வியாழன், 19 மார்ச், 2015

கோதுமை வடை- கோவை ஸ்பெஷல்

  Image result for உப்புக் கச்சாயம்
இது சரியான படம் இல்லை. ஆனா கோதுமை வடை ஏறக்குறைய இந்த மாதிதான் இருக்கும்.


இது எங்க ஊரு ஸ்பெஷல் ஐட்டமுங்க. இதை எங்கூர்ல கோதுமை கச்சாயம்னு சொல்லுவாங்க. நாந்தான் நாம இப்ப வடை சீசன்ல இருக்கறதால இதுக்கு கோதுமை வடைன்னு பேர் வச்சேனுங்க.

இதை ரெண்டு தினுசாப் பண்ணுவாங்க. ஒண்ணு, உப்பு, காரம் போட்டு பண்றதுங்க. அதுக்கு உப்புக் கச்சாயம்னு பேருங்க. இன்னொண்ணு வெல்லம், ஏலக்காய் எல்லாம் போட்டு பண்றது. அதுக்கு இனிப்புக் கச்சாயம்னு பேரு. ஒவ்வொண்ணாச் சுட்டு,  நாலு நாலாச் சாப்பிடலாங்க.

கோயமுத்தூர் ஜில்லாவில அந்தக் காலத்தில கோதுமை விவசாயம் பண்ணுவாங்க. இதுக்கு சம்பா கோதுமைன்னு பேரு. மானாவாரியா எறங்காட்டுல (கரிசல் காட்டுக்கு எங்க ஊர்ல எறங்காடுன்னு சொல்வோம்) செய்யற விவசாயம். குளிர் காலத்தில வெளையற பயிருங்க. தானியம் நீளநீளமா நல்ல கோதுமை நெறத்தில இருக்குமுங்க.

இதை ரவை பண்ணி உப்புமா செய்து சாப்பிட்டா, ஹூம், அது அந்தக்காலம். இப்ப எங்கேங்க அந்த மாதிரி ரவை கெடைக்குது. அந்த உப்புமா செய்யறதப் பத்தி ஒரு பதிவில தனியா சொல்றேனுங்க. மத்த ஜில்லாக்காரங்களுக்கு ரவைன்னா, வெள்ளையா இருக்கு பாருங்க, சூஜி, அதுதான் ரவை அப்படீம்பாக. இந்த பிரவுன் ரவையை ரொம்ப பேர் பார்த்தே இருக்க மாட்டாங்க.

அத விடுங்க. இப்ப நம்ம கோதுமை வடைக்கு வருவோம். இந்த மாதிரி கோதுமை இப்ப கெடைக்கறது ரொம்பக் கஷ்டமுங்க. பஞ்சாப் கோதுமைன்னு பலசரக்குக் கடைகள்ல கேட்டா தருவாங்க. கொஞ்சம் வெல ஜாஸ்தியா இருக்குமுங்க. நல்லா வடை சாப்பிடணும்னா வெலயப் பாத்தா ஆகுமுங்களா.

இந்த வடை சுடுவதற்கு கட்டாயம் ஆட்டுக்கல் அதாங்க ஆட்டாங்கல் அதாங்க உங்க ஊர்ல சொல்லுவீங்களே கல்லுரல், அது கண்டிப்பா வேணுமுங்க. மிக்சி, கிரைண்டர் இதெல்லாம் உதவாதுங்க. அப்புறம் ஆட்டறதுக்கு வலுவா நெண்டு பேர் வேணுமுங்க. ஏன்னா, கோதுமை ஆட்ட ஆட்ட கோந்து மாதிரி பசையா ஆகிடுமுங்க.

நீங்க சின்னவங்களா இருக்கறப்போ இந்தக் கோதுமையை கொஞ்சம் எடுத்து வாயில் போட்டு மென்றிருக்கீர்களா? கொஞ்ச நேரம் மென்றவுடன் ஒரு ரப்பர் மாதிரி ஆகிவிடும். எங்களுக்கெல்லாம் அந்தக் காலத்து chewing gum இதுதான். இந்தக் கோதுமையை ஆட்டும்போது இந்த மாதிரி ஒரு ரப்பர் பதத்திற்கு வருமுங்க. அப்படி வர்றதுக்கு கை வலுவா இருக்கற ரெண்டு பேர் ஆட்டோணுமுங்க.

