திங்கள், 30 செப்டம்பர், 2013

நட்பு யாருக்குள் தொடரும் ?


மகாபாரதக் கதைகளில் முக்கியமானது துரோணருக்கும் துருபதனுக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமையும் அதனால் ஏற்பட்ட மோதல்களும். ஆனால் இந்தக் கதையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை நிறைய இருக்கிறது.

அக்னி வேச்யர் என்ற குருவிடம் துரோணரும் பாஞ்சால இளவரசன் துருபதனும் கல்வி கற்றார்கள். அப்போது இருவருக்குமிடையில் மிகுந்த நட்பு இருந்தது. துருபதன் அப்போது துரோணரிடம் சொன்னான், "நான் அரசனான பின்பு உனக்கு பாதி ராஜ்யம் வேண்டுமென்றாலும் கொடுப்பேன்" என்றான்.

கால ஓட்டத்தில் இருவரும் வெவ்வேறு நிலைக்கு மாறினார்கள். துருபதன் பாஞ்சால நாட்டின் ராஜாவானான். துரோணருக்கு வாழ சரியான வழி இல்லாமற்போனது. தன் குழந்தைக்குப் பால் வாங்கிக்கொடுக்கக் கூட சக்தியில்லாமல் போனது. அப்போது துருபதன் ஞாபகம் வந்து, அவனிடம் ஒரு பசு மாடு வாங்கி வரலாம் என்று துரோணர் அவன் நாட்டுக்குப் போனார்.

வாயிற்காப்போன் யாரென்று கேட்டதற்கு நான் துருபதனின் நண்பன், அவனைக்காண வந்திருக்கிறேன் என்றார். வாயிற்காப்போன் இதை மன்னனிடம் அப்படியே போய்ச்சொன்னான். திருபதன் துரோணரை சபைக்கு வரச்செய்து அவரை அவமதித்தான். நீ ஒரு பிச்சை எடுத்து பிழைக்கும் ஒரு ஏழைப்பார்ப்பான். நானோ இந்நாட்டு மன்னன். நீ என்னை உன் நண்பன் என்று சொல்லிக்கொள்ள என்ன அருகதை இருக்கிறது. எப்பொழுதோ சிறு வயதில் நீ என் நண்பனாக இருந்திருக்கலாம். ஆனால் கால ஓட்டத்தில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்படுகின்றன. பழைய உறவுகள் மறைந்து போகின்றன.

தவிர, நட்பு என்பது சரி சமமானவர்களுக்கிடையேதான் ஏற்படும். பணக்காரனுக்கும் ஏழைக்கும் நட்பு ஏற்பட முடியாது. வீரனுக்கும் கோழைக்கும் நட்பு இருக்க முடியாது. இதையெல்லாம் யோசிக்காமல் நீ என்னை நண்பனென்று கூற உனக்கு என்ன தகுதி இருக்கிறது. இவ்வாறு துரோணரை துருபதன் அவமானப்படுத்தி திருப்பி அனுப்பி விட்டான்.

பிற்காலத்தில் துரோணர் அர்ஜுனன் மூலமாக துருபதனை பழிவாங்கியது அனைவரும் அறிவர். இந்தக் கதையின் நீதி இன்றும் நடைமுறையில் பொருந்துகிறது என்பது ஒரு உண்மை. சிறு வயதில் நல்ல நண்பர்களாக இருப்பவர்கள் பின்னாளில் அந்தஸ்து வேறுபாட்டினால் அந்த நட்பைத் தொடர முடிவதில்லை. உறவுகளுக்குள்ளும் அதே நிலைதான். வாழ்க்கையில் உயர்ந்த வசதிகள் பெறும் உறவினர்கள் தங்கள் ஏழை உறவினர்களைப் புறக்கணிப்பதைப் பார்க்கிறோம்.

நட்பு, உறவு ஆகியவைகளை விட, திருமணங்களில் இந்த சமநிலை அந்தஸ்து மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. சம்பந்திகள் சம நிலை அந்தஸ்து இல்லாவிட்டால் அந்த திருமணங்கள் பெரும்பாலும் வெற்றியடைவதில்லை. காதல் திருமணங்கள் தோல்வியுறுவதற்கு முக்கிய காரணம் இந்த அந்தஸ்து வேறுபாடுதான்.

இந்தக் காலத்து தெய்வீகக் காதலர்களும் அவர்களைப் போற்றுபவர்களும் இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த சமூகத்திற்கும் நன்மை பயக்கும்.

புதன், 25 செப்டம்பர், 2013

ம்யூச்சுவல் பண்ட் என்றால் என்ன?


இது ஒரு உயர்ந்த நோக்கம் கொண்டு ஆரம்பிக்கப் பட்ட ஒரு நிதி திட்டம். ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல் இது இன்று ஒரு நாற்றம் பிடித்துப்போன அழுகிய திட்டம்.

முதல் முதல் ஆரம்பிக்கப்பட்ட ம்யூச்சுவல் பண்ட் திட்டம் யூடிஐ என்று அழைக்கப்பட்டது. இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் மனிதர்களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருந்தது. (இன்று அது கிலோ என்ன விலை என்று கேட்குமளவிற்குப் போய்விட்டது வேறு விஷயம்.) மக்களிடமிருந்து திரட்டிய பணத்தை நல்ல வருமானம் தரக்கூடிய கம்பெனிகளில் ஷேர்களாக முதலீடு செய்தார்கள். வந்த வருமானத்தில் நிர்வாக சொலவுகள் போக மீதியை முதலீடு செய்த பொது மக்களுக்கு பிரித்துக் கொடுத்தார்கள்.

நிர்வாகச் செலவுகள் மொத்த முதலீட்டில் 1 அல்லது 2 சதவிகித த்திற்கு மேல் போகக்கூடாது என்ற வரைமுறை இருந்தது. வெகு காலத்திற்கு இது ஒன்றுதான் ம்யூச்சுவல் பண்ட் வகையில் இருந்தது. பிறகு அரசாங்கத்தை நடத்தும் மக்கள் பிரதிநிதிகள் மனச்சாட்சி என்ற வேண்டாத ஒன்றை தூக்கிப்போட்டு விட்டார்கள்.

