதியும்



இரண்டு தினங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி. நான் வசிக்கும் தெருவில் பாதாளச் சாக்கடை பதிப்பதற்காக குழிகள் தோண்டியுள்ளார்கள். தோண்டின மண் பூராவும் ஒரு புறம் குவித்து வைத்துள்ளார்கள். மண் குவிக்காத பக்கம் ஒரு ஐந்து அடி அகலம் மட்டுமே உள்ளது. அதில் நடக்கும் மக்களும் இரு சக்கர வாகனங்களும் போய் வந்து கொண்டிருந்தன.

நான் காலை 7 மணிக்கு நடைப்பயிற்சி போய்விட்டு வரும்போது ஒரு கார்க்காரன் படு வேகமாக அந்த இடைவெளியில் சென்றான். நான் அதிசயப்பட்டேன். இதில் கார் செல்ல முடியாதே, இவன் என்ன செய்யப்போகிறான் என்று பார்த்துக்கொண்டே வந்தேன். கொஞ்ச தூரம் போன பிறகு மேலே செல்வதற்கு வழி இல்லை. குறுக்கே சிமென்ட் மூட்டைகள் அடுக்கி வைத்திருந்தார்கள்.

அந்த கார் டிரைவர் இறங்கி பாதியாக இருந்த ஒரு சிமென்ட் மூட்டையைத் தூக்கி வீசினான். அது சாக்கடைத் தண்ணீரீல் விழுந்தது. அதைத் திரும்ப தூக்கப் போனவன், ஹூம், இது சர்க்கார் சிமென்ட்டுதானே என்று சொல்லிவிட்டு அதை அப்படியே விட்டு விட்டான். நான் அப்போது அந்த இடத்திற்கு வந்து விட்டேன்.

நான் அவனைப் பார்த்து சொன்னேன். சர்க்கார் சொத்தாயிருந்தால் அதை என்ன வேண்டுமானாலும் செய்யலாமா, அதை எடுத்து தரையில் போடு என்று சொன்னேன். அவன் அதைக்கேட்க நீ யார் என்றான். நான் இந்த வீதியில் குடியிருப்பவன் என்று சொன்னேன். அதற்கு அவன் கண்ட மேனிக்கு சத்தம் போட ஆரம்பித்தான். நீ எங்கே வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் போய்க்கொள், எனக்கு கவலையில்லை என்று தாறு மாறாகப் பேச ஆரம்பித்தான். அப்போதுதான் கவனித்தேன், அவன் ஏகத்திற்கும் குடித்திருக்கிறான் என்று தெரிந்தது.

இனி இவனிடம் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை என்று நான் அந்த இடத்தை விட்டு வந்து விட்டேன். இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த இடத்திற்குப் பக்கத்தில் இருக்கும் வீட்டிலுள்ளவர்கள் எல்லாம் அவரவர்கள் வீட்டு வாசலில் நின்ற கொண்டு வேடிக்கை பார்த்தார்களே தவிர ஒருவராவது எனக்குத் துணையாக அவனைத் தட்டிக் கேட்க வரவில்லை. இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் எனக்கு நன்றாகப் பரிச்சயம் ஆனவர்களே. ஒரே தெருவில் பல ஆண்டுகளாக குடியிருப்பவர்கள்தாம்.

இதிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால் ஆபத்துக் காலங்களில் அக்கம் பக்கம் இருப்பவர்கள் உதவுவார்கள் என்ற எண்ணம் தவறு என்பதுதான். பக்த்து வீட்டில் கொலை நடந்தாலும் கூட கதவைப் பலமாக சாத்திக்கொள்வார்களே தவிர உதவிக்கு யாரும் வரமாட்டார்கள்.
இந்தப் பதிவைப் படிக்கும் அன்பர்களே, இந்த நீதியை மனதில் கொள்ளவும்.