இந்தக் கோதுமை ஒரு இரண்டு லிட்டர் எடுத்து மதியமே தண்ணியில ஊறப் போட்டுடுங்க. சாயங்காலம் 4 மணிக்கு எந்திரிச்சு, ஒரு லிட்டர் கோதுமையை எடுத்து ஆட்டாங்கல்லில் போட்டு ஆட்ட ஆரம்பிங்க. கொஞ்சம் ஆட்டினதும் அளவாக உப்பு, உரிச்ச சின்ன வெங்காயம் கொஞ்சம், ஒரு பத்து பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, எல்லாம் சேத்தி நல்லா ஆட்டுங்க. கோதுமை கொஞ்ச நேரத்தில் அல்வா பதத்திற்கு வந்துவிடும்.

அப்போது மாவை கல்லுரலில் இருந்து எடுத்து சமையலறைக்குக் கொண்டுபோய் கொஞ்சம் கொஞ்சமாக வடை அளவிற்கு எடுத்து விரல்களால் தட்டையாகப் பண்ணி காயந்த எண்ணையில் போட்டு சுட்டு எடுக்கவும். சொந்தமாக தயார் செய்த தேங்காய் எண்ணையில் சுட்டால் வடை தேவாம்ருதம் போல் இருக்கும். இந்த வேலையெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது நீங்கள் தூங்கி எழுந்து கைகால் மொகம் களுவீட்டு ஹாலில் தயாராக ஈசி சேரில் உட்கார்ந்திருக்கவும்.

வடைகள் தயாரானவுடன் ஒரு தட்டில் நாலைந்து வடைகள் வைத்து உங்களுக்கு வரும். இதற்கு சைடு டிஷ் எதுவும் தேவையில்லை. பல் மட்டும் கொஞ்சம் வலுவாக இருக்கவேண்டும் அவ்வளவுதான். இந்த வடையை உளுந்து வடை மாதிரி லேசாக நெனைக்காதீங்க. பாதி வடையைக் கடித்து வாயில் போட்டு நன்றாக மெல்லவேண்டும். அப்போதுதான் அதன் ருசி நாவிற்குத் தெரியும்.

                     

                                               இனிப்புக் கச்சாயம்

பல் வலிக்க ஆரம்பித்தவுடன் வடை சாப்பிடுவதை நிறுத்தி விடலாம். கொஞ்ச நேரம் டிவி பார்த்துக்கொண்டு பல்களுக்கு ஓய்வு கொடுங்கள். இதற்குள் ஊறவைத்ததில் மீதி இருக்கும் கோதுமையை வெல்லம், ஏலக்காய் போட்டு ஆட்டி, இனிப்பு வடை சுட ஆரம்பித்திருப்பார்கள். இப்போது பற்களுக்கு போதுமான ஓய்வு கிடைத்திருக்கும். பிறகு என்ன, இனிப்பு வடைகளைச் சாப்பிடவேண்டியதுதான். சாப்பிடும் முறை பழைய மாதிரிதான். பாதி வடையைக் கடித்து நன்றாக மென்று கூழாக்கி ருசித்து விழுங்க வேண்டியதுதான்.

இந்த வடைகளை இரண்டு நாட்கள் வரைக்கும் வைத்திருந்து சாப்பிடலாம். மறுநாள் சாப்பிடும்போது ருசி இன்னும் அதிகமாக இருக்குமுங்க. இதுதாங்க கொங்கு பூமியில புது மாப்பிள்ளைக்கு செஞ்சு போடற பலகாரமுங்க. செஞ்சு சாப்பிட்டுப் பாத்திட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க.   

