வியாழன், 28 ஜூலை, 2016

ஆர்க்கெஸ்ட்ராவில் எதுக்கு ஒருத்தன் ரெண்டு கையையும் ஆட்டிக்கொண்டு இருக்கிறான்.

      

இந்த இங்கிலீஷ்காரன் பாட்டுகள் ஆர்கெஸ்ட்ரா என்ற முறையில் நூற்றுக் கணக்கானவர்களை வைத்துக்கொண்டு பாடுகிறார்கள். பிரம்மாண்டமாகத்தான் இருக்கிறது. அதில் எல்லோரும் ஒரே சமயத்தில் அவரவர்கள் வாத்தியத்தை வாசிப்பார்களா, அல்லது ஒரு சிலர் மட்டுமே வாசித்துக் கொண்டு மற்றவர்கள் எல்லாம் டம்மியாக வாசிப்பது போல் பாவனை செய்வார்களா என்பது என்னுடைய தீராத சந்தேகம்.

ஏனென்றால் அத்தனை பேரும் ஒரே சமயத்தில் வாசித்தால் அது வெறும் சத்தமாகப் போய்விடுமே, சங்கீதம் வராதே  என்கிற எண்ணம்தான். இது ஒரு புறம் இருக்க, இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் ஒரு ஆள் டிப்டாப்பாக உடையணிந்து கொண்டு, கையில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுகிற மாதிரி கையையும் உடலையும் ஆட்டிக்கொண்டு நிற்கிறாரே அவர் எதற்கு அந்த மாதிரி சேஷ்டைகள் செய்து கொண்டு இருக்கிறார் என்று எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம்.

என் ஆப்த நண்பர்களில் சிலர் இந்த மாதிரி பாட்டுகள் கேட்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள். இந்த சந்தேகத்தை அவர்களிடம் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் என்னைப் பட்டிக்காட்டானைப் பார்ப்பது போல் பார்த்து விட்டு பிறகு சொன்னார்கள். அந்த ஆளுக்குப் பெயர் ம்யூசிக் கண்டக்டர். அவர்தான் இந்த ஆட்களையெல்லாம் இயக்குகிறார். அவருடைய கை அசைவுகளைப் பார்த்துத்தான் இந்த பாடகர்கள் எல்லாம் பாடவோ வாசிக்கவோ செய்வார்கள் என்றார்கள்.

அப்புறமும் எனக்கு இன்னொரு சந்தேகம் வந்தது. அப்படியானால் எல்லோரும் அவர்களுக்கு முன்னால் காகிதத்தில் எதையோ எழுதி வைத்துக் கொண்டு, அதைப் பார்த்துப் பார்த்து வாசிக்கிறார்களே, அது எதற்காக என்றேன். என் நண்பர்களுக்கு அதற்கு விளக்கம் அளிக்க முடியவில்லை. சரி, தொலையட்டும் என்று விட்டு விட்டேன். ஆனால் இப்போது தமிழ் சினிமா உலகத்திலும் இந்த மாதிரி பேஷன் ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒரு பிரபல இசையமைப்பாளர் இருக்கிறார். அவர் ஒரு பாட்டிற்கு ஏகப்பட்ட ஆட்களை வைத்துக் கொண்டு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தினார்.
   
               

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானவர்கள் பல விதமான வாத்தியங்களை வாசிக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் ஒருவன் கையை ஆட்டிக்கொண்டு இருக்கிறான். வாத்தியங்கள் வாசிக்கும் ஒருவனாவது அவரைப் பார்கிகிற மாதிரி எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவர்கள் அவர்கள் பாட்டுக்கு வாசித்துக்கொண்டு இருக்கிறார்கள். பாட்டு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இத்தனை பேரும் சேர்ந்துதான் அந்த இசையைக் கொண்டு வருகிறார்களா அல்லது சும்மா ஷோவுக்காக இத்தனை பேர்களை சேர்த்திருக்கிறார்களா என்பது எனக்கு இது வரை புரியாத ஒன்று.

அடுத்த விடியாவைப் பாருங்கள். ஒரு (அழகான) பெண் நாலைஞ்சு வாத்தியங்களுடன் இதே பாட்டைப் பாடுகிறாள். நன்றாகத்தான் இருக்கிறது.

                 

நம் கர்னாடக சங்கீதக் கச்சேரிகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் காலத்து வித்வான்கள் பாட்டு நோட்டை முன்னால் வைத்துக் கொள்கிறார்கள். அதை ஒரு கண்ணால் நோட்டம் விட்டுக்கொண்டேதான் பாடுகிறார்கள். ஆனால் அந்தக் காலத்து வித்வான்கள் பல மணி நேரம் கச்சேரிகள் செய்த போதும் எந்த விதமான குறிப்புகளையும் உபயோகப் படுத்தவில்லை. இந்தக் காலத்து வித்வான்களுக்கு மட்டும் ஏன் நோட்ஸ் தேவைப்படுகிறது?    அதேபோல் ஆங்கில இசை வித்வான்களுக்கு மட்டும் ஏன் நோட்ஸ் மற்றும் கண்டக்டர் தேவைப்படுகிறது என்பது ஒரு விடுகதையாகத்தான் தெரிகிறது. யாருக்காவது விடை தெரிந்தால் கூறலாம்.

இல்லை, உன் மரமண்டையில் இந்த நுணுக்கங்கள் எல்லாம் ஏறாது என்று நினைத்தால் அதையும் சொல்லி விடலாம். நான இந்த பிரச்சினையை மறந்து விட்டு வேறு பிரச்சினைகளை அலசுவதற்கு சரியாக இருக்கும்.

திங்கள், 25 ஜூலை, 2016

ஒரு தம்பதியருக்கு குழந்தைகள் அவசியமா?