"மீதே மாதி, மாதே மாதி" தெலுங்கில் சொல்லப்படும் ஒரு சொல்வடை. அதாவது நமக்குள் பேதமில்லை என்று காட்டுவதற்காக சொல்லப்படுவது. கூர்ந்து கவனித்தால்தான் அதன் பொருள் சரியாக விளங்கும். "என்னுடையது என்னுடையதே, உன்னுடையதும் என்னுடையதே".

இரண்டு பேர் சேர்ந்தாங்களாம். அதில் ஒருவன் புத்திசாலி. அவன் அடுத்தவனைப் பார்த்து சொல்கிறான். இப்போது நாம் இருவரும் சும்மாதானே இருக்கிறோம். நீ வீட்டுக்குப்போய் கொஞ்சம் அவல் கொண்டு வா, நான் வீட்டிற்குப்போய் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலக்குவோம். இருவரும் அதை ஊதி ஊதி தின்போம் என்றானாம். இவன் கொண்டு வருவதோ வெறும் காசுக்காகாத உமி. ஏதோ இவனும் தன் பங்குக்கு ஒன்றை கொண்டு வருகிறானாம். கதை எப்படி பார்த்தீர்களா?

இதை நான் இன்னும் கொஞ்சம் மேம்படுத்தியிருக்கிறேன். நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலக்குவோம். நீ ஊதி ஊதிக் கொடு, நான் சாப்பிடுகிறேன். மேம்போக்காகப் பார்த்தால் ஆளுக்கு ஒரு பொருள் கொண்டு வருகிறார்கள், ஆளுக்கு ஒரு வேலை செய்கிறார்கள். ஆனால் ஆதாயம் யாருக்கு என்று பார்த்தீர்களா?

மனச்சாட்சியைக் கடாசி விட்ட அரசாங்க அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் மக்களை எப்படி எப்படி மொட்டை அடிக்கலாம் என்று பார்த்தார்கள். அப்போதுதான் இந்த ம்யூச்சுவல் பண்ட் திட்டம் தோன்றியது. மக்கள் தங்கள் சேமிப்பை அப்போது பேங்குகளில் பிக்சட் டெபாசிட்டாக வைத்திருந்தார்கள். வரும் வட்டியில் திருப்தி அடைந்தார்கள்.

அவர்களுக்கு ஆசை காட்டினார்கள். ம்யூச்சுவல் பண்ட்டில் பணம் போட்டால் அது குட்டிக்கு மேல் குட்டி போடும். பேங்க் டெபாசிட் வட்டியை விட இரண்டு மூன்று மடங்கு வருமானம் கிடைக்கும் என்று விளம்பரப்படுத்தினார்கள். ஆனால் நடந்தது என்ன? முதலுக்கே மோசம் வந்து விட்டது. ம்யூச்சுவல் பண்ட்டில் பணம் போட்டவர்கள் எல்லாம் தலையில் துண்டைப்போட்டுக் கொண்டார்கள்.

ஏன் இவ்வாறு நேர்ந்தது? நான் பொருளாதார நிபுணன் அல்ல என்று முதலிலேயே சொல்லி இருக்கிறேன். ஆனால் பொது அறிவு இருக்கிறது. இத்தகைய ம்யூச்சுவல் பண்ட்களில் நிர்வாகச்செலவு 2 சதத்திற்கு மேல் போகக் கூடாது என்ற ரூலை முதலில் தூக்கி எறிந்தார்கள். பொது மக்கள் முதலீடு செய்யும் பணத்தை நல்ல கம்பெனிகளில் ஷேர் வாங்க வேண்டுமல்லவா? அதற்காக பெரிய பொருளாதார நிபுணர்களை லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து வேலைக் கமர்த்தினார்கள். (எல்லோரும் ஆளும் வர்க்கத்திற்கு ஏதோ ஒரு வகையில் மாமன் மச்சான் உறவுகள்)

இவர்களும் மனச்சாட்சியை துடைத்து விட்டு வந்தவர்கள்தான். புதிதாக ஆரம்பிக்கும் கம்பெனிகள், ஆரம்பித்து திவாலாகும் நிலையில் இருக்கும் கம்பெனிகள் இவைகளைத் தேடிப்பிடித்து முதலீடு செய்தார்கள். அந்தக் கம்பெனிகளும் மிகுந்த நன்றியைக் காட்டினார்கள். அப்புறம் என்ன, ம்யூச்சுவல் பண்ட் வருமானமா ஈட்டும்? வருடா வருடம் நஷ்டம்தான். மக்களுக்கு அவர்கள் போட்ட பணத்தில் பாதி கூட கொடுக்க முடியவில்லை. ம்யூச்சுவல் பண்ட்டை திவால் பண்ணினார்கள்.

ஈமு கோழி, தேக்கு மரம் போன்ற திட்டங்களுக்கும் இதற்கும் அதிக வித்தியாசமில்லை. என்ன அவைகள் தனி நபர்களால் ஆரம்பிக்கப்பட்டவை. ம்யூச்சுவல் பண்ட்கள் பெரிய அரசாங்க நிறுவனங்களினால் ஆரம்பிக்கப்பட்டவை. தனி நபர்களை சட்டத்தினால் கைது பண்ணி விட்டார்கள். அரசாங்க நிறுவனங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் இருவரும் செய்தது மக்களை ஏமாற்றியதுதான்.

இதில் எனக்குப்புரியாத ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இன்றும் புதிது புதிதாக ம்யூச்சுவல் பண்ட்கள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. மக்களும் பணத்தைப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். மொட்டை அடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

நானும் ஒரு ம்யூச்சுவல் பண்ட் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். பதிவர்கள் அனைவரும் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன். 

திங்கள், 23 செப்டம்பர், 2013

மைதா மாவும் மனிதர்களும்.


இந்தப்புரோட்டாவைப் பாருங்கள். உடனே சாப்பிடவேண்டும் என்று தோன்றவில்லையா? இதைப்போய் சிலர் வெறுக்கிறார்களே என்று நினைக்கும்போது வேடிக்கையாக இருக்கிறது.

மைதா தயாரிக்கப்படும் விதம் பற்றி விக்கிபீடியா சொல்வது.

Maida is a finely milled and refined and bleached (using chemical bleach) wheat flour, closely resembling cake flour, and used extensively in making Indian fast food, Indian bakery products such as pastries and bread,[1] varieties of sweets and sometimes in making traditional Indian breads such as paratha and naan.[2] It is made from the endosperm (the starchy white part) of the grain, while the fibrous bran is removed in the mill.
Originally yellowish, maida is popular in a white color, bleached with benzoyl peroxide. The use of benzoyl peroxide in food is banned in China[3] and in theEuropean Union[3] (including the UK[4]).
Maida contains alloxan[citation needed], the source of which may be direct use as softener or the by-product of the bleaching agent chlorine dioxide. Maida is often softened using alloxan[citation needed] which is known to destroy beta cells in the pancreas of rodents and other species, causing diabetes mellitus. The agent, chlorine dioxide, used to bleach flour is reported to produce diabetes-causing contaminant alloxan when reacting with the proteins contained in flour. Studies show that alloxan, the chemical that makes white flour look "clean" and "beautiful," destroys the beta cells of the pancreas[citation needed] in rodents. Some studies have shown that alloxan is not toxic to the human beta-cell, even in very high doses, probably because of differing glucose uptake mechanisms in humans and rodents.[5][6]

ஒரு கதை சொல்கிறேன். கேளுங்கள்.

ஒரு ஊரில் மூன்று நண்பர்கள் இருந்தார்கள். ஒருவர் சங்கீத வித்வான். இன்னொருவர் தத்துவ ஞானி. மூன்றாமவர் வைத்தியர்.

இந்த மூவரும் ஒரு சமயம் க்ஷேத்தராடனம் சென்றார்கள். ஒரு ஊரில் சென்று ஒரு சத்திரத்தில் தங்கினார்கள். அந்தக் காலத்தில் ஓட்டல்கள் இல்லை. அவரவர்களே சமைத்து சாப்பிட்டுக் கொள்ளவேண்டும். இதற்காக அவர்கள் சத்திரத்து மணியகாரனிடம் சமையல் சாமான்களை வாங்கி சமைக்க ஆரம்பித்தார்கள்.

பக்கத்திலேயே அரிசி கிடைத்தது. சங்கீத வித்வானை சாப்பாடு வடிக்கச் சொல்லி விட்டு மற்ற இருவரும் காய்கறிகளும் நெய்யும் வாங்கச் சென்றார்கள். தத்துவ ஞானி நெய் வாங்கச் சென்றார். மருத்துவர் காய்கறிகள் வாங்கச் சென்றார்.

தத்துவ ஞானி நெய் வாங்கினார் கடைக்காரன் அந்த நெய்யை ஒரு தொன்னையில் ஊற்றிக் கொடுத்தான். வாங்கிக்கொண்டு வரும் வழியில் தத்துவ ஞானி சிந்தித்தார். இப்போது நம் கையில் இரண்டு வஸ்துக்கள் இருக்கின்றன. எது எதற்கு ஆதாரம்? இதைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று சிந்தித்தார்.

இப்போது தொன்னையில் நெய் இருக்கிறது. ஆகவே தொன்னை நெய்க்கு ஆதாரம். ஏன் நெய் தொன்னைக்கு ஆதாரமாய் இருக்கக் கூடாது? கண்டு பிடித்து விடுவோம் என்று தொன்னையை தலைகீழாகப் பிடித்தார். நெய் முழுவதும் தரையில் சிந்தி விட்டது. ஆஹா, தொன்னைதான் நெய்க்கு ஆதாரம். இந்த தத்துவத்தைக் கண்டு பிடித்த சந்தோஷத்துடன் சத்திரத்திற்குத் திரும்பினார்.

காய்கறிகள் வாங்கப் போன மருத்துவர், காய்களைப் பார்த்தார். கத்தரிக்காய் -
பித்தம், வாழைக்காய் - வாயு, வெங்காயம் - சூடு. கருணைக்கிழங்கு - மந்தம், இப்படி ஒவ்வொரு காய்க்கும் ஒவ்வொரு குறை சொல்லிக்கொண்டு ஒரு காயையும் வாங்காமல் சத்திரத்திற்கு வந்து சேர்ந்தார்.

சாதம் வடிப்பதற்காக விட்டுப் போன பாகவதரோ, அடுப்பு பற்ற வைத்து பானையை வைத்து அதில் அரிசியைப் போட்டார். தேவையான தண்ணீரை ஊற்றி அடுப்பை நன்றாக எரிய விட்டார். உலை சூடாகி தளதளவென்று கொதுக்க ஆரம்பித்தது. அந்த சத்தம் நல்ல தாள சத்தமாய் இருந்தது. அந்த தாளத்திற்கேற்ப பாகவதர் பாட ஆரம்பித்தார். கச்சேரி நன்றாகப் போய்க்கொண்டு இருந்தது. அப்போது சாதம் நன்கு வெந்து விட்டபடியால் கொதி அடங்கி விட்டது. தாளச் சத்தம் நின்று போய்விட்டபடியால் பாகவதரால் தொடர்ந்து பாட முடியவில்லை.

அவருக்கு கோபம் வந்து விட்டது. சோற்றுப் பானையை ஒரு உதை விட்டார். பானை கீழே விழுந்து உடைந்து போய் சோறு எல்லாம் வீணாகிப்போய் விட்டது. பிறகு என்ன செய்வது? மூவரும் அன்று பட்டினி கிடந்தனர்.

இந்தக் கதையை எதற்காகச் சொன்னேன் என்றால், இப்படி ஒவ்வொரு பொருளிலும் குறை கண்டு பிடித்துக் கொண்டு இருந்தால் அப்புறம் ஒன்றையும் சாப்பிட முடியாது என்பதை வலியுறுத்தத்தான்.

மைதா மாவில் செய்யப் படும் புரோட்டா உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று இப்போது சொல்லுகிறார்கள். புரோட்டா, இன்றோ நேற்றோ கண்டுபிடிக்கப்பட்ட பதார்த்தம் அல்ல. ஏறக்குறைய ஐம்பது வருடங்களாக புழக்கத்தில் இருந்து வரும் ஒரு உணவுப் பண்டம். நமக்கு முந்தி இரண்டு தலைமுறையினர் இந்த புரோட்டாவை சாப்பிட்டு ஜீரணம் பண்ணி வாழ்ந்து செத்துப் போனார்கள். அவர்கள் எல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. அப்போதும் டாக்டர்கள் இருந்தார்கள்.

