புதன், 29 ஏப்ரல், 2015

வயதாவதின் நன்மைகள்.

                                       Image result for மூன்று குரங்குகள்

நேற்றைய பதிவில் மகாத்மா காந்தி மூன்று குரங்குகளின் பொம்மை வைத்திருந்தார் என்று பார்த்தோம். அதில் ஒன்று கண்ணை மூடிக்கொண்டும், இன்னொன்று காதைப் பொத்திக்கொண்டும், மற்றொன்று வாயைப் பொத்திக்கொண்டும் இருக்கும்.

அந்த பொம்மைகளின் தாத்பரியம் என்னவென்றால் தீயதைப் பார்க்காதே. தீயதைக்கேட்காதே, தீயதைப் பேசாதே என்பதாகும். ஒருவன் நல்லவனாக வாழ அவன் இந்தக் கொள்கைகளை அனுசரிக்கவேண்டும்.

ஆனாலும் இளமை வேகத்தில் இதையெல்லாம் யோசித்து அனுசரிக்கும் பொறுமை பெரும்பாலானோருக்கு இல்லை. மனிதனைப் படைத்த கடவுள் இதற்கு ஒரு நல்ல வழியை ஏற்படுத்தியுள்ளார். இளமையில் அவன் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும், வயதான பின்பாவது அவன் இந்தக் குற்றங்களைச் செய்யாமல் போகும் வழிக்குப் புண்ணியம் சேர்த்துக்கொள்ளட்டும் என்று சில ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்.

முதலில் கண்களை எடுத்துக் கொள்வோம். வயதாக வயதாக கண் பார்வை மங்குகிறது. இது நம்மைப் படைத்தவன் ஏற்பாடு. இதை மனிதன் தன்னுடைய மூளூயினால் எப்படியோ ஓரளவு சரி செய்து காலத்தை ஓட்டுகிறான். ஆனாலும் கடைசி காலத்தில் அவனுக்கு முழுவதுமாக பார்க்க முடிவதில்லை. இப்போது அவனால் கெட்டது எதையும் பார்க்க முடியாதல்லவா?

இரண்டாவது காதுகளை எடுத்துக்கொள்வோம். அறுபது வயதானால் எல்லோருக்கும் காது கேட்கும் திறன் குறையும். நல்ல புண்ணியம் செய்த ஒரு சிலருக்கு சீக்கிரம் காது மந்தமாகி விடும். (காது நன்றாகக் கேட்கும் வயதானவர்கள் புண்ணியம் குறைவாக செய்திருக்கிறார்கள் எனக்கொள்க.) இதனால் அவர்கள் தீயவைகளைக் கேட்கும் வாய்ப்பு குறைந்து போகிறது.

மூன்றாவது வாய். இது இரண்டு வகைகளில் மனிதனுக்கு எதிரி. நாக்கு இளம் வயதில் ருசியை நன்கு அறிந்து கொள்வதினால் கண்டதையும் சாப்பிடத் தோன்றும். இரண்டாவது வாய் நன்றாகப் பேச முடிவதால் கண்டதையும் பேசத் தோன்றும். வயதானவர்களுக்கு நாக்கு ருசி போய்விடும். எதைத் தின்றாலும் மண்ணைத் தினபது போலவே இருக்கும். அதனால் கண்டதைச் சாப்பிட முடியாது. அடுத்து பேச்சு குழறும். இதனால் இவர்கள் பேசுவதைக் கேட்க ஆட்கள் இருக்க மாட்டார்கள். இப்படி இவர்கள் தீயதைப் பேச மாட்டாமல் கடவுள் ஆக்கி விட்டார்.

ஆகவே மனிதர்களே, நீங்கள் இயற்கையோடு ஒத்துழைத்தீர்களேயானால் ஆண்டவன் உங்களுக்கு நற்கதி அளிக்கக் காத்துக்கொண்டிருக்கிறான் என்பதை அறியவும்.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

தொலைக்காட்சி தொடர்களும் தமிழ்க் குடும்பங்களும்.

மகாத்மா காந்தி மூன்று குரங்குகளின் சிலைகளை வைத்திருந்ததாகச் சொல்லுவார்கள்.
                                Image result for மூன்று குரங்குகள்
அவை குறிப்பிடுபவை என்னவென்றால், தீயதைக் கேட்காதே, தீயதைப் பார்க்காதே, தீயதைப் பேசாதே என்பதிகும் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

மனதனாகப்பட்டவன் நல்லவனாக வாழ இந்தப் பழக்கங்கள் வேண்டும் என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்வார்கள்.

ஆனால் இன்று தமிழ்நாட்டில் நடப்பது என்ன? (மற்ற மாநிலங்களைப் பற்றி எனக்கு நேரடி அனுபவம் இல்லையாதலால் அதைப்பற்றி சொல்ல விரும்பவில்லை)

தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான நடுத்தர வர்க்கப் பெண்கள் குடும்பத்தலைவிகளே. அதாவது வீட்டை மட்டும் கவனித்துக்கொள்பவர்களே. இவர்களுக்கு காலைச் சிற்றுண்டி முடித்து விட்டு மதியச் சாப்பாட்டையும் செய்து விட்டால் பகல் 11 மணியிலிருந்து மாலை 8 மணி வரை வேறு வேலை இல்லை. தொலைக்காட்சிப் பெட்டிகள் வராத காலத்தில் அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்களுடன் ஏதோ பேசுவார்கள் அல்லது வீட்டில் இருக்கும் ஏதோ வேலைகளைச் செய்வார்கள்.