                           
                                 Image result for couple
மனித இனம் தோன்றிய காலம் முதல் சமீப காலம் வரை குழந்தைகள் பெறுவது என்பது ஒரு குடும்பஸ்தனின் முக்கிய கடமையாக இருந்தது. இதை வம்ச விருத்தி என்று அழைத்தார்கள். கல்யாணமாகிய தம்பதியினரின் பெற்றோர்களை பார்ப்பவர்கள் விசாரிப்பது மருமகளுக்கு (மகளுக்கு) ஏதாவது விசேஷமா? என்பதாகத்தான் இருக்கும்.

குழந்தை இல்லாவிடில் அதை ஒரு துர்ப்பாக்கியமாகக் கருதினார்கள். அதற்குக் காரணம் நமது பாரம்பரியத்தில் பெற்றோரைப் பேணுதல் என்பதை ஒரு முக்கிய கடமையாகக் கருதினார்கள். அது ஒரு காலம்.

நிகழ் காலத்திற்கு வருவோம். இப்போது உயிருடன் இருக்கும் 60 வயதைத் தாண்டினவர்கள் எத்தனை பேரை அவர்களின் வாரிசுகள் பராமரிக்கின்றன? ஒரு ஐந்து சதவிகிதம் கூட இருக்காது என நினைக்கிறேன். காரணம் இக்காலத்தில் பொருள் ஈட்ட ஒவ்வொருவனும் பல ஜாலங்கள் புரிய வேண்டி இருக்கிறது.

தான் பிறந்த ஊரில் பிழைக்க வழி கிடைப்பதில்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கானடா என்று திரை கடலோடி திரவியம் சேர்க்கிறான். இந்த ஓட்டத்தில் அவன் பெற்றோரை எங்கே நினைப்பது? நினைத்தாலல்லவா பாரமரிப்பதற்கு?

ஆக மொத்தம் வயதான பிறகு மகன் அல்லது மகள் நம்மைக் காப்பாற்றுவாள் என்ற நடைமுறை ஒழிந்து விட்டது. தன் கையே தனக்குதவி என்ற முறையில் தன்னிடம் ஏதாவது பணம் சேர்த்து வைத்திருந்தால் ஒழிய, வயதானவர்கள் மானமாக வாழ வழி இல்லை.

நிலைமை இப்படியிருக்க, குழந்தைகளைப் பெறுவானேன்? அப்புறம் அவர்கள் நம்மைக் காப்பாற்றவில்லையே என்று புலம்புவானேன்? என்னுடைய யோசனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை இனிமேல் தம்பதிகள் விட்டு விடவேண்டும். அன்பு செலுத்த ஏதாவது உயிர் வேண்டுமென்றால் நாய், பூனை இப்படி ஏதாவது ஒரு பிராணியை எடுத்து வளர்த்தால் போதும். இனிமேலாவது ஜனங்கள் புத்தியாய்ப் பிழைத்தால் சரி.

வியாழன், 21 ஜூலை, 2016

நம் உணவு முறையை மாற்றவேண்டும்.


                             Image result for south indian food on banana leaf

இது நவீன உலகம். கற்காலத்திலிருந்து எவ்வளவோ கணக்கிலடங்காத முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.  மனிதன் தன்னுடைய சௌகரியத்திற்காக பல விதமான உபகரணங்கள் கண்டு பிடித்து உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறான். கற்காலத்தில் மனிதன் இயற்கையாக இருந்த மலைக் குகைகளில் வாழ்ந்தான். வெய்யில், மழை,  காற்று ஆகிய இயற்கை உத்பாதங்களுக்கு உட்பட்டு இருந்தான்.

இப்போது அவன் வசிக்கும் வசிப்பிடங்களைப் பாருங்கள். இயற்கை சலனங்கள் அவனை எவ்வகையிலும் பாதிக்காத மாதிரி தன் வசிப்பிடங்களை அமைத்திருக்கிறான். அவன் நினைத்த சீதோஷ்ண நிலையை ஒரு கையசைவில் கொண்டு வர அவனால் முடியும்.

முன்பு அவன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் போக அவனுடைய கால்களை மட்டுமே நம்பி இருந்தான். இப்போது எத்தனைவிதமான வாகனங்கள் வந்து விட்டன. அவற்றை உபயோகப் படுத்தி நாம் நம் வாழ்க்கையை எளிமைப் படுத்திக்கொண்டிருக்கிறோம் அல்லவா?

அது போல நம் உணவு முறையிலும் பல மாற்றங்கள் தேவை. இப்போது நம் தமிழ்நாட்டில் உள்ள சாதாரண குடும்பங்களை எடுத்துக்கொள்வோம். அதிலுள்ள பெண்கள் காலையிலிருந்து இரவு படுக்கப்போகும் வரையிலும் சமையலறையிலேயே வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். காலையில் பெட் காப்பியிலிருந்து ஆரம்பித்து இரவு படுக்கப்போகும் முன் குடிக்கும் பால் வரை எத்தனை விதமான உணவுகளைத் தயார் செய்கிறார்கள்?

இந்த அதீத வேலை அவசியமா?  தமிழர்களே, யோசியுங்கள். உதாரணத்திற்கு தமிழனின் ஸ்பெஷல் என்று சொல்லப்படும் இட்லியை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு தேவைப்படும் உழைப்பை சிறிது யோசித்துப் பாருங்கள். நல்ல அரிசியையும் நல்ல உளுந்தையும் சரியான விகிதத்தில் எடுத்து, தனித்தனியாக ஊறப்போட வேண்டும். பிறகு அவைகளை நன்றாக களைந்து சரியான அளவு தண்ணீர் விட்டு ஆட்டுக்கல்லில் ஆட்டவேண்டும். பிறகு இரண்டு மாவுகளையும் ஒரு பாத்திரத்தில் போட்டு சரியான அளவு உப்பு போட்டு கலக்கி வைக்கவேண்டும்.