சரி, புரோட்டாவை விட்டு விடுவோம். புரோட்டா தவிர மைதா மாவில் வேறு என்னென்ன தின்பண்டங்கள் செய்கிறார்கள் என்று பார்ப்போமா. அனைத்து பிஸ்கோத்துகள், கேக்குகள், முதலான அனைத்து பேக்கரி ஐட்டங்களுக்கும் மூலப் பொருள் மைதாவே. மைதா மாவில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் கணக்கிலடங்கா. அனைத்து ஓட்டல்களிலும் தயாரிக்கப்படும் பூரி, சப்பாத்திகளில் பாதிக்கு மேல் மைதா கலக்கப்படுகிறது. "நான்", "ருமானி" ரொட்டி இவைகளுக்கு மூலப்பொருள் மைதா மட்டுமே.

மைதா மாவிற்கு எதிராக சொல்லப்படும் முக்கியமான குற்றச்சாட்டு, வளர்ந்த நாடுகளில் இதை புறக்கணித்து விட்டார்களாம். அதனால் நாமும் இதை புறக்கணிக்க வேண்டுமாம். வளர்ந்த நாடுகளின் தரக் கட்டுப்பாட்டு முறைகளை நாமும் கடைப் பிடிக்கவேண்டுமென்றால் இந்தியாவில் சாப்பிடுவதற்கு லாயக்கான உணவு வகைகள் எதுவுமே மிஞ்சாது.

மைதா மாவு கோதுமை மாவை வெளுப்பாக்கி செய்யப்படும் ஒரு மாவு. இந்த வெளுப்பாக்குதலுக்கு "பென்சாயில் பெர்ஆக்சைடு" என்னும் போருளை உபயோகிக்கிறார்கள். அதானால் அந்த ரசாயனம் விஷம் என்று சொல்கிறார்கள். ரிபைஃன்டு ஆயில், சர்க்கரை, இரண்டும் இவ்வாறு ரசாயனங்கள் மூலம்தான் வெளுப்பாக்கப்படுகின்றன. இந்த இரண்டும்தான் சமையலறையின் உயிர்நாடி. இவைகளை என்ன செய்யப்போகிறோம்?

நம் கசாப்புக்கடைகளைப் பார்த்தால் வெள்ளைக்காரன் ஆயுசுக்கும் மட்டனை விட்டு விடுவான். நம் ஓட்டல் கிச்சனைப் பார்த்தால் என்றால் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அவன் ஊருக்கே ஓடி விடுவான். கல்யாண வீட்டில் உணவு தயாரிப்பதைப் பார்த்தால் நமக்கே வாந்தி வந்து விடும்.

கைக்குத்தலரிசிதான் உடலுக்கு நல்லது. எத்தனை பேர் இதைச் சாப்பிடுகிறோம்? டபிள் பாலிஷ் செய்த அரிசிதான் மார்க்கெட்டில் விற்பனையாகிறது. அந்த அரிசி சாப்பாடுதான் மல்லிகைப்பூ மாதிரி பார்வைக்கு நன்றாக இருக்கிறது. அதைத்தானே சாப்பினுகிறோம்.

இத்தனை சீர்கேடுகள் இருந்தும் இந்தியன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்றால் அவனுக்கு இந்த உணவு கிடைப்பதே பெரும் அதிர்ஷ்டமாக இருக்கிறது. தரக் கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற்ற உணவைத்தான் சாப்பிடுவேன் என்று இருந்தால் இந்திய ஜனத்தொகை ஒரே வருடத்தில் சுதந்திரம் வாங்கியபோது இருந்த அளவிற்கு வந்து விடும்.

சரி ஐயா, அப்படி மைதாவில் என்ன விஷத்தை கலக்கிறார்கள் என்று பார்த்தால், மாவை வெள்ளையாக்குவதற்கு பென்சாயில் பெர்ஆக்சைடு என்ற பொருளைப் பயன்படுத்துகிறார்கள். இது செற்கையாகத் தயார் செய்யப்பட்டாலும் அடிப்படையில் இது ஒரு அங்ககப் பொருளே. எல்லா அங்ககப் பொருட்களும் குறுகிய காலத்திலேயே வேதியல் மாற்றம் அடைந்து மறைந்து விடும். மைதா மாவு கடைக்கு விற்பனைக்கு வரும்போது இந்த வேதியல் பொருளின் அளவு, மனிதனுக்குத் தீங்கு விளைவிக்காத அளவிற்குத்தான் இருக்கும். இந்த விஷயத்தை அரசாங்கம் கட்டாயம் கவனித்துக்கொண்டிருக்கும்.

ஏன் இப்போது இந்த மைதா மாவு பிரச்சினை தலை தூக்கியிருக்கிறது என்றால், கேரளாவில்தான் முதலில் இந்தப் பிரச்சினை துவங்கியிருக்கிறது. கேரளாவைப் பொருத்த வரையில் தினம் ஒரு போராட்டம் நடத்தாவிட்டால் அவர்களுக்கு தூக்கம் வராது. மைதா மாவை ஒழிப்போம் என்று காலையில் ஊர்வலம் போய்விட்டு மத்தியானம் டீக்கடைக்குப் போய் ரெண்டு புரோட்டாவும் சாயாவும் சாப்பிட்டு விட்டுத்தான் வீட்டிற்குப் போவார்கள். ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்குவதில் வல்லவர்கள் அவர்கள்.

இந்த மாதிரி சமாச்சாரங்கள் இப்போது ஒரு பேஃஷனாகப் போய்விட்டது. மேனகா காந்தி என்று ஒரு அம்மாள் நாய்களுக்காக கோர்ட்டுக்குப் போய் தெரு நாய்களை கொல்லக்கூடாது என்று தீர்ப்பு வாங்கியிருக்கிறாள். நாய்க்கடி பட்டு ஆஸ்பத்திரிக்குப் போவது சாதாரண ஜனங்கள்தான்.

அந்தக் காலத்தில் பால்தான் சரிவிகித உணவு, எல்லோரும் பால் குடியுங்கள் என்று எல்லா டாக்டர்களும் பரிந்துரைத்தார்கள். இப்போது பால் குடிக்கக்கூடாது என்று சொல்கிறார்களாம். நான் இன்றும் படுக்கப்போகும்போது ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டுத்தான் படுக்கிறேன்.

ஆகவே உணவுக் கலப்படத்தைப் பற்றிய சிந்தனையாளர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன். தயவு செய்து இந்தக் கருமாந்திரம் பிடித்த ஊரில் குடியிருக்காதீர்கள். அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டிற்குப் போய்விடுங்கள். நாங்கள் நிம்மதியாக புரோட்டா, சால்னா சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்து கொள்கிறோம். புரோட்டா இந்தியன் உள்ளளவும் இருக்கும். புரோட்டா வாழ்க.