இப்போது வீட்டு வேலைகளைச் சுலபமாக்க பலவித உபகரணங்கள் வந்து விட்டன. குடும்பத் தலைவிகளின் வேலைகள் வெகுவாகக் குறைந்து விட்டன. தவிர தொலைக்காட்சிப்பெட்டியும் எல்லோர் வீட்டிலும் வந்து விட்டது. அப்படியும் சிலருக்கு இந்தப் பெட்டியை வாங்க வசதியில்லாக் காரணத்தினால் அரசே இலவசமாகத் தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொடுத்து அதற்கு வேண்டிய மின்சாரத்தையும் இலவசமாகவே கொடுக்கிறது.

தொலைக்காட்சிப் பெட்டி வந்த காலத்தில் அதில் இவ்வளவு நிகழ்ச்சிகள் ஒளி பரப்பாகவில்லை. இவ்வளவு தொலைக்காட்சி நிறுவனங்களும் இல்லை. அப்பொழுது மக்கள் மிகவும் விரும்பிப் பார்த்த நிகழ்ச்சி ஒலியும் ஒளியும் என்ற நிகழ்ச்சிதான். சினிமாவில் வந்த பாட்டுகளை ஒளிபரப்புவார்கள். பிறகு தொடர் நாடகங்கள் வந்தன. அவைகள் 13 வாரம், வாரத்திற்கு ஒரு நாள் வீதம் ஒளிபரப்பாகும்.

அந்த தொடர் நாடகங்களில் ஒரு கதையும்  வாழ்க்கைக்கான ஒரு நீதியும் இருக்கும். ஒரு சமயத்தில் ஒரு தொடர் நாடகம் மட்டும்தான் ஒளிபரப்பாகும். அப்போது இருந்தது அரசு தொலைக்காட்சி நிறுவனமான "தூர்தர்ஷன்" மட்டுமே. இதனால் மக்ளுக்கு அதிகப் பாதிப்பு ஏற்படவில்லை.

பிறகு அதில் மகாபாரதம் ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள். இதுதான் முதன் முதலாக ஒளிபரப்பப்பட்ட இன்றைய மெகா சீரியல்களின் முன்னோடி. இதற்கு அனைத்து தரப்பு மக்களிடமும் இருந்து ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.

அப்போதுதான் விளம்பரங்களில் நன்றாகக் காசு பார்க்கலாம் என்ற உண்மை தெரிந்தது. அரசு பணம் வாங்கிக்கொண்டு பலருக்கு தொலைக்காட்சி நடத்த உரிமை வழங்கினார்கள். தொலைக்காட்சி நிறுவனங்கள் புற்றீசல் போல் பெருகின. விளம்பரங்கள் பெருகின. காசு சேர்ந்தது.  ஆனால் மக்களை இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வைப்பது எப்படி? இந்தப் பிரச்சினைக்கு யாரோ ஒரு மகானுபாவன் கண்டு பிடித்த தீர்வுதான் இன்று அனைத்து தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பிக்கொண்டு இருக்கும் மெகா சீரியல்கள்.

பெண்கள், குறிப்பாக தமிழ்நாட்டு நடுத்தர வர்க்கப் பெண்கள் இவைகளுக்கு அடிமையாகிப் போனார்கள்.  இதனால் விளைந்த விளைவு என்னவென்றால் பல குடும்பங்களில் அமைதி குலைந்து போனது.

நான் இந்த சீரியல்களைப் பார்ப்பதில்லை. இருந்தாலும் வீட்டில் மற்றவர்கள் பார்க்கும்போது நிகழ்ச்சிகள் அவ்வப்போது காதில் விழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. சன் தொலைக்காட்சியில் மாலை 7.30 மணியிலிருந்து 9 மணி வரை மூன்று மெகாத்தொடர்கள் ஒளி பரப்பாகின்றன. இவைகளைத்தான் என் வீட்டில் பார்க்கிறார்கள்.

 இந்தத் தொடர்களில் நான் கவனித்தவை. ஏறக்குறைய எல்லாத் தொடர்களின் கதையும் ஒரே மாதிரித்தான் இருக்கின்றன. கதாநாயகன், நாயகி, அவர்களைச்சுற்றி வழக்கமாக வரும் உப-பாத்திரங்கள் போக, ஒரு வில்லனோ அல்லது வில்லியோ அல்லது இருவருமோ கட்டாயமாக இருக்கிறார்கள்.

இந்த வில்லன் அல்லது வில்லி கூட்டம் இருக்கிறதே, அவர்கள் பண்ணும் அக்கிரமங்கள் சொல்லில் அடங்கா. ஆனாலும் இந்தத் தொடர்களின் டைரக்டர்கள் திறமைசாலிகள்தான். இந்த வில்லன் வில்லி பாத்திரங்களை அவ்வளவு மோசமாக சித்தரிக்க அவர்களால்தான் முடியும். இதைப் பார்க்கும் நம் குல விளக்குகள் அப்படியே உணர்ச்சி வசப்பட்டு கதாநாயகியின் பேரில் அனுதாபம் பொங்கி வழியும். கண்ணீர்க் கடலில் மூழ்கி விடுவார்கள்.