இதை மாலை நேரத்தில் செய்யவேண்டும். இரவு முழுவதும் இந்தக் கலவையை பத்திரமாக வைத்திருந்தால் மறு நாள் காலை இந்த மாவு புளித்து பொங்கி வந்திருக்கும். இந்த புளிக்கும் விஷயம் இருக்கிறதே, இதைப் பற்றியே பல முனைவர் பட்டம் வாங்கும் அளவிற்கு ஆராய்ச்சி செய்யலாம்.

இதில் கைவாகு என்று ஒன்று இருக்கிறது. சிலர் கலக்கி வைத்தால்தான் இந்த மாவு நன்றாகப் புளிக்கும். இதை ஒருவருடைய கைவாகு என்று சொல்லுவார்கள். நன்றாகப் புளித்தால்தான் இட்டிலி மல்லிகைப் பூ மாதிரி வரும். சிலருடைய கைவாகுக்கு மாவு சரியாகப் புளிக்காது. அப்போது இட்லி பச்சை வாடை அடிக்கும். இட்லி சாப்பிட்ட திருப்தி வராது.

பிறகு இட்லிக்குத் தொட்டுக்கொள்ள சட்னி, மிளகாய்ப் பொடி + நல்லெண்ணை, சாம்பார், தொக்கு, இத்தியாதிகள். ஒவ்வொன்றிலும் டஜன் கணக்கில் வேறுபாடுகள்.

சட்னியில் தேங்காய்ச் சட்னி, வெங்காயச் சட்னி, மிளகாய்ச்சட்னி, பருப்புச் சட்னி, இப்படிப் பல வகைகள்.

பொடி வகைகளில் எத்தனை வகை? சொல்லி முடியாது. அதே போல் சாம்பார்கள். வெங்காய சாம்பாருக்கும் இட்லிக்கும் உள்ள பொருத்தம் வேறு எதற்கும் கிடையாது. என்ன இருந்தாலும் எங்க ஊர் அன்னபூர்ணா ஹோட்டல் சாம்பார் போல் எங்கும் இல்லை என்று நான் சொல்லுவேன். அந்தந்த ஊர்க்காரர்கள் தங்கள் தங்கள் அபிமான ஹோட்டல்களின் சாம்பார்தான் உயர்ந்தது என்று சொல்லிக்கொள்வார்கள்.

அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இட்லியும் கோழிக் குருமாவும் சாப்பிட்டால் தேவாம்ருதம் சாப்பிட்ட மாதிரி.

பாருங்கள், தமிழ் நாட்டின் ஒரு உணவிற்கே இத்தனை கதை இருக்கிறது. எல்லா உணவு வகைகளையும் பற்றி சொல்வதென்றால் சுமார் ஆயிரம் பதிவுகள் போட வேண்டு வரும்.

இன்று வாலிப வயதில் இருக்கும் நவ நாகரிக யுவதிகள் சமையல் கட்டையே பார்த்திராதவர்கள். அவர்களைப் போய் எனக்கு மல்லிகைப்பூ இட்லி சுட்டுக்கொடு என்று அவள் புருஷன் கேட்டால் அவள் என்ன சொல்வாள். ஒரு கிலோ மல்லிகைப்பூ வாங்கி வாருங்கள் என்பாள்.

ஆணைப் போல் பெண்ணும் இன்று பொருள் ஈட்டுகிறாள். ஆணும் பெண்ணும் சமம் என்று மேடைதோறும் முழங்குகிறோம். அப்படியானால் அவள் இன்னும் சமையலைக் கட்டிக்கொண்டு கஷ்டப்படவேண்டும்? இந்த பிரச்சினைக்கு இன்றைய இளைய தலைமுறையினர்தான் தீர்வு சொல்லவேண்டும்.

அமெரிக்கர்களும் அங்கு இருக்கும் இந்தியர்களும்  (இருவரும் வேலைக்குப் போகும் குடும்பங்களில்)  நான் அறிந்தவரையில் இப்போது சொல்லும் உணவு முறையை அனுசரிக்கிறார்கள்.

காலை உணவு:

முதலில்  ஒரு  பெரிய டம்ளர் பழரசம். இவைகள் ரெடியாகக் கிடைக்கின்றன. விலையும் மலிவு. பிறகு நான்கு ஸ்லைஸ் ரொட்டி. ரோஸ்ட் பண்ண ரோஸ்டர்கள் உண்டு.  ரொட்டியில் ஜாம் வெண்ணை, அசைவ உணவுகள் எதை வேண்டுமானாலும் வைத்து விழுங்கவேண்டியதுதான். பிறகு ஒரு டம்ளர் பால் அல்லது காப்பி.

காலை 11 மணிக்கு ஆபீசில் காப்பி ரூமில் காப்பி, பிஸ்கட். செலவை ஆபீசில் உள்ளவர்கள் பங்கிட்டுக் கொள்வார்கள்.

மதியம். ஆபீஸ் கேன்டீனில் ஒரு சேண்ட்விச் + ஒரு கோக்கோ கோலா

மாலை 4 மணி காப்பி, பிஸ்கட்

இரவு உணவு:

இதைத்தான் தயார் செய்ய கொஞ்சம் வேலை செய்ய வேண்டும். இந்தியர்கள் சப்பாத்தி அல்லது தோசை. அமெரிக்கர்கள் ஒரு அசைவ உணவு. கூடவே பல ரெடிமேட் சமாச்சாரங்கள்.

இந்த உணவு முறையில் நேரம் மிச்சமாவதோடு வேலையும் குறைவு.