வியாழன், 19 செப்டம்பர், 2013

ரூபாயின் மதிப்பு ஏன் குறைகிறது?


நான் பொருளாதார நிபுணன் இல்லை. இருந்தாலும் ஓரளவிற்கு பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள முடியும். இந்திய ரூபாயின் மதிப்பு சமீப காலத்தில் மிகவும் குறைந்துள்ளது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஏன், எதனால் என்பது பலருக்குத் தெரியாது.

ஒரு குடும்பம் செழிப்பாக இருக்கிறது என்று எதை வைத்து சொல்கிறோம்? அந்தக் குடும்பத்தில் எல்லோரும் உழைக்கிறார்கள். வருமானம் ஈட்டுகிறார்கள். சிக்கனமாகச் செலவு செய்து மிச்சம் பிடிக்கிறார்கள். பகட்டுக்காக எதுவும் செய்வதில்லை. மீதியாகும் பணத்தை நல்ல முதலீடுகளில் போடுகிறார்கள். கடன் எதுவுமில்லை.

இன்னொரு குடும்பம். பரம்பரைப் பணக்காரர்கள். ஆனால் இப்போது அவர்கள் சொத்துகள் பலவாறாகச் சிதறிக்கிடக்கின்றன. அவைகளிலிருந்து வருமானம் மிகக் குறைவாகவே வருகிறது. குடும்பத்தில் யாரும் வேலைக்குப் போவதில்லை. இன்னொருவரிடம் வேலைக்குப் போய் கை நீட்டி சம்பளம் வாங்குவது கேவலம் என்ற எண்ணம் கொண்டவர்கள். பரம்பரை பகட்டை விடமுடியவில்லை. கடன் வாங்கி செலவு செய்கிறார்கள்.

இதில் எந்தக் குடும்பம் உயர்ந்த குடும்பம்? நான் சொல்லவேண்டியதில்லை.

நாடுகளும் இப்படித்தான். நாட்டில் இருக்கும் எல்லோரும் உழைக்கவேண்டும். உற்பத்தி பெருகவேண்டும். அப்படி பெருகிய உற்பத்தியை வெளிநாடுகளில் சந்தைப் படுத்த வேண்டும். அந்நிய செலாவணி சேரவேண்டும். உள் நாட்டில் கட்டமைப்புகள் வலுவாக இருக்கவேண்டும். தனி மனிதன் மற்றும் பெரிய ஸ்தாபனங்கள் தங்களுடைய பொருளாதாரத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவேண்டும். செல்வம் வீண் போகக் கூடாது. அதை எப்பொழுதும் பயனுள்ள வழிகளிலேயே பயன்படுத்த வேண்டும்.

கடன் வாங்கு முன் அதை திருப்பிக் கட்டமுடியுமா என்று யோசித்து கடன் வாங்கவேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் உபயோகிக்கும் பொருளின் மதிப்பை உணர்ந்து உபயோகிக்கவேண்டும்.

இது எப்படி சாத்தியமாகும்? அந்தந்த நாட்டின் அரசுக் கொள்கைகளே இந்த நடைமுறையை சாத்தியமாக்கும். நம் நாட்டின் அரசாங்க கொள்கைகள் எதை சாதிக்கின்றன? இலவசங்கள் மூலம் சோம்பேறிகளை வளர்க்கிறது. லஞ்சத்தின் மூலம் செல்வம் வீணாகப் போக அனுமதிக்கிறது. கடன் வாங்கி ஆடம்பரம் செய்கிறோம். நாடு முன்னேறுவதற்கான எந்த திட்டத்தையும் ஒழுங்காக நிர்வகிப்பதில்லை.

நாடு சறுக்கிக்கொண்டு இருக்கிறது என்று உலக நாடுகளுக்கெல்லாம் தெரிகிறது. அப்புறம் நம் நாட்டிற்கு உலக சந்தையில் என்ன மரியாதை இருக்கும்? ரூபாயின் மதிப்பு குறையாமல் என்ன செய்யும்?

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

இரு பிரயாணிகள்.


ஒரு ஆங்கிலக் கதையைத் தழுவியது.

ஒரு நாள் நன்கு படித்தவன் ஒருவன் ரயிலில் பிரயாணம் செய்தான். அவன் கூடவே ஒரு விவசாயியும் பிரயாணம் செய்தான். விவசாயியைப் பார்த்தாலே படிக்காத, உலக அனுபவம் இல்லாதவன் என்று பார்ப்பவர்களுக்குத் தோற்றமளித்தான்.

கொஞ்ச நேரம் ஆனதும் படித்தவன் விவசாயியைப் பார்த்து நேரம் போகவில்லையே, ஏதாவது விளையாட்டு விளையாடலாமே என்றான். விவசாயியும் சரி என்று ஒப்புக்கொண்டு, என்ன விளையாட்டு விளையாடலாம் என்று கேட்டான்.

அதற்கு படித்தவன், நான் ஒரு கேள்வி கேட்பேன், அதற்கு நீ சரியான விடை சொன்னால் நான் உனக்கு 100 ரூபாய் கொடுப்பேன், சரியான விடை சொல்லாவிட்டால் நீ எனக்கு 100 ரூபாய் கொடுக்கவேண்டும் என்றான். அதே போல் நீ கேட்கும் கேளவிக்கு நான் சரியான பதிலை சொன்னால் நீ எனக்கு 100 ரூபாய் கொடுக்கவேண்டும். பதில் சொல்ல முடியாவிட்டால் நான் உனக்கு 100 ரூபாய் கொடுக்கிறேன், என்றான்.

விவசாயியும் கொஞ்சம் யோசித்துவிட்டு, நல்ல விளையாட்டாகத்தான் தெரிகிறது. ஆனால் நீங்கள் நன்கு படித்தவர், நல்ல உலக அனுபவம் பெற்றவர், ஆகையால் உங்களுக்கு பல விஷயங்கள் தெரிந்திருக்கும். நானோ ஒரு ஏழை விவசாயி, உலக அனுபவம் பெறாதவன். ஆகையால் நீங்கள் கேட்கும் கேள்விக்கு எனக்கு பதில் தெரியாவிட்டால் நான் ஐம்பது ரூபாய் கொடுக்கிறேன். நீங்கள் நான் கேட்கும் கேள்விக்கு விடை தெரியாவிட்டால் நூறு ரூபாய் கொடுக்கவேண்டும் என்றான்.