இந்த தொடர்களின் வில்லிகள் எங்காவது நாலு பெண்கள் இருக்குமிடத்திற்கு
நேரில் வந்தால் அவர்களை இந்தப் பெண்கள் கடித்துக் குதறிக் கொன்றே விடுவார்கள். அவ்வளவு ஆத்திரம் அந்தப் பெண்களின் பேரில் இருக்கிறது. இந்த வில்லி வேடத்தில் நடிக்கும் நடிகைகள் தனியாக வெளியில் நடமாட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

விஷயம் இத்தோடு முடிந்து விட்டால் வேறு பிரச்சினை இல்லையே? ஆனால் நான் சொல்ல வந்த விஷயமே வேறு. இந்த குடும்பத்தலைவிகள் இந்த தொடர்களைப் பார்த்து அவைகளின் வசனங்களை நன்கு மனதில் பதிய வைத்துக் கொள்கிறார்களா? வீட்டில் நம்முடன் பேசும்போதும் இந்த வசனங்களின் பாதிப்பு வெளி வருகிறது. முன்பெல்லாம் நம் கேள்விகளுக்கு சாதாரணமாகப் பதில் சொல்லும் தாய்க்குலம் இப்போது நம் கேள்விகளுக்கு தொடர்களில் வரும் வில்லிகள் பேசும் பாணியில் பதில் பேசுகிறார்கள். அந்தப் பதில்கள் வெகு சூடாக இருக்கின்றன. சமயத்தில் தேள் கொட்டுவது போலும் இருக்கிறது.

இப்போதெல்லாம் வீட்டில் ஏதாவது பேசுவதென்றால் பயமாக இருக்கிறது. எப்படிப் பேசினாலும் அதற்குப் பதில் சூடாகவே வருகிறது. இதனால் நான் இப்போது என் பேச்சை வெகுவாகக் குறைத்து விட்டேன். இந்தப் போக்கு இப்படியே போனால் நாம் எல்லோரும் ஏதாவதொரு சங்கம் ஆரம்பித்து நம் பேச்சுரிமைக்காகப் போராட வேண்டி வரும் என்று நினைக்கிறேன்.
                               Image result for பெண்கள் அரட்டை

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

மற்றவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

                                       Image result for indian saints photos

மற்றவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

ஒவ்வொருவரும் எண்ணி எண்ணி வேதனைப்படும் கேள்வி இது. நான் மட்டும் இதற்கு விலக்காவேனா? நானும் இந்தக் கேள்வியைக் கேட்டதினால் வந்த பதிவுதான் இது.

மற்றவர்களைப் பற்றிய இப்படி ஒரு எண்ணம் ஏன் வருகிறது? உலகிலேயே தான் ஒருவன்தான் புத்திசாலி, மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்ற கருத்து நம் மனதின் ஏதோ ஒரு மூலையில் பதுங்கியிருக்கிறது. அதுதான் நம்மை இப்படிக் கேள்வி கேட்க வைக்கிறது.

இதனால் நம் அடிமனதில் ஒரு வேட்கை உருவாகிறது. எல்லோரையும் நாம்தான் உய்விக்கவேண்டும், நம்மை விட்டால் அவர்களைக் கடைத்தேற்ற வேறு யாரும் இந்த பரந்து விரிந்த உலகில் இல்லை. இப்படிப்பட்ட எண்ணங்களுடன் பலர் வாழ்கிறார்கள்.

இவர்கள் யாரைப் பார்த்தாலும் அறிவுரைகளை அள்ளி வீசுவார்கள். அவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ, அவர்களுக்குத் தேவையோ இல்லையோ, இவர்கள் பாட்டுக்கு தங்கள் போதனைகளை ஆரம்பித்து விடுவார்கள். அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே, அவர்களும் சிந்திப்பார்கள் அல்லவா, அப்போது அவர்களுக்கு எது சரியென்று படுகிறதோ, அதைத்தானே செய்வார்கள் என்ற ஞானம் இப்படிப் பட்டவர்களிடத்தில் இல்லாமல் போவதுதான் உலக மகா அதிசயம்.

நானும் முன்பெல்லாம் இந்த தவற்றை, தப்பு, தவறு அல்ல, முட்டாள்தனத்தைச் செய்து வந்தேன். பதிவுலகத்தில் எழுத ஆரம்பித்த பிறகு, இப்போது கொஞ்சம் அறிவு வந்து விட்டது. இப்போதெல்லாம் யார் என்ன செய்தாலும் அது அவர்கள் விருப்பம், செய்யட்டுமே, அதனால் வரும் இன்ப துன்பங்களை அவர்க்ளதானே அனுபவிக்கப் போகிறார்கள், என்ற எண்ண்த்தில் அதைப்பற்றி கவலைப் படுவதில்லை.

இதுதான் மனமுதிர்ச்சி அடைந்தவர்கள் அனுசரிக்கவேண்டிய நடைமுறை. இதை விட்டி விட்டு புத்தி சொல்கிறேன் பேர்வழி என்று யாரும் கேட்காமல் புத்தி சொல்லிக்கொண்டு திரிவீர்கள் என்றால் உங்களை கீழ்ப்பாக்கத்தில் சேர்க்கவேண்டி வரும். ஜாக்கிரதை. இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? என்று இனிமேல் கேட்க மாட்டீர்கள் அல்லவா?