43 கருத்துகள்:

  1. செஞ்சு எங்கெங்க பாக்கறது? இப்படிப் படம் போட்டா பாத்துக்கிட வேண்டியதுதான்.. எப்பனாச்சியும் கோயம்புத்தூரு பக்கம் வந்தா சொல்லிப் போட்டா செஞ்சு வைக்க மாட்டீயளா என்ன! கோதும ரவா உப்புமா நாங்களும் பன்னுவோமுங்க... அதே கோதும ரவைல பால் சேர்த்து ரெண்டு வெந்தயம் கொஞ்சம் சர்க்கரைப் போட்டு கஞ்சியும் குடிச்சிருக்கேனுங்க..

    பதிலளிநீக்கு
  2. மற்ற வடை மாதிரி உடனே + நிறைய சாப்பிட முடியாதுன்னு சொல்றீங்க...

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. ஐயையோ, இதுவும் வடைதானுங்க. ரொம்ப நல்ல உணவுங்க. சாப்பிட்டுப் பாருங்க, அப்புறம் இதை விடமாட்டீங்க.

      நீக்கு
  4. சமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...? முழுவதும் படியுங்கள்...

    http://www.mukavare.com/2015/01/blog-post.html

    பதிலளிநீக்கு
  5. ஏனுங்க கவுண்டரே ஒரே கோயமுத்தூர் பாஷையாக இருக்கிறதே. எங்க பார்த்தாலும் "ங்க" , "ங்க" என்று.
    கமல் ஒரு படத்தில் சொல்வது மாதிரி வசன கவிதையில் வேணுங்கிற இடத்தில் மானே தேனே போட்டுக்கன்னு சொல்ற மாதிரி முதலில் பதிவை எழுதி விட்டு ரொம்ப இடத்தில் "ங்க" போட்டு விட்டீர்களா?
    என்றாலும் படிப்பதற்கு நன்றாக இருந்தது.
    ஒரு "ங்க"க்கு ஒரு கச்சாயம் என்றாலும் நிறைய கச்சாயம் கிடைத்திருக்குமே

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயம்பத்தூர் பாஷையே கேட்பதற்கு அவ்வளவு மரியாதையாக சுகமாக இருக்கும். ஒவ்வொரு வார்த்தைக்கும் "ங்க" போட்டு பேசுவதால் கோபமாக பேசலாம் என்று போனால் கூட நமது கோபம் தணிந்து விடும். என் மனைவி கோவையில் ஐந்து வருடம் படித்ததால் அந்த பாஷையை - "ங்க" போட்டு பேசும் பாஷையை -
      கற்றுக்கொண்டு விட்டதோடல்லாமல் இப்போதும் அப்படியே பேசுவதால் கேட்பவர்கள் நீங்கள் கோயம்பத்தூர் பக்கமா என்று கேட்பார்கள். அவ்வளவு தனித்துவம் வாய்ந்த "ங்க: பாஷை அது.
      வாழ்த்துக்கள் அய்யா

      காயத்ரி மணாளன்

      நீக்கு
  6. //இந்த வடைகளை இரண்டு நாட்கள் வரைக்கும் வைத்திருந்து சாப்பிடலாம்//
    பொதுவாகவே அடுத்த நாள் எடுத்து வைத்து சாப்பிடலாம் என்றாலே என் மனைவி குளிர் சாதனப்பெட்டியில் (fridge) எடுத்து வைத்து விடுவார்கள். இதவும் அப்படியா இல்லை வெளியிலயே வைக்கலாமா?

    காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  7. //ஒவ்வொண்ணாச் சுட்டு, நாலு நாலாச் சாப்பிடலாங்க.//

    சுடறது வேணுமானால் ஒவ்வொண்ணா இருக்கட்டுங்க. ஆனா சாப்பிடும்போது ஒரு நாலுக்கும் இன்னொரு நாலுக்கும் நடுவே என்ன செய்வது என்று சொல்லி விட்டால் நல்ல இருக்குமுங்க அய்யா

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
  8. //கோயமுத்தூர் ஜில்லாவில அந்தக் காலத்தில கோதுமை விவசாயம் பண்ணுவாங்க. //

    இப்போ எல்லாம் எங்கேங்க விவசாயம் இருக்குது. எல்லா இடத்திலும் தொழிற்சாலை ஆரம்பித்து விட்டானுங்களே.
    கொஞ்ச நாள் போனால் சாப்பாட்டுக்கு கூட வெளி மாவட்டத்தைதான் நம்பனும் போலிருக்குங்க. என்னங்க
    நான் சொல்றது?