படித்தவன், இந்த முட்டாள் அப்படி என்ன கேள்வி கேட்டுவிடப்போகிறான் என்று எண்ணிக்கொண்டு விளையாட்டிற்கு ஒப்புக்கொண்டான். படித்தவன் படிக்காதவனைப் பார்த்து நீயே முதலில் கேள்வி கேள் என்றான்.

படிக்காதவன் "மூன்று கால் உள்ள ஒரு மிருகம் பறக்கிறது, அது என்ன மிருகம்?" என்று தன் கேள்வியைக்கேட்டான்.

படித்தவன் பல நிமிடங்கள் யோசித்தும் அவனால் பதில் கண்டு பிடிக்க முடியவில்லை. நூறு ரூபாயை எடுத்து படிக்காதவனிடம் கொடுத்து விட்டு, அவன் தன்னுடைய கேள்வியைக் கேட்டான்.  "மூன்று கால் உள்ள ஒரு மிருகம் பறக்கிறது, அது என்ன மிருகம்?"

படிக்காதவன் ஐம்பது ரூபாயை எடுத்து படித்தவனிடம் கொடுத்து விட்டு எனக்கும் விடை தெரியவில்லை என்று சொன்னான்.

படித்தவர்கள் ஏன் வாழ்க்கையில் மேல் நிலைக்கு வருவதில்லை என்று புரிகிறதல்லவா.

வியாழன், 12 செப்டம்பர், 2013

கலி முற்றுகிறது.

Delhi records 1,121 rape cases in eight months, (till August, 2013)highest in 13 years
(Read more at: http://ibnlive.in.com/news/delhi-records-1121-rape-cases-in-8-months-highest-in-13-years/421286-3-244.html?utm_source=ref_article)

கடந்த 2012ம் வருடம் நடந்த கற்பழிப்பு நிகழ்வில் இந்தியா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தது மக்களுக்கு நினைவிருக்கும். டில்லியில் மிகவும் உக்கிரமான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சமூகத்தில் பெரும் புரட்சி நடக்கப்போகிறது என்று என்னைப்போன்ற கிழடுகள் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தோம்.

இன்று அந்த டிசம்பர் கொடுமைக்கு நீதி மன்றம் தீர்ப்பு வழங்கப்போகிறது. அந்த தினத்தில் வெளியான செய்தியைப் பாருங்கள்.

இன்றைய இணையத்தில் வெளியான செய்தியின் தலைப்பைத்தான் இப்பதிவின் ஆரம்பத்தில் கொடுத்துள்ளேன். அத்தகைய புரட்சிகரமான ஆர்ப்பாட்டங்கள் நடந்த டில்லியில்தான் இத்தகைய தொடர் கொடுமைகள் நிறைவேறிக்கொண்டு இருக்கின்றன.

கலி முற்றுகிறது என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை.

புதன், 11 செப்டம்பர், 2013

சினிமா தயாரிப்பு மோகம்.


சினிமா உலகத்தில் பணம் கொள்ளை கொள்ளையா கொட்டி வச்சிருக்குது. வேண்டியதெல்லாம் நல்ல சாக்குகள்தான். உள்ளே போனால் சாக்கு நிறைய பணத்தைக் கட்டி கொண்டுவரலாம்.

இந்த எண்ணம் பலருடைய மனங்களில் வேரூன்றி இருக்கிறது. அந்தக் காலத்தில் கோயமுத்தூரில் ஒரு நல்ல டெய்லர். மிக நன்றாகத் தைப்பார். பணம் கொழித்தது. யாருடைய தூண்டுதலினாலோ சென்னைக்கு சினிமா எடுக்கப்போனார். கைக் காசு முழுவதும் போய் கடனாளியாகத் திரும்பி வந்தார். அந்த சோகத்திலேயே உயிரையும் விட்டார்.

பல சினிமா நடிகர்கள் தாங்கள் நடித்து சம்பாதித்த பணத்தை சினிமா எடுக்கிறேன் என்று ஆரம்பித்து ஓட்டாண்டியாய் மாறி, சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் உயிர் விட்ட கதைகள் மக்களுக்குத் தெரியும்.

இதையெல்லாம் பார்த்த பிறகும் நாகர்கோவிலில் இருந்து நாகராஜன் என்று ஒருவர் கோழி கூவுது என்ற படத்தை கடன் வாங்கி எடுத்து விட்டு படம் சரியான வசூல் கொடுக்காததால் தற்கொலை செய்யலாமா என்று யோசனை செய்து கொண்டிருக்கிறாராம்.

எனக்கு என்ன சந்தேகம் என்றால் சினிமா எடுக்கப்போவதற்கு முன்பு செய்யாத யோசனை இப்பொது எதற்கு என்பதுதான்.

சனி, 7 செப்டம்பர், 2013

பதிவர் சந்திப்பு அனுபவங்கள்

கடந்த செப்டம்பர் 1 ந்தேதி சென்னையில் பதிவர் சந்திப்பு, மகாநாடு, திருவிழா நடந்தது அனைத்து பதிவர்களும் அறிந்ததே. இந்த நிகழ்வினால் என்ன பயன் விளைந்தது என்று பலருக்கு ஐயப்பாடு இருக்கிறது.

பதிவர் சந்திப்பினால் பின் வரும் பயன்கள் ஏற்படும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது வழக்கம்.

1. புதிய பதிவுலக நண்பர்கள் கிடைப்பார்கள்.

2. பழைய நண்பர்களைச் சந்தித்து அளவளாவலாம்.

3. புது பதிவுலக உத்திகளை அறிமுகப்படுத்துவார்கள்.

4. நல்ல தியான யோக அனுபவம் கிட்டும்.

5. மதியம் ஒரு விருந்து கிடைக்கும்.

6. ஒரு நான்கைந்து பதிவுகளுக்கான மேட்டர் தேத்தலாம்.

இந்த நோக்கங்கள் எல்லாம் நிறைவேறின. ஆனால் எல்லா பதிவர்களுக்கும் எல்லா நோக்கங்களும் நிறைவேறியிருக்காது.

என்னைப் பொருத்த வரை சில புதிய பதிவர்களை சந்திக்க முடிந்தது. பல பழைய பதிவர்களை சந்திக்க முடிந்தது.

சந்தித்த புதிய பதிவர்கள்:

ரஞ்சனி நாராயணன்.

வெளங்காதவன்

உமாமகேஸ்வரி

மாதங்கி மாலி.

சுப்புத் தாத்தா

கேபிள் சங்கர்

சேட்டைக்காரன்

முருகானந்தம் (கைலாய யாத்திரை)

ஆரூர் மூனா செந்தில்

சந்தித்த பழைய பதிவர்கள்.

புலவர் ராமானுஜம்

வெங்கட் நாகராஜ்

ஜாக்கி சேகர்

சதீஷ் சங்கவி (எங்க ஊரு)

திண்டுக்கல் தனபாலன்

ஜோதிஜி

தருமி

இந்த லிஸ்ட்டில் பல பெயர்கள் விட்டுப் போயிருக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கவேண்டும்.

இந்த அறிமுகங்களில் எனக்கு ஒரு பெரிய சங்கடம் உண்டு. மனித மூளையில் இரு பகுதிகள் உண்டு என்பதும் அதில் ஒரு பகுதியில்தான் இந்த மனித முகங்களையும் பெயர்களையும் சேமித்து வைக்கும் ஆற்றல் உண்டு என்றும் படித்திருக்கிறேன். என்னுடைய மூளையில் இந்தப் பகுதி ரொம்ப வீக். ஒருவரைப் பார்த்து அரை மணிநேரம் பேசிவிட்டு வீட்டுக்குப் போனதும் அவர் பெயர் என்னவென்று ஒரு மணி நேரம் யோசித்தாலும் நினைவிற்கு வராது.

இது புதிதாகப் பார்த்தவரைப் பற்றிய அனுபவம். வரவர நெடுநாள் பழகியவரின் பெயர் கூட உடனே நினைவிற்கு வருவதில்லை. இது வயதானதின் கோளாறு. இதில் கூடுதல் வம்பு என்னவென்றால், பதிவர்கள் ஒவ்வொருவரும் (சிலரைத்தவிர) எல்லோரும் ஒவ்வொரு புனை பெயர் வைத்திருக்கிறார்கள். அவர்களின் தளங்களின் பெயர்கள். பிறகு அவர்களின் நிஜப் பெயர்கள். அவர்களின் ஊர், தொழில். அவர்களின் முகங்கள். இத்தனை சமாசாரங்களையும் சந்தித்து ஓரிரு நிமிடங்களில் மனதில் பதிய வைத்து, பின்பு நினைவு கூர்வது என்ன பெரிய பிரம்ம வித்தை.

சைனாக்கார்ர்கள், ஜப்பான்காரர்கள் இவர்களைப் பார்க்கும்போது எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் எனக்குத் தெரிகிறார்கள். உங்களில் பலரும் இந்த அனுபவம் பெற்றிருப்பீர்கள். அந்த ஊரில் ஒருவருக்கொருவர் எப்படி அடையாளம் கண்டு பிடிப்பார்கள் என்பது எனக்கு எப்போதும் ஆச்சரியமே. இப்போது என்ன ஆகிவிட்டதென்றால், இன்றைய இளைஞர்களும் அதேபோல் ஒன்றுபோல் தெரிகிறார்கள். ஒரேமாதிரி தாடி, ஒரே மாதிரி ஜீன்ஸ் பேன்ட்டும் டி ஷர்ட்டும்.

இவர்களை வித்தியாசப் படுத்தி அடையாளம் கண்டு கொள்ள என்னால் முடிவதில்லை. அதிலும் ஒரே சமயத்தில் நூற்றுக் கணக்கானவர்களைப் பார்க்கும்போது எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. இதுவும் வயசானதினால்தான் என்று நினைக்கிறேன்.

ஆகவே இப்படித்தான் என்னுடைய பதிவர்கள் சந்திப்பு நடந்தது.

பதிவுலகத்தில் புது உத்திகளை ஏதாவது அறிமுகப் படுத்துவார்களா என்று பார்த்தேன். யாரும் அதில் ஆர்வம் காட்டின மாதிரி தெரியவில்லை.

தியானயோக வகுப்புகள் எல்லாம் முன்தினம் இரவே முடிந்து விட்டதாகக் கூறி விட்டார்கள். எனக்கு மிகுந்த ஏமாற்றமாய்ப் போய்விட்டது. அடுத்த பதிவர் சந்திப்புக்கு இரண்டு நாள் முன்னதாகவே போய்விட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

எனக்கு மிகவும் ரசிக்க முடிந்தது மதிய விருந்துதான். அப்படியொரு பிரியாணியை நான் இதுவரை சாப்பிட்டதில்லை. இருப்பதிலேயே உயர்ந்த ரக பாசுமதி அரிசியில் மிகவும் பக்குவமாக செய்யப்பட்டிருந்த பிரியாணி. வயிற்றுக்கு எந்த உபத்திரமும் செய்யவில்லை. விழாக்குழுவினருக்கு என் தனிப்பட்ட பாராட்டுகள்.

அநேகமாக எல்லாப் பதிவர்களும் தலா நான்கு பதிவுகளாவது போட்டோ விட்டார்கள். பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டவர்களும் கலந்து கொள்ளாதவர்களும் பதிவர் சந்திப்பைப் பற்றி பதிவு போட்டுவிட்டார்கள். இன்னும் போடுவார்கள். ஆகவே பதிவுலகின் நோக்கமே பதிவு போடுவதுதானே. அந்த நோக்கம் மிக இனிதாக நிறைவேறியது என்பது ஒரு போற்றத்தக்க விஷயம்.

அடுத்த பதிவர் சந்திப்புக்காக காத்திருப்போம்.

வியாழன், 5 செப்டம்பர், 2013

விவசாய ஆராய்ச்சியும் மனிதர்களின் புரிதலும்.


பிடி கத்தரிக்காய் பற்றிய விக்கிப்பீடியாவின் கட்டுரை.