எல்லாம் சரி, இப்போது நான் ஏன் இப்படி அறிவுரை கூறப் புகுந்து விட்டேன் என்று கேட்கிறீர்களா? பதிவு எழுத வேறு நல்ல சப்ஜெக்ட் கிடைக்கவில்லை, அவ்வளவுதான். மற்றபடி நீங்கள் எல்லோரும்  என்னைவிட அறிவிலும் அனுபவத்திலும் சிறந்தவர்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. அப்படி இருப்பதினால்தான் என்னை தமிழ்மணம் தரவரிசையில் ஆறாவதாகக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீர்கள்.

                                                  Tamil Blogs Traffic Ranking

எல்லோருக்கும் நன்றி.வணக்கம்.

பின்குறிப்பு: சமீபத்தில் ஒரு பிரபல பதிவர் தன் பதிவில் எழுதியிருந்ததைப் பார்த்து எனக்குத் தோன்றிய எண்ணங்க்ள.

புதன், 22 ஏப்ரல், 2015

என் மூன்றாவது ராணியின் பிரலாபம்

                                    Image result for queen
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான ஆசைகள், தேவைகள், இத்தியாதிகள் உண்டு. ஒவ்வொன்றையும் நிறைவேற்ற ஒவ்வொருவனும் படும் பாடு இருக்கிறதே அது சொல்லில் அடங்காது. இரண்டு பெண்டாட்டிக்காரன் படும் சங்கடங்களே பொறுக்க முடியாது என்று சொல்கிறார்கள். நான் ஐந்து பெண்டாட்டிகளை (ராணிகளை) வைத்துக்கொண்டு படும் அவஸ்தைகளை யாரிடம் சொல்லி ஆறுதல் பெறமுடியும். பதிவர்களாகிய உங்களிடம்தான் சொல்ல முடியும். என் மூன்றாவது ராணிக்கு ஊடல் வந்து விட்டது.

சரி. சீரியசாக விஷயத்திற்கு வருவோம். இரும்பு பிடித்தவன் கையும் சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது என்று அந்தக்காலத்தில் சொல்லிப் போனார்கள். அந்தக்காலத்தில் கணினி கண்டு பிடிக்கப்படவில்லை. கணினி கண்டு பிடிக்கப்பட்டிருந்தால் "மவுஸ் பிடித்தவன் கையும் சும்மா இருக்காது" என்று சேர்த்திருப்பார்கள்.

நான் ஒரு பரிசுத்தவாதி. தமிழர்களுக்கு எதையும் இங்கிலீஷில் சொன்னால்தான் நன்றாகப் புரியும். அதாவது நான் ஒரு Perfectionist. அனைத்தும் எப்பொழுதும் ஒரு ஒழுங்கிலேயே இருக்கவேண்டும் என்று விரும்புகிறவன். இது ஒரு வகையான வியாதி என்று ஒரு பதிவர் குறிப்பிட்டிருந்தார்.  அதாவது இதற்குப் பெயர் obsessive compulsive disorder - OCD என்று சொல்வார்களாம். இதற்கு வைத்தியம் இல்லையாம். இதை சகித்துக் கொள்ளத்தான் வேண்டுமாம்.

சரி செய்ய முடியாததை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்ற விதிப்படி இதை ஏற்றுக்கொண்டேன். இதன் விளைவுகளைத்தான் இப்போது பார்க்கப்போகிறீர்கள். இப்போதுள்ள இணையத்தின் நிலையை அனைவரும் அறிவீர்கள். பல மென்பொருட்களை இலவசமாகத் தருகின்றார்கள். ஆனால் உலகில் எதுவும் இலவசம் கிடையாது. அம்மாவே இந்த வார்த்தையை மாற்றி "விலையில்லா" என்று சொல்ல ஆரம்பித்திருப்பது எல்லோரும் அறிந்ததே.

கூகுள் குரோம் பிரவுசரைப் பற்றி எல்லோருக்கும் நன்கு தெரியும். ஒரு நல்ல பிரவுசர். கூகுள்காரன் இலவசமாகக் கொடுக்கிறான் என்று பலரும் உபயோகிக்கிறார்கள். ஆனால் தற்போது கூகுள்காரன் தன் சாம்ராஜ்யத்தை பல மடங்கு விரிவுபடுத்தியுள்ளான். அதனால் கஜானா காலியாகிவிட்டது போல் தெரிகிறது. ஆகவே தன் கஜானாவை நிரப்ப பல பெரிய கம்பெனிகளுடன் ஒப்பந்தம் போட்டு அவர்களின் விளம்பரங்களையோ அல்லது அவர்களின் விலைபோகாத மென்பொருட்களையோ தன்னுடைய மென்பொருள்களுடன் சேர்த்து அனுப்புகிறான்.

ஆனால் இப்படி உபயோகிப்பவர் சம்மதம் இல்லாமல் விளம்பரங்களையோ, வேறு மென்பொருட்களையோ இலவச இணைப்பாக அனுப்புவது சட்டப்படி குற்றம். அதனால் அவன் அனுப்பும் மென்பொருளை நிறுவும்போது சந்தடி சாக்கில் இதையும் வாங்கிக் கொள்ளுங்களேன் என்று சின்ன எழுத்தில் கேட்பான். நாம்தான்  இலவசமாக எது கிடைத்தாலும் எல்லாவற்றிற்கும் சரி என்று சொல்லித்தானே பழக்கம். அதனால் இதையும் கூர்ந்து கவனிக்காமல் சரி என்று டிக் அடித்து விடுவோம். சீதேவியுடன் மூதேவியும் வந்து நம் கணினியில் சம்மணம் போட்டு உட்கார்ந்து விடும். இப்படி எனக்கு நேர்ந்து விட்டது.