திங்கள், 27 பிப்ரவரி, 2012

உலகமே ஒரு நாடக மேடை


நாடகத்தில் நடிகர்கள் பலப்பல வேஷங்கள் கட்டுகிறார்கள். அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்கும் அந்த வேடத்திற்கும் சம்பந்தமிருக்காது. நல்ல குணசீலரான ஒருத்தர் வில்லனாக வேஷம் கட்டியிருப்பார். அவர் அப்படி நடிக்கும்போது, பார்க்கும் ரசிகர்கள் அவர் மீது அதீத வெறுப்பைக் காட்டினால் அது அவருடைய நடிப்புக்கு வெற்றி என்று கூறுகிறோம். பெரிய பணக்காரர் பிச்சைக்காரனாக வேஷம் போட்டிருப்பார். அவர் அந்த வேடத்திற்குப் பொருத்தமாக நடிப்பார்.

நிஜ வாழ்க்கையிலும் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை நாம் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப நடந்து (நடித்து) கொண்டிருக்கிறோம். பல சமயங்களில் நாம் வேஷத்தை மாற்ற வேண்டியிருக்கிறது. வீட்டில் ஒரு வேஷம். அலுவலகத்தில் வேறொரு வேஷம். பஸ்சில் போகும்போது இன்னொரு வேஷம். இப்படியாக ஒரு நாளில் பல வேஷங்களில் நாம் உலா வருகிறோம். ஆனால் அதை நாம் வேஷம் என்று உணர்வதில்லை.

அரசில் பெரிய பதவியில் எல்லோரையும் கிடுகிடுக்க வைக்கும் அதிகாரி, தன்னுடைய மேலதிகாரி முன் கூழைக் கும்பிடு போடுவார். அலுவலகத்தில் கீழ்மட்ட நிலை ஊழியர் வீட்டுக்குப் போனவுடன் பெரிய தர்பார் பண்ணுவார்.

இவையெல்லாம் சாதாரணமாக நடப்பவை. இணையம் வந்த பிறகு, ஒரு காலகட்டத்தில் பிளாக்குகள் வந்தன. பிளாக்குகள் இன்னொரு மாதிரியான நாடகமேடை. நம் ஒவ்வொருவருடைய எண்ணங்களுக்கும் வடிகாலாக இந்த பிளாக்குகள் அமைந்தன. மனித இயல்பு என்னவென்றால், நம்மை யாரும் பார்க்காதபோதுதான் அவரவர்கள் இயற்கைக் குணங்கள் வெளிவரும். இந்த பிளாக்குகளில் யாரும் தங்கள் சொந்த விவரங்களைக் கூறவேண்டிய அவசியம் இல்லை. அதனால் என்ன வேஷம் கட்டிக்கொண்டாலும் யாரும் கேட்க மாட்டார்கள். இது ஒரு மாபெரும் சௌகரியம். பிளாக்குகள் பிரபலமாக இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்யாரும் எதைப் பற்றியும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். இதுதான் மிகச்சிறந்த நடிப்பு ஆகும். எவ்வளவு சௌகரியம் பாருங்கள்

இதனால்தான் உலகமே ஒரு நாடக மேடை என்று சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். இப்போது நமது ஆன்மீகவாதிகளின் மிகப் பிரியமான கேள்விக்கு வருவோம்.

நான் யார்?” என்று கண்டுபிடித்தால் முக்தி அடையலாம் என்று காலம் காலமாகச் சொல்லி வருகிறார்கள்இந்த நாடக உலகில் எல்லோரும் வேஷம் போட்டுக் கொண்டிருக்கும் போது நான் யாரென்று எப்படி சொல்வது? என் மனைவிக்கு புருஷன் என்று சொல்வதா? என் மகனுக்கு நான் தகப்பன் என்று சொல்வதா? நான் ஒரு ஆபீசர், பியூன் இப்படி எதைச்சொன்னாலும் அது ஒரு பகுதி உண்மைதானே தவிர முழு உண்மையும் ஆகாது. ஆனால் நான் யார் என்று தேடு, நீ முக்தி அடைவாய், அல்லது ஞானம் பெறுவாய் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி நடைமுறைக்கு பொருந்தாத வேதாந்தக் கருத்துகளினால்தான் இந்து சமயம் சாதாரண நிலையில் உள்ள மக்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது