திங்கள், 22 டிசம்பர், 2014

VGK 13 - வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி மு.பொ.போ.மு.க. உதயம் !!

இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.

இது ஒரு நெடுங்கதை. இதற்கு விமர்சனம் எழுதுவதானால் அது ஒரு நாவலில்தான் முடியும். ஆகவே சுருக்கமாக சொல்லுகிறேன்.

எந்த ஒரு ஆபீசிலும் இந்த மாதிரி ஸ்ரீனிவாசன்களைக் காணலாம். வெறும் சவடால் அடித்துக் கொண்டே காலத்தை ஓட்டுவார்கள். மற்றவர்களை குல்லாய் போட்டே தங்களை காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். இத்தகைய ஒரு நபரை கதாசிரியர் தான் வேலை செய்த ஆபீசில் பார்த்திருக்கவேண்டும்.

அதை அடிப்படையாக வைத்து இந்த நெடுங்கதையை பின்னியிருக்கிறார். நம் கதை நாயகருக்கு வாழ்க்கையில் இரண்டே இரண்டு நிலைகள்தான். ஒன்று வழுவட்டை நிலை, அடுத்தது எழுச்சி நிலை. இந்த இரண்டு வார்த்தைகளும் அவர் வாயில் இருந்து அனாயாசமாக வெளி வருகின்றன. சோர்விற்கு அவர் “வழுவட்டை” என்றும் சுறுசுறுப்பிற்கு “எழுச்சி” என்றும் கூறுகிறார் என்பது புலனாகிறது. இது ஏதாவது ஒரு ஊரின் வட்டார வழக்காக இருக்கலாம். கதையைப் படித்து முடிக்கு முன் நாமும் இந்த இரண்டு வார்த்தைகளுக்கு மிகவும் பரிச்சயமாகி விடுகிறோம்.

அவர் குடும்ப வாழ்க்கையைப் பற்றி கூறும் தத்துவங்கள் ஒவ்வொரு பிரம்மச்சாரியும் அறிந்து கொள்ள வேண்டியவை. இதை அவர் நம் இளம் கதாநாயகனுக்கு போதிக்கும் முறை இருக்கிறதே, அது 60 வயதில்தான் வரும். அவருடைய துபாய் டூரைப்பற்றிய விவரங்கள் ஒரு தனி பாணி.

எல்லாவற்றிலும் இசையில் சுருதி போல ஆதாரமாக ஓடுவது பொடி உபயோகம்தான். அதன் மேல் உள்ள ஈர்ப்பு, மற்ற எல்லா ஆசைகளையும் புறந்தள்ளி விடுகிறது. பொடி போடும் உத்தி எத்தனை வகைப்படும் என்று அவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். பொடி போடுபவர்கள் செய்யும் அட்டூழியங்களையும் அப்படியே புட்டுப் புட்டு வைத்திருக்கிறார் ஆசிரியர். நேரடி அனுபவம் இல்லாமல் இப்படி விவரிப்பது சாத்தியமில்லை.

அவர் ரிடையர் ஆகுமுன் அனைவருக்கும் பொடி டின் பரிசளிப்பது அவருடைய பொடி மோகத்திற்கு ஒரு முத்தாய்ப்பு.

ஆசிரியருக்குப் பாராட்டுகள்.

8 கருத்துகள்:

  1. நீங்களும் சின்னதாக புட்டுப் புட்டு வைத்து விட்டீர்களே...! உண்மையாக இருக்குமோ...?

    பதிலளிநீக்கு

  2. பொடி போடுவதை வைத்து ஒரு நகைச்சுவை கலந்த நெடுங்கதையை, சிறுகதை மன்னன் திரு வைகோ அவர்களால் தான் தர முடியும் என்பதற்கு இந்த நெடுங்கதை ஒரு சான்று, திரு வைகோ அவர்களின் வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி மூ.பொ.போ.மு.க. உதயம் !! என்ற நெடுங்கதை மூக்குப்பொடி போடுவோர் மேல் ஒரு தனி மரியாதையே ஏற்படுத்திவிட்டது. வழுவட்டை ஸ்ரீனிவாசன் அவர்கள் மூக்குபொடி போடும் இலாகவத்தை கதாசிரியர் அவர்கள் நுணுக்கமாக விளக்குவதைப் பார்க்கும்போது நீங்கள் சொன்னது போல் ‘’ நேரடி அனுபவம் இல்லாமல் இப்படி விவரிப்பது சாத்தியமில்லை.’’ என்பது சரியே. பல அலுவலகங்களில் இது போல் உள்ள (நல்ல) ‘பழம் பெருச்சாளிகள்’ இருப்பதுண்டு. அவர்கள் பற்றி சுவாரஸ்யமாக ‘பொடி’ வைத்து எழுதிய திரு வைகோ அவர்களுக்கு பாராட்டுக்கள்!


    நான் கூட புதிய கட்சி உதயம் என்ற தலைப்பை பார்த்ததும் நாம் கூட அதில் சேரலாமோ என நினைத்தேன். ஆனால் அதில் இணைய எனக்கு தகுதி இல்லை என்பதால் அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன்!

    பதிலளிநீக்கு
  3. வே.நடனசபாபதி

    //பொடி போடுவதை வைத்து ஒரு நகைச்சுவை கலந்த நெடுங்கதையை, சிறுகதை மன்னன் திரு வைகோ அவர்களால் தான் தர முடியும் என்பதற்கு இந்த நெடுங்கதை ஒரு சான்று//

    Thank you very much, Sir. - VGK

    பதிலளிநீக்கு
  4. என் வேறொரு கதையிலிருந்து எடுத்துத்தாங்கள் இங்கு போட்டுள்ள படம், தங்கள் வாசகர்களை தங்கள் பதிவுப்பக்கம் சுண்டி இழுப்பதாக அமைந்துள்ளது. :)))))

    மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள ஐயா, வணக்கம்.

    தங்களின் இந்த விமர்சனம் படிக்க மிகவும் சுருக்கமாகவும், சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளது.

    தங்கள் தள வாசகர்களையும் அந்த என் சிறுகதையை வாசிக்க வைக்கத் தூண்டுதலாகவும் அமைந்துள்ளது.

    தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததற்கும் அதை இன்று இங்கே தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

    அன்புடன் கோபு [VGK]

    ooooooooooooooooooooooooooo

    பதிலளிநீக்கு