இந்த மூதேவியை விரட்ட எந்த கம்ப்யூட்டர் கொம்பனாலும் முடியாது. அப்படி கட்டமைக்கப்பட்ட மென்பொருட்கள் அவை. சரி, அது ஒரு பக்கம் இருந்து விட்டுப் போகட்டுமே என்று விட்டால் சில நாளில் அது தன் பரிவாரங்களையும் வரவழைத்து பெரிய குடித்தனமே போட்டுவிடும். பிறகு கொஞ்ச நாளில் முதலுக்கே மோசம் வந்து உங்கள் கம்ப்யூட்டரை மொத்தமாக முடக்கி விடும். தவிர அடிக்கொரு தடவை ஏதாவது விளம்பரம் வந்து உயிரை எடுத்தது.

இதற்கு ஒரே வழி, கம்ப்யூட்டரில் இருப்பவைகளை சுத்தமாக அழித்து விட்டு ஆபரேட்டிங்க் சிஸ்டம் மென்பொருளை மீண்டும் நிறுவுவதுதான். இதை நானே வழக்கமாகச் செய்து விடுவேன். ஆனால் இந்த முறை பல நாட்களாகச் சேர்ந்திருக்கும் குப்பைகளையும் வெளியில் கொட்டி விடுவோமே என்று எண்ணி, ஹார்டு டிஸ்க்கை முழுமையாக பார்மேட் செய்ய முயற்சித்தேன். ஹார்டு டிஸ்க்கை பார்மேட் செய்வது என்பது மனிதனின் மூளையில் ஆபரேஷன் செய்வது மாதிரியாகும். கரணம் தப்பினால் மரணம்தான். இதில் முன் அனுபவம் இல்லாததினால் நான் செய்த ஆபரேஷனால் கம்ப்யூட்டர் முழுவதுமாக முடங்கி விட்டது.

அரோகரா. இனி டாக்டரைக் கூப்பிடாமல் வேலை நடக்காது என்பது புரிந்தது. டாக்டருக்குப் பல வேலைகள். கூப்பிட்ட உடனே வருவாரா? அப்படி கூப்பிட்ட உடனே வந்து விட்டால் அவருடைய மதிப்பு என்ன ஆவது? இரண்டு நாட்கள் கழித்து வந்தார். நான் பிரச்சினையைச் சொன்னேன். எனக்கு இந்த ஹார்டு டிஸக்கை பார்மேட் பண்ணி பார்ட்டிஷன் பண்ணிக் கொடுத்துவிடுங்கள். மிச்சத்தை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன்.

அவரும் ஏதோ மந்திரம் மாயம் செய்து அதைச் செய்துவிட்டு, அந்த விண்டோஸ் சிடி யைக் கொடுங்கள், இன்ஸ்டால் செய்து விடலாமே என்றார். நானும் விண்டோஸ் 8 சிடியைக் கொடுத்தேன். அதைப் போட்டு ஒரு முக்கால் மணி நேரம் இன்ஸ்டால் செய்தார். எல்லாம் முடிந்த பிறகு அது என்ன சொல்லிற்று என்றால், விண்டோஸ் 7 எங்கே என்றது.

இந்த கம்ப்யூட்டர் டாக்டர்கள் எல்லாம் பைரேட்டட் மென்பொருட்களையே வைத்துப் பழக்கப்பட்டவர்கள். ஒரிஜினல் மென்பொருட்களில் அவ்வளவு பரிச்சயமில்லாதவர்கள். அதனால் அவருக்கு இந்த நுணுக்கம் தெரியாமல் போயிற்று. அதாவது நான் விண்டோஸ் 7 ஒரிஜினல் சிடி முதலில் வாங்கினேன். அதன் பிறகு அதன் மேல்தான் விண்டோஸ் 8 மென்பொருளை நிறுவினேன். அதன் மேல் விண்டோஸ் 8.1 ஐ நிறுவினேன்.

மைக்ரோசாஃப்ட்காரன் படு கொம்பனல்லவா?  இவைகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறுவினால்தான் அவை ஒழுங்காக இன்ஸ்டால் ஆகும்படி தன் மென்போருளை அமைத்திருக்கிறான். மாற்றி இன்ஸ்டால் செய்தால் வேலை செய்யாது. பிறகு, டாக்டரிடம் நான் சொன்னேன். இந்த வேலை எனக்குத் தெரியும், இது மிகவும் நேரம் எடுத்துக்கொள்ளும் சமாச்சாரம், அதனால் நானே செய்து கொள்ளுகிறேன் என்று சொல்லி அவரை அனுப்பி விட்டு, வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக இன்ஸ்டால் செய்தேன். ஒரு நாள் முழுசாக ஆகியது. எல்லாம் சரியாக அமைந்து விட்டது.

இதை ஏன் இவ்வளவு விரிவாக இங்கே சொன்னேன் என்றால் பதிவர்கள் யாராவது ஒரிஜினல் சிடி வைத்திருந்தால் அவர்கள் ரீஇன்ஸ்டால் செய்யும்போது ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்.

இதனால் எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் இலவசம் என்பதற்காக எதையும் நன்றாகக் கவனிக்காமல் தரவிறக்கவேண்டாம். கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு உன்னிப்பாக கவனித்து செயல்படவும்.
                              Image result for satan

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

என்ன கொடுமை இது?