நாமும் இந்த முறையை கடைப் பிடிக்கலாம்.  கணிணித் துறையில் இருப்பவர்கள் ஏற்கெனவே இந்த முறையை பின் பற்ற ஆரம்பித்திருக்கலாம்.

திங்கள், 18 ஜூலை, 2016

கல்யாணம் செய்து கொள்வது அவசியமா?


                               Image result for south indian marriage photography

ஒரு மனிதன் எதற்காக கல்யாணம் செய்து கொள்ளவேண்டும்? பழங்காலத்தில் மனுதர்மத்தில் சொன்ன கிரகஸ்தாசிரமத்தைப் பேணவா? கிரகஸ்தன் என்பவன் சந்நியாசிகளுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் உணவு கொடுக்க வேண்டியது தர்மம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

இன்றுள்ள சந்நியாசிகள் ஆயிரக்கணக்கான கிரகஸ்தர்களுக்கு அன்றாடம்  அன்னதானம் செய்யுமளவிற்கு வசதி படைத்தவர்களாக இருக்கிறார்கள். ஆகவே இதற்காக கிரகாஸ்திரமம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் இல்லை.

அடுத்ததாக சந்தான விருத்திக்காக கிரகாஸ்திரமம் தேவை என்று சொல்லப்படுகிறது. சந்தானம் எதற்கு. ஏதோ கடைசி காலத்தில் பெற்றோர்களைக் காப்பாற்றுவார்கள் என்பதற்காக சொல்லப்பட்டது. இன்றுள்ள சந்தானங்கள் முக்கால்வாசிப்பேர் அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா என்று தங்கள் பிழைப்பைப் பார்க்கப் போய்விடுகிறார்கள். அவர்கள் எங்கே வயதான காலத்தில் பெற்றோர்களைப் பராமரிக்கப் போகிறார்கள்? இதுவும் ஒரு காரணமில்லை.

வாழ்கிற காலத்தில் ஒரு துணை வேண்டும் என்று பலரும் சொல்கிறார்கள். அது ஒரு அவசியம்தான். ஆனால் அதற்காக கல்யாணம் என்ற கால் விலங்கு அவசியம்தானா? காலம் மாறிக்கொண்டு வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று வளர்ந்து வரும் கலாச்சாரத்தில் ஒரு ஆணும் பெண்ணும் திருமணமில்லாமலேயே ஒன்றாக வாழலாம் என்ற கலாச்சாரம் வளர்ந்து வருகின்றது.

இந்தக் கலாச்சாரம்தான் சிறந்தது. மனதிற்குப் பிடித்தால் சேர்ந்து வாழலாம். பிடிக்கவில்லையா, எந்தச் சிக்கலும் இல்லாமல் பிரிந்து விடலாம். ஆகவே இனி வரும்காலத்தில் கல்யாணம் என்பது ஒரு அவசியமில்லாத சடங்காக மாறப்போகிறது. இந்த மாற்றத்திற்கு அனைவரும் தயாராகிக்கொள்ளுங்கள்.

வெள்ளி, 15 ஜூலை, 2016

ஜோசியத்தை நம்பி வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்.


                                  Image result for நவ கிரகங்கள்       
நமது சூரிய மண்டலத்தின் அமைப்பைப் பற்றி அநேகர் அறிந்திருப்பார்கள். படிக்காதவர்கள் கூட "நவக்கிரகங்கள்" என்றால் புரிந்து கொள்வார்கள்.

சூரியன் ஒரு நட்சத்திரம். அது நிலையாக ஒரே இடத்தில் இருந்து கொண்டு இருக்கிறது. (இது உண்மையா, கற்பனையா என்று தெரியாது). சூரியனைச்  சுற்றி பல கிரகங்கள் உள்ளன. அவைகளில் பூமியும் ஒன்று. அனைத்து கிரகங்களும் சூரியனை பல வேகங்களில் சுற்றி வருகின்றன. இந்த வானவியல் உண்மைகள் எல்லாம் அரசல் புரசல்களாக எல்லோருக்கும் தெரியும்.

 இந்த கிரக நிலைகளைப் பற்றிய சாஸ்திரம் வானவியல் சாஸ்திரம். இந்த வானவியல் மிகவும் நுட்பமானது. கணித அடிப்படையில் அமைந்தது. மிகவும் துல்லியமாக கிரக நிலைகளைக் கணிக்கும் வல்லமை உள்ளது.

ஜோதிடம் என்கிற சாஸ்திரம் இந்த கிரக நிலைகளை அடிப்படையாக வைத்து தோன்றிய ஒரு கலை. வானவியல், கணக்குகளின் அடிப்படையில் துல்லியமாக அமைந்துள்ளதை வைத்து இந்த ஜோசியர்கள், ஜோதிட சாஸ்திரமும் வானவியலை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே இதுவும் கணிதத்தின் அடிப்படையிலேயே அமைந்தது. ஆகவே துல்லியமானது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். பெரும்பாலானோர் இந்த வாதத்தை நம்புகிறார்க்ள.

ஒரு மனிதன் இந்தப் பூமியில் பிறக்கும்போது இந்த நவக்கிரகங்களும் ஒவ்வொரு இடத்தில் இருக்கும். அதிலிருந்து வரும் கிரணங்கள்  அப்போதுதான் பிறந்த அந்த ஜீவனைப்  பாதிக்கும். இந்தப் பாதிப்பில்தான் ஒருவனுடைய விதி அடங்கியிருக்கிறது. இந்த கிரகங்கள் இடம் மாறும்போது அந்த ஜீவனின் நிலையும் மாறுகின்றது. இந்த மாற்றங்களுக்கு ஏற்பத்தான் அவனுடைய வாழ்க்கை அமைகின்றது.