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
  9. //இதுக்கு சம்பா கோதுமைன்னு பேரு//

    இப்பவும் சம்பா கோதுமை கிடைக்குதுங்க அய்யா. ஆனால் விலை அதிகமுங்க. ஆனால் நீங்க சொல்ற மாதிரி விலைக்கேத்த சுவைதானுங்க. நம்ப நியாய விலை கடையிலும் ration shop கோதுமை என்ற பெயரில் சில சமயங்களில் போடும் கோதுமையும் மிகவே நன்றாக இருக்குமுங்க. அதுவும் உபயோகிக்கலாமுங்க.
    இப்பெல்லாம் சம்பா கோதுமைன்னாலே பஞ்சாப் கோதுமைதானுன்களே

    துளசி மைந்தன்

    பதிலளிநீக்கு
  10. //இந்த பிரவுன் ரவையை ரொம்ப பேர் பார்த்தே இருக்க மாட்டாங்க.//

    இப்ப எல்லாம் கடைகளில் பிராண்டட் கோதுமை ரவை பிரவுன் கலரில் கிடைக்குதுங்க விலை மட்டும் அம்பானி, ஜிண்டால் போன்றவங்க வாங்கும் விலைங்க . என்னங்க பண்றது. நாமெல்லாம் இனிப்பானவர்களாக ஆயிட்டோமில்லையாங்க (சர்க்கரை வந்து விட்டது என்று பின்னே எப்படிங்க சொல்றது). அதனால டாக்டருக்கு கொடுப்பது, மருந்துக்கு கொடுப்பது என்பது மாதிரி கோதுமை ரவைக்கும் ஒரு பட்ஜெட் ஒதுக்கி வைக்க வேண்டியிருக்குங்க.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  11. //நல்லா வடை சாப்பிடணும்னா வெலயப் பாத்தா ஆகுமுங்களா./

    சரிதானுங்க அய்யா. நாமெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பொண்டாட்டிக்கு அடிமையானது மாதிரி நல்லா நாக்குக்கும் அடிமையாகி விட்டோமில்லையாங்க. அதுக்கு ஒரு விலை கொடுத்துத்தான் ஆக வேண்டியதிருக்குங்க. அதெல்லாம் வடை சாப்பிடும்போது மறந்து போய்டுங்க.

    காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  12. //அப்புறம் ஆட்டறதுக்கு வலுவா நெண்டு பேர் வேணுமுங்க.//

    அப்புறம் சுடற வடையில பாதி அவங்க கேப்பாங்களே. தொந்திரவு ஆச்சே. என்ன பண்றது. பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளியமரம் ஏறித்தானே ஆக வேண்டும். கச்சாயத்துக்கு ஆசைப்பட்டால் மாவு ஆட்டுபவர்களுக்கு பாதி வடை கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
  13. //அப்புறம் ஆட்டறதுக்கு வலுவா நெண்டு பேர் வேணுமுங்க.//

    ஏங்க நாங்கெல்லாம் இந்த காலத்து ஆளுங்க. வலுவான் ரெண்டு பேர் கேட்டால் நாங்க எங்கங்க போறது. வீட்டில் ஆம்படையாள் எல்லாம் zero figure என்று சொல்லறாங்களே அப்படி இருக்காங்க. பயந்துக்கிட்டு நான் காத்து கொஞ்சம் பலமாக அடிக்கும்போதெல்லாம் வெளியே கூட்டிட்டே போறதில்லைங்க. இதுல வலுவான ஆளுக்கு நான் என்னங்க பண்றது. நீங்கதான் ஒரு வழி சொல்லணும்.