இப்போது தமிழ்மணம் திரட்டியில் வெளியிடப்படும் பல பதிவுகளில் அவைகளைத் திறந்தவுடன் கீழ்க்கண்ட ஸ்கிரீன் வருகிறது.


இந்த ஸ்கிரீனில் கர்சரைக்கொண்டு என்ன செய்தாலும் இடிச்ச புளியாட்டம் அப்படியே நிற்கிறது. இந்தப் பதிவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனாலும் இது அநியாயத்திற்கு கொடுமை. இதைக்கேட்பார் யாருமில்லையா?

திங்கள், 20 ஏப்ரல், 2015

ஆர் எஸ் புரம் உருவான கதை


                                          Image result for coimbatore railway station

கோயம்புத்தூர் எனபது 20 ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் ஒரு சிறிய ஊராகத்தான் இருந்திருக்க வேண்டும். எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலேயே அது ஒரு சிறிய ஊராகத்தான் இருந்தது.

இதுதான் பழைய கோயமுத்தூரின் படம்..



பழைய கோயமுத்தூர் என்பது கிழக்கு மேற்காக இரண்டு மைல், தெற்கு வடக்காக ஒரு மைல் என்ற அளவில்தான் இருந்தது. மேற்கே சலிவன் வீதி, வடக்கே சுக்கிரவாரப்பேட்டை வீதி, கிழக்கே ரயில்வே ஸ்டேஷன், தெற்கே செட்டி வீதி எனப்படும் வைசியாள் வீதி. இவ்வளவுதான் கோயமுத்தூர்.

இதைச் சுற்றிப் பக்கத்திலேயே சிறு சிறு கிராமங்கள் இருந்தன. இந்தக் கிராமங்கள் அனைத்தும் தற்போது கோயமுத்தூர் மாநகராட்சி எல்லைக்குள் வந்து விட்டன. 

பள்ளபாளையம் என்ற செல்வபுரம், பேரூர், தெலுங்குபாளையம், சொக்கம்புதூர், பூசாரிபாளையம், வீரகேரளம், பாப்பநாயக்கன்புதூர், அம்புலிபுதூர் எனப்படும் வெங்கிட்டாபுரம், வேலாண்டிபாளையம், குப்பகோனான்புதூர், கவுண்டம்பாளையம், நல்லாம்பாளையம், சங்கனூர், மணியகாரன்பாளையம், உடையாம்பாளையம், கணபதி, அனுப்பர்பாளையம், ஆவாரம்பாளையம், விளாங்குரிச்சி, பாப்பநாயக்கன்பாளையம், பீளமேடு, சௌரிபாளையம், புலியகுளம், உப்பிலிபாளையம், மசக்காளிபாளையம், ராமநாதபுரம்,  நஞ்சுண்டாபுரம், போத்தனூர், குறிச்சி, குனியமுத்தூர், மதுக்கரை, குளத்துப்பாளையம், சுண்டக்காமுத்தூர், கவுண்டனூர், பேரூர் செட்டிபாளையம், இப்படி பல கிராமங்கள். 

அனைத்தும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமங்கள். 

அந்தக் காலத்தில் அதாவது 150 வருடங்களுக்கு முன்பு இருந்த ஆங்கிலேய அரசாங்க அதிகாரிகள் பல முன்னேற்றங்களை இந்த நகரத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். நகர மையத்தைச் சுற்றிலும் நிறைய வெற்றிடங்கள் அல்லது விவசாய நிலங்கள் இருந்திருக்கின்றன. அவைகளை மொத்தமாக வாங்கி பொதுக் காரியங்களுக்காக ஒதுக்கியிருக்கிறார்கள்.

அவைகளில் குறிப்பிடத்தக்கவைகளை ஒவ்வொன்றாகக் கூறுகிறேன்.

1. விவசாயக் கல்லூரி.
                                      
                                           Image result for coimbatore agri college

இது மருதமலை போகும் வழியில் உள்ளது. இதற்கு ஏறக்குறைய 250 ஏக்கர் வாங்கி இந்தக் கல்லூரியை நிறுவியிருக்கிறார்கள். முக்கிய கட்டிடம் 1906 ம் வருடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கு வயல் பூமிகள் வேண்டுமென்று தொண்டாமுத்தூர் ரோடில் 60 ஏக்கரும் அதற்கு அப்பால் தெலுங்குபாளையம் கிராமத்தில் 30 ஏக்கரும் வாங்கியிருக்கிறார்கள். இந்தக் கல்லூரியில் படித்துத்தான் நான் B.Sc.(Ag.), M.Sc.(Ag.), Ph.D. ஆகிய பட்டங்களை வாங்கினேன். 

2. வனக் கல்லூரி.

விவசாயக் கல்லூரியும் வனக்கல்லூரியிம் ஏறக்குறைய சம காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதால் இரண்டு கல்லூரிகளின் கட்டிடங்களும் ஒரே பாணியில் கட்டப்பட்டுள்ளன.