சூரிய மண்டலத்திலுள்ள பல்வேறு கிரகங்களிலிருந்து கிரணங்கள் (Electro-magnetic Radiations) பூமிக்கு வருகின்றன என்பது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆகவே ஜோதிடர்கள் இப்படிச் சொல்லும்போது பெரும்பாலான மக்கள் "ஆஹா, ஜோதிடம் ஒரு உண்மையான விஞ்ஞான சாஸ்திரம்தான்" என்று நம்பி விடுகிறார்கள்.

சரி, நடைமுறைக்கு வருவோம். முதல் குறிப்பு - கிரகங்களின் நிலை ஒரு ஜாதகனின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும் என்பது வெறும் யூகமே. இதற்கு எந்தவிதமான விஞ்ஞான ஆதாரங்களோ அல்லது நடைமுறை ஆதாரங்களோ கிடையாது. ஒரு ஜாதகனின் கடந்த கால வாழ்க்கையை துல்லியமாகச் சொல்லிய பல ஜோதிடர்கள் உண்டு. ஆனால் அந்த ஜாதகனின் எதிர்காலம் பற்றி அப்படி துல்லியமாகச் சொன்னவன் எவனுமில்லை.

ஜோதிடர்கள் தங்கள் வாக்குச் சாதுர்யத்தினால் மக்களை வசப்படுத்துகிறார்களே தவிர கிரகங்களின் நிலைக்கும் ஜாதகனின் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பை அறிந்தவன் எவனுமில்லை. மக்கள் ஜோதிடத்தின் பேரில் வைத்திருக்கும் தங்கள் அதீத நம்பிக்கையினால் ஜோதிடன் சொல்வது அப்படியே நடக்கும் என்று நம்பி தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள்.

குறிப்பாக கல்யாணத்திற்காக ஜோசியம் பார்க்கும் பல பெற்றோர்கள் ஜோசியனின் வார்த்தைகளை நம்பி தங்கள் வாரிசுகளின் கல்யாணங்களைத் தள்ளிப் போடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த வாரிசுகளின் வயது அதிகமாகி அவர்களுக்கு நல்ல வரன் அமையாமல் போகிறது. ஒவ்வொரு வீட்டிலும் இந்த மாதிரி அவலங்கள் அதிகமாக இருக்கின்றன.

ஒவ்வொருவரும் தாங்கள்தான் சிந்தித்து இந்த அதீத நம்பிக்கையை கைவிட வேண்டும்.

திங்கள், 11 ஜூலை, 2016

இனி வீட்டிற்கு சமையல் அறை தேவையில்லை.

             
                        Image result for சமையல் அறை

இது என்னய்யா அநியாயமாக இருக்கு, வீட்டிற்கு சமையல் அறை இல்லாமல் எங்கே சமைப்பார்கள், எப்படிச் சாப்பிடுவார்கள் என்று நீங்கள் கேட்டால் உங்களுக்கு 60 வயதிற்கு மேல் ஆகிவிட்டது என்று அர்த்தம். உங்கள் வீட்டில் கல்யாண வயதில் ஒரு பையன் இருக்கிறான் என்றால் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. இந்தப் பதிவு உங்களுக்காகத்தான்.

முன்பெல்லாம், அதாவது 30 - 40 வருடத்திற்கு முன் ஒரு பையனுக்கு பெண் பார்க்கப் போனால் பையனுடைய அம்மா கேட்கும் முதல் கேள்வி "பொண்ணுக்கு சமையல் செய்யத்தெரியுமா" என்பதாகத்தான் இருக்கும். இன்று பெண் பார்க்கப்போகும்போது இந்தக் கேள்வியைக் கேட்டால் "என்ன, காட்டுமிராண்டி ஜன்மங்களாய் இருக்கிறார்கள்" என்ற கேள்விக்கு புரோக்கர் பதில் சொல்ல வேண்டி வரும்.

இப்படி இரண்டு மூன்று பார்ட்டி வந்து போனபின் புரோக்கருக்கு ஒரு புது அறிவுரை கொடுக்கப்படும். "இந்த மாதிரியெல்லாம் கேள்வி கேக்கற பார்ட்டிகளை இனிமேல் இங்கே கூட்டி வராதே" என்று சொல்லி விடுவார்கள். பொண்ணு என்ன படிச்சிருக்கா, என்ன வேலை பாக்கறா இந்த மாதிரி கேள்விகள்தான் அனுமதிக்கப்பட்டவை.

பெண்ணும் பையனும் ஒருவருக்கொருவர் பிடித்திருந்தால், தனியாகப் பேசுவார்கள். அப்புறம் இருவரும் ஓகே சொன்னால் மேற்கொண்டு விவரங்கள் பேசுவார்கள். இந்த மாதிரி பேசும்போதே பெண்ணின் அம்மா பெருமையாகச் சொல்லிக்கொள்வாள். என் பொண்ணை சமையலறைப் பக்கமே நான் விட்டதில்லை, என்பாள். பையனுடைய அம்மா, சீர் வரிசையாக பெண்ணுக்கு என்ன என்ன செய்வார்க்ள என்ற கணக்கிலேயே மூழ்கி இருப்பாள். பெண்ணின் அம்மா சொன்ன வார்த்தையைக் கேட்டிருக்க மாட்டாள்.

கல்யாணம் தடபுடலாக நடந்து முடிந்தது. பெண்ணிற்கு 200 பவுன் நகை. மாப்பிள்ளைக்கு ஒரு 80 லட்சத்தில் பிஎம்டபிள்யூ கார். பையனோட அம்மாவிற்கு 20000 ரூபாயில் பட்டுப்புடவை. வெள்ளிப் பாத்திரங்கள், இத்தியாதி.  அம்மாவிற்கு வாயெல்லாம் பல். சம்பந்தியம்மா செய்திருக்கும் சீர் வரிசைகளை தன்னோட சொந்தக்காரர்களிடம் சொல்லிச் சொல்லி பெருமைப் பட்டுக்கொண்டாள்.

கல்யாணம் முடிந்தது. தம்பதிகள் பதினைந்து நாள் யூரோப்பிற்கு ஹனி மூன் போய் வந்தார்கள். ஊருக்குத் திரும்பின பின் இருவரும் பிஎம்டபிள்யூ காரில் வேலைக்குப் போய்வந்தார்கள். மாமியார்க்காரி வழக்கம்போல் சமையல் செய்து வந்தாள். இருவரும் திவ்யமாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். பத்து நாள் ஆயிற்று, பதினைந்து நாள் ஆயிற்று. மருமகள் சமையல் கட்டுக்கு வருவாள் வருவாள் என்று மாமியார்க்காரி எதிர் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவள் அந்தப் பக்கம் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை.

இதற்கிடையில் சம்பந்தி அம்மாள் வந்தாள். அவளிடம் என்ன உங்க பொண்ணு சமையல் கட்டுப் பக்கமே வரமாட்டேங்கறா அப்படீன்னு சொன்னாள். அதுதான் நான் நீங்க பொண்ணு பார்க்க வரப்போவே சொன்னேனே, என் பொண்ணு சமையல் அறைப் பக்கமே வரமாட்டேன்னு, நீங்க அதைக் கேக்கலியா என்றாள். மாமியார்க்காரிக்கு தூக்கி வாரிப்போட்டுது. அதெல்லாம் எங்க வீட்டிற்கு சரிப்படாது, நீங்க ஒங்க பொண்ணைக் கூட்டிக்கிட்டுப் போய் ஒரு மாசத்தில சமையல் சொல்லிக்கொடுத்து அனுப்புங்கோ என்றாள்.

அந்த அம்மாவும் அப்படியே பெண்ணையும் மாப்பிளையையும் கூட்டிக்கொண்டு போனாள். அடுத்த வாரம் இரண்டு பேரும் தனிக்குடித்தனம் போய் விட்டதாகத் தகவல் வந்தது. சரி, இரண்டு பேரும் எப்படி சாப்பிடுகிறார்கள் என்று மாமியார்க்காரி விசாரித்தாள். விசாரித்ததில் தெரிந்தது.

பையனுக்கு காப்பி போடத்தெரியும். காலையில் எழுந்த தும் காப்பி போட்டு அவனும் அவன் பெண்டாட்டியும் குடிக்கிறார்கள். காலையில் அவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு மாமி இட்லி சுட்டுக் கொடுக்கிறாளாம். அங்கு ஆளுக்கு நாலு இட்லி வாங்கி சாப்பிட்டு விட்டு இருவரும் ஆபீஸ் போய்விடுவார்களாம்.

மதியம் ஆபீஸ் கேன்டீனில் சாப்பாடு. இரவு வீட்டிற்கு வந்ததும் ஏதாவது ஓட்டலுக்குப் போய் அங்கு இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து படுத்துக்  கொள்வார்களாம். ஞாயிற்றுக் கிழமை லீவு அன்று இருவரும் பொண்ணோட அம்மா வீட்டிற்குப் போய் விடுவார்களாம்.

இப்படி வாழ்க்கைதான் இனிமேல் நடக்கப் போகிறது. அப்புறம் வீட்டில் எதற்கு சமையல் அறை வைக்கவேண்டும்? தேவையில்லையே. செலவும் மிச்சம்.

வியாழன், 7 ஜூலை, 2016

ஆனைமலை மாசானியம்மன்

                            Image result for மாசானியம்மன்

எனக்கு முதன்முதலில் வேலைக்கு ஆர்டர் வந்த ஊர் ஆனைமலை என்று முன் பதிவுகளில் சொல்லியிருக்கிறேன். நான் தனியாளாக இருந்தபடியால் அங்கு ஒரு வீட்டின் முன் பக்கம் தனியாக இருந்த ஒரு அறையில் வாடகைக்கு இருந்தேன். அதே வீட்டில்தான் அந்த ஊர் விவசாய டெமான்ஸ்ட்ரேட்டரும் குடியிருந்தார்.

நான் குடியிருந்த வீடு இப்போதும் இருக்கிறது. அதற்கு ஒரு அடையாளம் சொல்கிறேன். தெரிந்து கொள்ளுங்கள். பொள்ளாச்சியிலிருந்து ஆனைமலை மாசானியம்மன் கோவில் போகவேண்டுமென்றால் ஆனைமலை போய் ஒரு இடத்தில் இடது புறம் திரும்ப வேண்டும். அப்படித் திரும்பும்போது இடது புறம் இருக்கும் முதல் வீடுதான் நான் குடியிருந்த வீடு.

அப்போது அந்தத் தெரு சாதாரணமாகத்தான் ஆள்  நடமாட்டமே  இல்லாமல்தான் இருந்தது. இப்போது இருக்கும் பிரபல  மாசானியம்மன் கோவில் அப்போது இருக்கும் இடமே தெரியாமல் இருந்தது. உள்ளூர்காரர் ஒருவர் இங்கே ஒரு கோவில் இருக்கிறது பார்க்கலாம் வாருங்கள் என்று ஒரு நாள் கூட்டிக்கொண்டு போனார்.

ஒரு நீண்ட சதுரக் கட்டிடம். ஓடு போட்டது. 40 அடிக்கு 20 அடி இருக்கும். நீளமாக இருக்கும் இரண்டு சைடுகளிலும் மூன்று மூன்று கதவுகள். கதவுகளில் மேல் பாதியில் வெறும் கம்பிகள் மட்டுமே இருந்தன. அதன் வழியாக உள்ளே பார்க்கலாம். உள்ளே தென்வடலாக ஒரு சுதையினால் ஆன ஒரு பெரிய உருவம் படுத்துக் கிடந்தது.