    துளசி மைந்தன்

    பதிலளிநீக்கு
  14. //எங்களுக்கெல்லாம் அந்தக் காலத்து chewing gum இதுதான்//

    பழைய காலத்து நினைவுகளை கிளறியதற்கு நன்றி.
    இப்போதெல்லாம் சூயிங் கம் வாங்க பத்து ரூபாய் கேட்கிறான் பையன். அதவும் சாப்பிட்டு விட்டு பலூன் ஊதுகிறேன் பேர்வழி என்று சொல்லி அதை கையில் எடுத்து கசக்கி மீண்டும் வாயில் போட்டுக்கொண்டு. எல்லா அழுக்கும் மீண்டும் வாய்க்குள். பார்க்கவே கண்றாவியாக இருக்கிறது. இதற்கு நம் காலத்து கோதுமை சூயிங் கம் எவ்வளவோ மேல்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  15. //சொந்தமாக தயார் செய்த தேங்காய் எண்ணையில் சுட்டால் வடை தேவாம்ருதம் போல் இருக்கும்.//

    அடுத்து சொந்தமாக தேங்காய் எண்ணெய் தயார் செய்வது எப்படி என்ற பதிவை எதிர் பார்க்கலாமா?

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
  16. //சொந்தமாக தயார் செய்த தேங்காய் எண்ணையில் சுட்டால் வடை தேவாம்ருதம் போல் இருக்கும்.//

    என்னங்க அய்யா நீங்க? தேங்காய் எண்ணெய் தயாரிக்க செக்கும் வீட்டிலயே இருக்க வேண்டும் போலிருக்கிறதே. என் வீட்டில் செக்கெல்லாம் இல்லையே . புதிதாக செக்கு வாங்கி கச்சாயம் செய்தால் ஒரு கச்சாயத்தின் விலை அதிகமாகி விடுமே.

    காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  17. //சொந்தமாக தயார் செய்த தேங்காய் எண்ணையில் சுட்டால் வடை தேவாம்ருதம் போல் இருக்கும்.//

    கோயம்பத்தூர் கேரளா பக்கம் இருக்கிறது என்பது உண்மைதான். அதற்காக பலகாரம் சுடுவதெல்லாம் தேங்காய் எண்ணெயில்தான் என்றால் எப்படி. எங்களை மாதிரி கேரளாவில் இருந்து தூரத்தில்
    இருப்பவர்களுக்கு அந்த சுவை பிடிப்பதில்லையே.

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
  18. //சொந்தமாக தயார் செய்த தேங்காய் எண்ணையில் சுட்டால் வடை தேவாம்ருதம் போல் இருக்கும்.//

    கடையில் வாங்கும் தேங்காய் எண்ணெய் எல்லாம் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் கடைசியில் கிடைக்கும் கச்சடா எண்ணெய் என்கிறார்களே. அதில் பலகாரம் சுட்டால் என்ன ஆவது. அதனால் செக்கில் ஆடிய தேங்காய் என்று நீங்கள் சொல்லியது சரியே

    துளசி மைந்தன்

    பதிலளிநீக்கு
  19. //இந்த வேலையெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது நீங்கள் தூங்கி எழுந்து கைகால் மொகம் களுவீட்டு ஹாலில் தயாராக ஈசி சேரில் உட்கார்ந்திருக்கவும்.//

    நீங்கள் கொடுத்து வைத்தவர். எங்கள் வீட்டு மகாராணி வேலைக்கு போவதால் இங்கு எல்லாமே ஆளுக்கு பாதிதான் - வீட்டு வேலையில் இருந்து சமையல் வேலை எல்லாமே. இதில் நான் எங்கே தூங்கி எழுந்து ஹாலில் தயாராக இருப்பது. அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  20. //இந்த வேலையெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது நீங்கள் தூங்கி எழுந்து கைகால் மொகம் கழுவிட்டு ஹாலில் தயாராக ஈசி சேரில் உட்கார்ந்திருக்கவும்.//

    கொடுத்து வைத்த மஹானுபாவர் அய்யா நீங்கள். அந்த காலத்து ஆளாக இருப்பதால் இதுவெல்லாம் சாத்தியமாகிறது இந்த காலத்து நவீன பெண்களிடம் இது நடக்குமா. அங்கு வெட்டியா உக்காந்துக்குட்டு என்ன பன்னிக்கொன்டிருக்கிறீர்கள். சும்மா பேப்பர் பார்க்கும் நேரத்தில் இங்க வந்து வெங்காயம் உரித்துகொடுத்தால் வேலை சீக்கிரம் முடியுமில்லையா என்று ஒரு குரல்தான் முதலில் வரும். வடை வருவதற்கு ரொம்ப நேரமாகும். அதுவும் நாம் சமையலறை சென்று சொல்லும் வேலையை செய்து கொடுத்தால்தான்.

    காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  21. //இந்த வேலையெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது நீங்கள் தூங்கி எழுந்து கைகால் மொகம் கழுவிட்டு ஹாலில் தயாராக ஈசி சேரில் உட்கார்ந்திருக்கவும்.//

    "பழைய நினைப்புடா பேராண்டி எல்லாம் பழைய நினைப்புடா" என்று நீங்கள் சொல்வது காதில் கேட்கிறது. இப்படியெல்லாம் இருக்கலாம் என்று நினைக்கலாம். ஆனால் நிஜத்தில் நடக்குமா என்ன? நீங்கள் என்னதான் சின்ன வெங்காயம் உரித்து கொடுத்து வடை தட்டி கொடுத்ததை மறைத்தாலும் எங்களால் கண்டு பிடிக்க முடியாதா என்ன? ( நாங்களும் அதைத்தானே வீட்டில் செய்கிறோம்)

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  22. அய்யா நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். நீங்கள் வீட்டிலும் புலிதான் என்று. ஹாயாக ஹாலில் ஈசி சேரில் உட்கார்ந்து கொண்டு வடை வரும் வடை வரும் என்று சமையல் அறையை எட்டி பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தால் உங்கள் வீட்டில் வடை வரும் எங்கள் வீட்டிலெல்லாம் வடைகரண்டிதான் வரும். நாங்களெல்லாம் வெளியிலேதான் புலி வீட்டிலே எலிதான்.

    துளசி மைந்தன்

    பதிலளிநீக்கு
  23. //இதற்கு சைடு டிஷ் எதுவும் தேவையில்லை.//

    வாழ்க்கையை அனுபவிக்கவே தெரியவில்லையே உமக்கு.
    வடை தட்டு ஒரு பக்கத்திலும் ஆம்படையாளை இன்னொரு பக்கத்திலும் வைத்துக்கொண்டு வடையை சாப்பிட்டு பாரும் பின்னர் தெரியும் வாழ்க்கை என்றால் என்ன என்று. இதில் தனியா சைட் டிஷ் வேறு உமக்கு வேண்டுமாக்கும்.

    குருப்ரியன்

    பதிலளிநீக்கு
  24. //பல் மட்டும் கொஞ்சம் வலுவாக இருக்கவேண்டும் அவ்வளவுதான்//

    கொடுத்து வைத்தவர் அய்யா நீங்கள். 80 வயதில் பல் நன்றாக இருக்கிறது கெட்டியான கச்சாயத்தை கடித்து சாப்பிடுகிறீர்கள் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். உங்கள் வீட்டுக்காரம்மாவிடம் உங்களுக்கு திருஷ்டி சுற்றி போடா சொல்லுங்கள். யார் கண்ணாவது பட்டு விடப்போகிறது.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  25. //பல் வலிக்க ஆரம்பித்தவுடன் வடை சாப்பிடுவதை நிறுத்தி விடலாம். கொஞ்ச நேரம் டிவி பார்த்துக்கொண்டு பல்களுக்கு ஓய்வு கொடுங்கள்//

    அனுபவி ராஜ் அனுபவி பாட்டுதான் எனக்கு ஞாபகம் வருகிறது.

    காயத்ரி மைந்தன்

    பதிலளிநீக்கு
  26. //இதுதாங்க கொங்கு பூமியில புது மாப்பிள்ளைக்கு செஞ்சு போடற பலகாரமுங்க//

    என்னது? மாப்பிள்ளையின் பல்லை சோதனை செய்ய இப்படி ஒரு வழியா? மாட்டைத்தான் பல்லைப் பிடித்துப் பார்ப்பார்கள். கொங்கு நாட்டு ஆட்கள் மாபிள்ளையின் பல்லையும் சோதித்து பார்க்கிறார்களே. சரியான ஆட்கள்தான்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  27. //மறுநாள் சாப்பிடும்போது ருசி இன்னும் அதிகமாக இருக்குமுங்க//