                                              Image result for coimbatore forest college and research institute

 இதுவும் ஏறக்குறைய சம காலத்திலேயே நிலம் வாங்கி ஆரம்பிக்கப்பட்டதாகும். சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். கிழக்கே மேட்டுப்பாளையம் ரோடு, மேற்கே தடாகம் ரோடு, வடக்கே பாரதி பார்க் ரோடு, தெற்கே கவுளிபிரவுன் ரோடு ஆகிய நான்கு ரோடுகளுக்கு மத்தியில் இந்தக் கல்லூரி இருக்கிறது. இதில்தான் திரு அவினாசிலிங்கம் செட்டியார் மத்திய கல்வி அமைச்சராக இருந்த போது வடகிழக்கு மூலையில் ஒரு 30 ஏக்கரைத் தன்னுடைய அதிகாரத்தை உபயோகித்து ஒரு தனியார் கல்லூரி ஆரம்பிப்பதற்காக வாங்கினார். அதில் தன் பெயரில் ஒரு மகளிர் கல்லூரி ஆரம்பித்து அது இன்று ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே அரசு நிலங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதென்பது தொன்று தொட்டு வரும் இந்தியக் கலாச்சாரமாகும்.


3. மத்திய சிறைச்சாலை.

                                          Image result for coimbatore central jail
 கோயமுத்தூருக்குக் கிழக்கே பாப்பநாயக்கன்பாளையம் மற்றும் அனுப்பர்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 300 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி, மத்திய சிறை, ஒரு பெரிய பாரக் மற்றும் மைதானம் (கார்ப்பரேஷன் பார்க் என்று அதற்கு அந்தக்காலத்தில் பெயர். இன்று வ.உ.சி. பார்க் என்று அழைக்கப்படுகிறது) ஆகியவைகளை நிறுவினார்கள். இந்த இடத்தில்தான் இன்று ஒரு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பல அரசாங்க அலுவலகங்கள், டவுன் பஸ் நிலையம் ஆகியவை இருக்கின்றன.

4. ரேஸ் கோர்ஸ்.

                                      Image result for coimbatore race course road

ஆங்கிலேயர்கள் குதிரைப் பந்தயங்கள் நடத்துவதற்காக வட்டவடிவத்தில் ஒரு பெரிய சாலை அமைத்து அதற்குள் இருக்கும் சுமார் 300 ஏக்கர் நிலத்தை அரசுடமையாக்கினார்கள். இதில்தான் இப்போது பல அரசங்க அலுவலகங்கள், கலெக்டர் பங்களா, ஆகியவை இருக்கின்றன. இந்த இடத்திலும் சிறுசிறு இடங்கள் தனியாருக்கு பல காரணங்களைக் காட்டி தாரை வார்க்கப்பட்டிருக்கின்றன.

5. ஸ்டேன்ஸ் மோட்டார்ஸ் வளாகம்.

                                  Image result for Coimbatore Stanes Motors
 ரேஸ் கோர்சை ஒட்டி அதற்கு தென்புறம் ஒரு 150 ஏக்கர் நிலத்தை ஸ்டேன்ஸ் துரை என்பவருக்கு வாங்கிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் இன்று பல தனியார் நிறுவனங்களும் ஒரிஜினல் கம்பெனியும் இருக்கிறது. ஸ்டேன்ஸ் கம்பெனி நிறைய காப்பி எஸ்டேட்டுகள் வைத்திருந்தார்கள். ஸ்டேன்ஸ் காப்பி என்பது அந்தக்காலத்தில் பிரபலமான ஒரு பிராண்ட். இந்த எஸ்டேட்டுகளின் உரத்தேவைக்காக ஒரு எலும்பு உரத்தொழிற்சாலையும் துடியலூர்ப் பக்கம் ஆரம்பித்து வெகு நாள் நடந்து கொண்டிருந்தது.  நான் விவசாயக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாளில் எங்களைக் கூட்டிக்கொண்டு போய் இந்த தொழிற்சாலையைக் காண்பித்திருக்கிறார்கள்.

6. கிறிஸ்தவப் பள்ளிகள் இரண்டு இடங்களில் இருக்கின்றன. அதற்காக அதிக பரப்புள்ள இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மைக்கேல் ஹைஸ்ஸ்கூல் மற்றும் யூனியன் ஹைஸ்கூல் வளாகங்கள். இது ரயில்வே ஸ்டேஷனுக்கு மேற்கே மணிக்கூண்டு வரை வியாபித்திருக்கிறது. இந்த இடத்தில் பள்ளிகளைத் தவிர பல கிறிஸ்தவ நிறுவனங்களும் உள்ளன.

7. மத்திய மருத்துவ மனை.

                                         Image result for coimbatore government hospital

ரயில்வே ஸ்டேஷனுக்கு கிழக்கே அரசு மத்திய மருத்துவ மனை இருக்கிறது. இப்படிச் சொன்னால் ஒருவருக்கும் தெரியாது. பெரியாஸ்பத்திரி என்று சொன்னால்தான் புரியும். இதற்கு கிழக்கே மகளிருக்கான மூன்று பெரிய கிறிஸ்தவப்பள்ளிகள் இருக்கின்றன.

இந்த இரண்டு பள்ளி வளாகங்களுக்கும் அன்றைய அரசு நிலங்களைக் கொடுத்திருக்கிறது.
                            
இது தவிர ஆங்காங்கே பல சிறிய பெரிய இடங்களை அரசு கையகப்படுத்தி வைத்திருந்திருக்கிறது. அந்த இடங்களில் இப்போது பல அரசு அலுலகங்கள் கட்டப்பட்டு செயல்படுகின்றன. அதில் குறிப்பிடத்தகுந்தது அவினாசிலிங்கம் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் பாரதி பார்க் வளாகம். இங்குதான் கோவைக்கு குடிநீர் வழங்க கட்டப்பட்ட முதல் தண்ணீர்த் தொட்டி இருக்கிறது. இதைச்சுற்றி ஒரு சிறிய பார்க் அமைத்து அதற்கு கோஷன் பார்க் என்று பெயர் வைத்திருந்தார்கள். பின்னாளில் அது பாரதி பார்க் என்று மறு பெயர் சூட்டப்பட்டது.