கட்டிடத்தைச் சுற்றிலும் புதர் மண்டிக்கிடந்தது. அந்தச் சிலைக்கு யாரும் பூசை செய்த மாதிரித் தெரியவில்லை. அந்த இடத்திற்கு யாரும் வந்து போகிற மாதிரியும் தெரியவில்லை. சரி ஏதோ ஒரு கிராம தேவதை கோவில் பராமரிப்பின்றி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

பல வருடங்கள் கழித்து திடீரென்று ஆனைமலை மாசானியம்மன் கோவில் பிரபலமாகி விட்டது. ஒரு தடவை அந்தப் பக்கம் போனபோது நான் போய்ப்பார்த்தேன். நான் முன்பு பார்த்ததிற்கும் இப்போது இருக்கும் நிலைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. ஜனங்கள் கூட்டம் அலை மோதியது. அம்மனைப் பார்க்க பெரிய வரிசை, ஒரு மைல் தூரத்திற்கு நின்று கொண்டிருந்தது.

நான் மலைத்துப் போய்விட்டேன். கோவிலின் சுற்றுப் புறம் முழுவதும் கடை கண்ணிகள், ஓட்டல்கள், பூஜை சாமான் கடைகள் என்று வியாபித்திருந்தன. ஏறக்குறைய நூறு இருநூறு குடும்பங்கள் அந்தக் கோவிலை நம்பிப் பிழைத்துக்கொண்டிருந்தன. இந்த மாற்றம் எப்படி வந்தது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அந்தக் கோவிலின் நடைமுறையைக் கவனித்தேன். மக்கள் தங்கள் தனிப்பட்ட கோரிக்கைகளை இந்த அம்மனிடம் வைத்தால் அவை நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் வருவதைக் கவனித்தேன். சாதாரணக் கோரிக்கைகளைக் காகித த்தில் எழுதி அங்குள்ள அர்ச்சகர் மூலமாக அம்மனிடம் சேர்க்கப்பட்டு விட்டால் அந்தக் கோரிக்கைகள் நிறைவேறி விடும் என்று நம்புகிறார்கள். இந்த மாதிரி கோரிக்கைகளை எழுதிக்கொடுக்க அங்கே ஏகப்பட்ட புரோக்கர்கள் சுற்றிக்கொண்டு இருப்பதைப் பார்த்தேன்.

இரண்டாவது கோரிக்கை முறை கொஞ்சம் விநோதமானது. உங்கள் வீட்டில் ஏதாவது பொருள் திருட்டுப்போய் விட்டால் இந்தக் கோவிலுக்கு வந்து அங்கிருக்கும் ஆட்டுக் கல்லில் கொஞ்சம் மிளகாயை நன்றாக அரைத்து அங்கே இருக்கும் ஒரு கல்லின் மீது தடவி விட்டால் அந்த பொருளைத் திருடியவனுக்கு உடம்பு முழுவதும் மிளகாயை அரைத்துப் பூசிய மாதிரி எரிச்சல் வந்து விடுமாம். என்ன செய்தாலும் அந்த எரிச்சல் போகாதாம். அந்தத் திருடின பொருளை எடுத்த இடத்தில் திரும்ப வைத்தால்தான் அந்த எரிச்சல் போகுமாம்.

இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற அங்கே நாலைந்து ஆட்டுக்கல்கள் போடப்பட்டிருந்தன. பல பெண்கள் அவைகளில் மிளகாய் அரைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். பரவாயில்லையே, மாசானியம்மன் போலீஸ் வேலையும் பார்க்கிறதே என்று நினைத்துக்கொண்டேன். இப்படியாக ஒரு கோவில் பிரபலமானதை என் வாழ்நாளில் நேரில் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது அந்த மாசானியம்மன் அருளால்தான் என்று நம்புகிறேன்..

செவ்வாய், 5 ஜூலை, 2016

ஆண்களுக்கான உடல் நலக் குறிப்பு


                                Image result for ஆண்கள்

ஆண்களுக்கு மட்டும். பெண்கள் படிக்க வேண்டாம்

மனிதனுக்கு பல உடல் நலக்குறைவுகள் ஏற்படுவது இயற்கை. அதில் சிலவற்றை உடனடியாக க் குணப்படுத்த வேண்டியது அவசியம். இதற்குத் தான் இப்போது வீதிக்கு இரண்டு மருத்துவர்கள் இருக்கிறார்களே?

சில உடல் உபாதைகள் உடனடியாகக் கவனிக்க வேண்டியதில்லாதவை. உதாரணத்திற்கு அஜீரணம், மலச்சிக்கல், சளிக்காய்ச்சல், தலைவலி முதலானவை. இரண்டு நாள் சும்மா இருந்தால் இவை போய்விடும். இவைகளுக்குப் பல கை வைத்தியங்கள் உள்ளன. அவைகளில் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

சில உபாதைகள் நீங்காமல் இருந்து கொண்டு தொந்திரவு கொடுக்கக் கூடியவை. இவைகளில் டாக்டரிடம் உடனடியாகக் காட்ட முடியாதவை சிலது உண்டு. அதுவும் வயதானவர்களுக்கு வரக்கூடிய உபாதைகள் இவை. அவைகளில் ஒன்று இங்கே ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறேன்.

இந்த உபாதைக்கு இணையத்தில் நல்ல யோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. டாக்டரிடம் செல்லாமல் நாமே கடைப்பிடிக்கக் கூடியவை. (டாக்டர்கள் மன்னிக்கவும்) இந்த யோசனைகளை அனுசரித்து நான் பலன் பெற்றபடியால் இதை இங்கே பதிவு செய்கிறேன்.


What is jock itch? What does jock itch look like?