    நேத்து வச்ச மீன் குழம்புதான் ருசியாக இருக்கும் என்று நினைத்தேன்
    நேத்து செஞ்ச கச்சாயம் கூட ருசியாக இருக்கும் என்று இப்போதுதான் தெரிந்தது.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  28. இப்படி வட்டார பலகாரங்களை, இன்றைய இளைய தலைமுறையினர் மறந்தே போய்விட்ட பலகாரங்களை வரிசையாக பதிவிடுங்கள். பலருக்கு உபயோகமாக இருக்கும்.

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
  29. ஐயா இதென்ன வடை வாரமா ? இல்லை வரமா ?
    வடையை, தமிழ் மணத்தில் நுளைக்க 7

    பதிலளிநீக்கு
  30. Hello Boraandi,

    Onga gang oreyadiya comment podaraangale boraandi !!
    Ennamo kalakkunga boraandi.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்யா வயித்து வலி பதிவரே, இன்னும் காணலியே என்று யோசித்துக் கொண்டு இருந்தேன். என்ன சொல்லறீங்க என்கிறதை தமிழிலேயே சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே. இதையும் நானே செய்யணுமா?

      //ஒங்க கேங்க் ஒரேயடியா கமென்ட் போடராங்களே போராண்டு !! என்னமோ கலக்குங்க போராண்டி//

      அது ஒண்ணுமில்ல "வயித்து வலி". உங்களுக்கு வயித்து வலியை அதிகப் படுத்தறதுக்காகத்தான் இப்படி பண்ணறாங்க.

      நீக்கு
    2. ஐயா இதை வெளியிட்டு எதற்காக ? பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள் தேவையில்லையே...?

      நீக்கு
    3. அன்புள்ள கில்லர்ஜி,
      பதிவுலகத்தில் எப்படிப்பட்ட மனிதர்களெல்லாம், எப்படி எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பது என் அவா. அந்த வகையில் எப்படிப்பட்ட பின்னூட்டம் வந்தாலும் (ஆபாசமானவைகளைத் தவிர) பிரசுரிப்பது என்ற கொள்கையை வெகு நாட்களாகக் கடைப்பிடிக்கிறேன். முன்பெல்லாம் இந்த மாதிரி பின்னூட்டங்களைக் கண்டால் மனது சஞ்சலமடையும். அப்படி மனது சஞ்சலமடைவது இந்த வயதில் கூடாது என்பதால் இவைகளை பிரசுரித்து வருகிறேன். இப்போது இம்மாதிரி பின்னூட்டங்கள் என்னுள் எந்த சஞ்சலத்தையும் ஏற்படுத்துவதில்லை. இது ஒரு தவம் அல்லவா? நன்மை தீமைகளை ஒரே மாதிரி எதிர்கொள்ளும் மனநிலை, வளர்ந்த மனநிலை அல்லவா?

      நான் பெரிய துறவி என்று நினைக்கவில்லை. ஆனாலும் முடிந்த வரையில் மன சஞ்சலங்களை வெல்லவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.

      நான் நினைப்பது சரியென்று என் மனதிற்குப் படுகின்றது. உங்கள் கருத்தையும் சொல்லுங்கள். நான் செய்வது தவறு என்றால் என்னைத் திருத்திக்கொள்ள நான் எப்போதும் தயங்குவதில்லை. ஏனெனில் உங்கள் கருத்தை நான் மிகவும் மதிக்கிறேன். நீங்களும் இம்மாதிரி ஒரு தவ வாழ்வு வாழ்கிறீர்க்ள அல்லவா?