                              Image result for bharathi park coimbatore
இது வரை சொல்லியவைகளிலிருந்து அன்றைய அரசு கொடுங்கொல் அரசாகச் செயல்பட்டது என்ற முடிவிற்கு வரவேண்டாம். அன்று தீர்க்க தரிசனத்துடன் இந்த இடங்களைக் கையகப்படுத்தாமல் இருந்திருந்தால் இன்று கோவையில் மூச்சு விடக்கூட பொது இடம் என்று ஒன்று இருந்திருக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.

1930 களில் உள்ளாட்சித் தேர்தல்களில் இந்தியர்களுக்கு அதிகப் பொறுப்பு கொடுத்தார்கள். அந்த சமயத்தில் கோயமுத்தூர் நகரசபைக்கு திவான் பகதூர் சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் என்பவர் தலைவராக இருந்தார். அவர் கோயமுத்தூரில் உள்ள பெரும் புள்ளிகளில் ஒருவர். அவர் காலத்தில்தான் ஆர் எஸ் புரம் உருவாகியது. இதன் முழுப்பெயர் திவான் பகதூர் ரத்தினசபாபதி புரம் என்பதாகும். இது காலப்போக்கில் சுருங்கி ஆர் எஸ் புரம் என்று ஆகி விட்டது.

படத்தைப் பார்க்கவும்.



வனக்கல்லூரிக்கு தென்புறம், மேட்டுப்பாளையம் சாலைக்கு மேற்குப் புறம்,
தடாகம் சாலைக்கு கிழக்குப் புறம், சக்கிரவாரப்பேட்டை சாலைக்கு வடபுறம்,  இந்த எல்லைக்குள் பல விவசாய பூமிகள், தரிசு நிலங்கள், சுடுகாடு ஆகியவை இருந்தன. இந்த நிலங்களை எல்லாம் ஒன்று நேர்த்து ஒரு நல்ல லேஅவுட் போட்டு ஆர் எஸ் புரத்தை உருவாக்கினார்கள்.

நடுவில் 70 அடி அகலத்தில் தெற்கு வடக்காக ஒரு பெரிய ரோடு, எல்லா இடங்களிலும் அகலமான ரோடுகள் போட்டு மனைகள் பிரித்து நகர சபையே விற்றது. மனைகள் ஒவ்வொன்றும் 20 சென்ட்டுகள். மெயின் ரோடான 70 அடி ரோட்டில் மனைகள் 30 சென்ட்டுகள். சென்ட் ஒன்றிற்கு 25 ரூபாய் விலை. இதில் ஒரு மனை எங்கள் குடும்பத்தில் வாங்கினோம். 19 சென்ட். 450 ரூபாய் விலை. கிரயப் பத்திரம் எல்லாம் கிடையாது. நகரசபையின் ஓர் ரசீது மட்டுமே.

                                Image result for db road coimbatore
முக்கிய சாலையான 70 அடி ரோட்டிற்கு நகர சபைத்தலைவர் பெயரையும் மற்ற ரோடுகளுக்கு அன்று இருந்த நகரசபை உறுப்பினர்களின் பெயரும் வைக்கப்பட்டன. அப்போதைய பெயரில் அந்த உறுப்பினர்களின் ஜாதிப்பெயரும் சேர்ந்திருந்தது. நாங்கள் இடம் வாங்கின ரோடின் பெயர் பொன்னுரங்கம் முதலியார் தெரு. 70 அடி ரோட்டின் பெயர் "திவான்பகதூர் இரத்தினசபாபதி முதலியார் ரோடு". எவ்வளவு நீளமான பெயர் பார்த்தீர்களா? சாதாரணமாக 70 அடி ரோடு - செவென்டி ஃபீட் ரோடு என்றும் புழக்கத்தில் அந்தக் காலத்தில் சொல்வார்கள். அந்தப் பெயர்தான் இன்று சுருங்கி   D.B. Road ஆகிவிட்டது. அதாவது திவான்பகதூர் ரோடு என்பதின் ஆங்கிலச் சுருக்கம். சென்னையில் Hamilton Bridge என்பது அம்பட்டன் வாராவதி ஆன மாதிரிதான். 

சுடுகாட்டில் வீடு கட்ட யாரும் முன்வரமாட்டார்கள் என்பதால் அங்கு ஒரு நகராட்சி உயர்நிலைப் பள்ளி கட்டப்பட்டது. அதில்தான் நான் படித்தேன். சர்டிபிகேட் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதற்குச் சேர்ந்த விளையாட்டு மைதானம் வெகு காலம் "பரியல் கிரவுண்ட்" என்றே அழைக்கப்பட்டு வந்தது. இப்போது சாஸ்திரி மைதானம் என்று அழைக்கப்படுகிறது. 

எங்கள் பள்ளி வளாகத்திலேயே நான் படிக்கும் காலத்தில் எலும்புகளைப் பார்த்து பயந்திருக்கிறேன்.
                               Image result for RSPuram high school coimbatore

இந்த விவரங்களை எனக்குத் தெரிந்த வரையில் கொடுத்திருக்கிறேன். இது தவிர வேறு தகவல்கள் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.