Jock itch is a common, itchy rash of the groin. It can produce a very intense itch and is associated with a red or pink rash involving the groin folds and genitals. Jock itch is primarily a skin condition in men because of anatomic structures unique to males, the male genitalia.
The symptoms of jock itch may come and go, and many cases of jock itch resolve spontaneously without any treatment. Jock itch is primarily seen in the groin, although it may spread to the inner thighs, genitals (including penis, scrotum, labia, and vaginal opening), and anus.
While jock itch is frequently noted in otherwise healthy people, those with diabetes and/or obesityare more susceptible. Possible causes include irritation from tight or abrasive underwear, excess moisture, sweating, skin rubbing or friction, allergic problems, fungal infection, Candida (yeast) infection, and bacterial overgrowth.
Treatment of fungal-related jock itch may include one or a combination of antifungal creams and, rarely, antifungal pills. Treatment of jock itch that is not caused by fungus involves proper groin hygiene, keeping the area clean and dry, and washing frequently with gentle soap and water (especially after sweating or exercise).
Jock itch causes a symmetrical red or pink rash on the sides of the groin folds. There may be a dry, scaly rash or a collection of small, pinpoint red or pink bumps at each hair follicle
Certain groups of people may be more prone to jock itch. Patients withdiabetes, obesity, and those with a compromised immune system such as from HIV/AIDShepatitis, chronic illnesses, cancer, systemicchemotherapy, immunosuppressive drugs such as prednisone, and those on biologic immune-system-modifying drugs such as infliximab (Remicade) oretanercept (Enbrel) may be more prone to jock itch.



திங்கள், 4 ஜூலை, 2016

நான் வேலையில் சேர்ந்த கதை.

 

1956 ம் வருட சுதந்திர தின நாள் என் வாழ்க்கையின் ஒரு முக்கியமான நாள். அன்றுதான் நான் படித்து முடித்தபின் முதல் முதலாக வேலைக்குப் போன நாள். எனக்கு வேலைக்கான உத்திரவு வந்து பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனாலும் என் மேலதிகாரி நான் வேலையில் உடனே சேருவதற்கு அனுமதிக்கவில்லை. அவர் படித்த முடித்த காலத்தில் இவ்வாறு வேலை சுலபமாக க் கிடைக்கவில்லை. அது காரணமாக இப்போது படித்து வருபவர்களுக்கு உடனே வேலை கிடைப்பதைக் கண்டு வயிற்றெரிச்சல் பட்டார்.

வேலைக்குச் சேருவதற்கான கடைசி நாளான ஆகஸ்ட் 16 ம் தேதி பிற்பகலில் சேர அனுமதித்தார். நான் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். அரசு உத்தியோகத்தின் நெளிவு சுளிவுகளைச் சொல்லித்தர எனக்கு யாருமில்லை. ஆனால் நான் ஒரு விஷயத்தில் ஆழமான கருத்து கொண்டிருந்தேன். இந்த உத்தியோகம் எனக்கும் என் குடும்பத்திற்கும் மிக அவசியம். என் முட்டாள்தனத்தினால் இந்த வேலையை நான் போக்கிக்கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

அந்த மேல் அதிகாரி வேலையைச் செய்வது எப்படி என்று சொல்லிக்கொடுத்ததே இல்லை. நானாகத் தெரிந்து கொண்டு செய்யும் வேலையிலும் குற்றம் கண்டுபிடிப்பதே அவர் வேலை. இப்படியாக இரண்டு வருடம் அவரிடம் வேலை பார்த்தேன். ஆனால் இந்த இரண்டு வருடத்தில் அரசு வேலைகளை நன்றாகக் கற்றுக்கொண்டு விட்டேன். எந்த வேலையானாலும் பயமில்லாமல் எதிர்கொள்ளும் தைரியம் வந்து விட்டது. கால நேரம் பார்க்காமல் உழைக்கும் மன தைரியமும் வந்து விட்டது. இந்த அனுபவம் பிற்காலத்தில் பல சவால்களைச் சந்திக்க உதவியது.

இப்படி இருக்கையில் நான் படித்த கல்லூரியில் 1958 ம் வருடம் முதுகலை வகுப்புகள் ஆரம்பித்தார்கள். அப்போது என் மேல் அதிகாரி அந்தப் படிப்பிற்கு விண்ணப்பித்து அதில் சேர்ந்தார். அப்போது அவருக்கு 18 வருட அனுபவம். கல்யாணமாகி நாலைந்து குழந்தைகள். இதைக்கண்ட எனக்கும் நானும் இந்தப் படிப்பில் சேர்ந்தால் என்ன என்று தோன்றியது. அது மட்டுமல்ல. இந்த ஆள் படித்து முடித்துவிட்டு திரும்பும்போது நான் இந்த இடத்தில் இருக்க க்கூடாது என்று முடிவு செய்தேன். அடுத்த வருடம் நானும் விண்ணப்பித்தேன். இடம் கிடைத்தது. முதுகலை வகுப்பில் சேர்ந்தேன்.

இந்த மாதிரி ஒரு மிக கடுமையான மேலதிகாரியிடம் முதன் முதலில் வேலை பார்த்ததில் நான் பெற்ற அனுகூலங்கள்.

1. எந்த வேலையையும் பயமில்லாமல் எதிர்கொள்வது.

2. கால நேரம் பார்க்காமல் வேலை பார்ப்பது.

3. மேல் படிப்பிற்குச் சேர்ந்தது.

இப்படி நான் அப்போது முதுகலை வகுப்பில் சேர்ந்ததினால்தான் என் பிற்கால உத்தியோக வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைந்தது. ஆகவே அந்த முதல் மேலதிகாரியை அவ்வப்போது நன்றியுடன் நினைத்துக் கொள்வேன்.