      நீக்கு
    4. அன்பின் ஐயா.
      நீங்களும் இம்மாதிரி ஒரு தவ வாழ்வு வாழ்கிறீர்க்ள அல்லவா ?
      உண்மைதான் ஐயா, நானும் இதுவரை எந்தப் பின்னூட்டத்தையும் நான் மறைத்ததில்லை அதற்க்கும் தங்களைப்போல பதில் சொல்லித்தான் வருகிறேன்,
      ஆனால் தங்களது வயதுக்குகூட மரியாதை கொடுக்காமல் இவ்வளவு கீழ்த்தரமாக எழுதுவது எனது மனதுக்கு கஷ்டமாக இருந்தது ஆகவே சொன்னேன் ஐயா வேறொன்றுமில்லை.
      தங்களது செயல் பாராட்டத்தக்கது. எனது கருத்தை தலறாக நினைக்க வேண்டாம் நன்றி.

      நீக்கு
  31. // இதுதாங்க கொங்கு பூமியில புது மாப்பிள்ளைக்கு செஞ்சு போடற பலகாரமுங்க.//

    ஐயா இது மாதிரி பலகாரமெல்லாம் தஞ்சை பகுதி மாப்பிள்ளைகளுக்கு ஏன் மற்ற பகுதி மாப்பிள்ளைகளுக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. தங்களின் பதிவை படித்ததும் வீட்டில் அதை செய்ய சொல்லி சாப்பிடவேண்டும் போல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  32. கோதுமை வடை... செய்முறையும்,விளக்கங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  33. ஐயா! இது புதுசுங்க! நல்லாருக்குங்க...செஞ்சு பாத்துருவோமுங்க.....சம்பாக் கோதுமை கிடைக்குதுங்க.....அதுலதாங்க நாங்க திருனெல்வேலி அல்வா செய்வோமுங்க....ஆனா யாருக்கும் அல்வா கொடுக்க மாட்டோமுங்க....அப்புறம் ஐயா சம்பா கோதுமை ரவை வீட்டுல செய்வோமுங்க...இப்பதான் அரிசி கூடாதுன்றாங்கல்ல அதனால் மார்க்கெட்ல எல்லாம் வருதுங்க...

    தங்களின் பாணியில் அருமையான வழக்கமான நகைச் சுவையுடன் சுவையான விஷயங்களைத் தருகின்றீர்களே ஐயா உங்கள் பரம ரசிகர்களாகிவிட்டோம்..

    ஐயா தங்கள் தளத்தில் அது என்ன இப்படி பல பெயரில்லா முகமூடிகள் வருகின்றார்கள். உங்கள் விளக்கமும் அருமை. நாங்களும் எந்தப் பின்னூட்டமாக இருந்தாலும் போட்டுவிடுவோம். அசிங்கமான பின்னூட்டங்கள் என்றால் போடுவதில்லை. வாதம் என்றாலும் போட்டு விடுகின்றோம் ஐயா! முதலில் எங்களுக்கும் சிறிது மனம் வருந்தியதுண்டு. இப்போது அப்படி இல்லை....

    அருமையான சுவையான ஒரு தின்பண்டம் சொன்னதற்கு.....சுவைக்குச் சுவை சேர்க்கும் தங்கள் எழுத்துக்கள்...

    பதிலளிநீக்கு
  34. அன்புள்ள துளசிதரன்,
    பின்னூட்டங்களைப் பொருத்த மட்டில் உங்களுடைய கருத்தேதான் என்னுடையதும். பதிவுலகம் பொது வெளி. யாரும் யாரையும் எப்படி வேண்டுமானாலும் விமரிசிக்கலாம். அதை எதிர் கொண்டு சமாளிப்பதுதான் நாம் ஏற்றுக் கொண்டுள்ள சவால். இது முடியவில்லை என்றால் பதிவை முடக்கிவிட்டு ஒரு ஓரமாக நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கவேண்டியதுதான். களத்தில் இறங்கிய பிறகு அடி வாங்கும்போது, ஐயோ அம்மா என்று கத்தக்கூடாது. அடியைப் பொறுத்துக்கொண்டு எதிர்த்து நிற்பதுதான் வீரம், தன்மானம், சுயமரியாதை எல்லாம்.

    நான் சொல்வது சரிதானே?

    பதிலளிநீக்கு
  35. புதுசு புதுசாய் ஏதேதோ சுவையாகத்தான் சொல்றீங்க !

    ஆனால் நான் லேட்டா வந்ததினால் எனக்கு ’வடை போச்சே’ :)

    பதிலளிநீக்கு