The Bt brinjal is a suite of transgenic brinjals (also known as an eggplant or aubergine) created by inserting a crystal protein gene (Cry1Ac) from the soil bacterium Bacillus thuringiensis into the genome of various brinjal cultivars. The insertion of the gene, along with other genetic elements such as promotersterminators and an antibiotic resistance marker gene into the brinjal plant is accomplished usingAgrobacterium-mediated genetic transformation. The Bt brinjal has been developed to give resistance against lepidopteron insects, in particular the Brinjal Fruit and Shoot Borer (Leucinodes orbonalis)(FSB).Mahyco, an Indian seed company based in JalnaMaharashtra, has developed the Bt brinjal. The genetically modified brinjal event is termed Event EE 1 and Mahyco have also applied for approval of two brinjal hybrids. The Event EE 1 was introgressed by plant breeding into various local varieties by University of Agricultural Sciences, Dharwad and Tamil Nadu Agricultural University, Coimbatore. Some of the cultivars of brinjal include: Malpur local, Manjari gota, Kudachi local, Udupi local, 112 GO, and Pabkavi local.[1] It was approved for commercialization in India in 2009, but - after an apparent public outcry and rounds of debates in which representatives from Mahyco, the scientific community, and NGO's spoke on the topic - the Indian Environment Minister, Jairam Ramesh, facilitated a moratorium on its release until further, unspecified, tests were conducted.

இந்தப் பதிவில் கூறப்படும் கருத்துகள் என்னுடைய சொந்தக் கருத்துகள். அவை கசப்பாக இருக்கலாம். உங்களுக்குப் பிடிக்காமலும் இருக்கலாம். இந்தப் பதிவைப் படித்த பின் உங்கள் கருத்துகளை பின்னூட்டமிடலாம்.

பெரும்பாலான மனிதர்கள் ஆட்டு மந்தை சுபாவம் கொண்டவர்கள். அதாவது அவர்கள் தலைவர்கள் அல்லது வழிகாட்டுபவர்கள் என்று யாரை நினைக்கிறார்களோ, அவர்கள் என்ன சொன்னாலும் அதை சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.

கூடங்குளம் அணு நிலையம் ஆபத்தானது என்று சொன்னால் அதை ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொண்டு போராட்டம் நடத்துவார்கள். இந்தப் போராட்டம் நியாயமானது என்று பல சான்றுகள் கொடுப்பார்கள். இத்தகைய போராட்டங்கள் யாரால், எதற்காக தூண்டி விடப்படுகின்றன என்பது சிதம்பர ரகசியம்.

உலகில் எந்த ஒரு முன்னேற்றம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதில் குறை காண்பதற்கென்றே பலர் இருக்கிறார்கள். பிடி கத்தரி என்று ஒன்று சந்தைக்கு வந்திருக்கிறது. விவசாய ஆராய்ச்சி அல்லது பயிர்களின் மூலக்கூறுகள் பற்றி ஒன்றும் அறியாத பாமரனும் கூட இதைப்பற்றி கருத்து கூற முற்படுகிறான். அவனுக்கு சிலபல கட்டுரைகள் கைகொடுக்கின்றன.

பயிர்களை ஒட்டு சேர்த்து புதிய ரகம் கண்டுபிடிப்பது என்பது காலம்காலமாக விவசாய ஆராய்ச்சியில் கடைப்பிடிக்கப்படும் ஒரு உத்தி. இது தவிர ரசாயனங்கள் அல்லது வேறு உயிரினங்கிலிருந்து எடுக்கப்பட்ட வேதியல் பொருட்களையும் பயிரினுள் செலுத்தி புதிய ரகப்பயிர்களை உண்டாக்குவார்கள். இவைகளில் சில நல்ல மகசூலும் நோய் எதிர்ப்புச் சக்தியும் கொண்டிருக்கும். அத்தகைய ரகப் பயிர்களை விவசாயிகளுக்குப் பரிந்துரைப்பார்கள்.

இத்தகைய ரகங்கள்தான் இந்தியாவில் பசுமைப் புரட்சி ஏற்பட வழி வகுத்தது. அப்படி புதிய ஆராய்ச்சி மூலம் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ரகம்தான் பிடி கத்தரி. பிடி என்பதின் விளக்கம் (BT = biologically transformed). இது ஒரு ஆராய்ச்சி  நிறுவனத்தால் கத்தரியின் காய்ப்புழு தாக்காத ரகம் வேண்டும் என்பதற்காக கண்டு பிடிக்கப்பட்ட ரகம். இதை ஒரு அயல் நாட்டுக் கம்பெனி மார்க்கெட் செய்கிறது.

இத்தகைய புதிய ஒட்டு ரகங்களின் விதைகளை எல்லா விவசாயியாலும் தயார் செய்து கொள்ள முடியாது. ஒவ்வொரு தடவையும் அந்தக் கம்பெனிதான் விதைகளைக் கொடுக்கவேண்டும்.

இந்த கத்தரி ரகத்தை பல விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் பரிசோதித்து இதைப் பயிரிடலாம் என்று பரிந்துரைத்திருக்கிறார்கள். சில அரசியல் காரணங்களுக்காக இந்த அயல் நாட்டுக் கம்பெனியின் மேல் ஏதோ காரணத்தினால் ஏற்பட்ட விரோதத்தினால், இந்த கத்தரி ரகத்தின் பேரில் பல குற்றச்சாட்டுகள், நீதி மன்றத்தில் வழக்குகள், விவசாயிகளின் போராட்டங்கள் என்று பலவகையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்த கத்தரிக்காய் ஏதோ விஷ ஜந்து, இதை சாப்பிட்டால் நேராக பரலோகம் போய்விடுவார்கள்  என்கிற மாதிரியான ஒரு மாயையை இந்த போராட்டத்திற்குக் காரணமானவர்கள்  உருவாக்கியுள்ளார்கள். இதைப்பற்றி நன்கு கருத்து கூறக்கூடிய விஞ்ஞானிகள் மௌனமாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் இந்த அரசியல் சக்திகளுக்கு எதிராகப் போராடுபவர்கள் அல்ல. அது அவர்கள் வேலையும் அல்ல.

அப்படி அந்த விஞ்ஞானிகள் மௌனம் சாதிப்பதாலேயே இந்த போராட்டம் நியாயமானது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இதைப்போன்ற அபத்தமானது ஒன்றும் இல்லை.

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

நல்ல மாட்டிற்கு ஒரு சூடு.

நானும் பதிவர் விழாவில் கலந்து கொண்டேன். வரவேற்புக்குழு சிறப்பாக பணியாற்றியது. நான் வடபழனி பஸ் நிலையத்தில் இருந்து போன் செய்தவுடன் திரு. சரவணன் அவர்கள் வந்து என்னை ரூமுக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி குளிப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள். குளித்து ரெடியானவுடன் அங்கிருந்து விழா நடக்குமிடம் மிகவும் பக்கம். அதனால் அப்படியே பொடி நடையாக நடந்தேன்.

போகும் வழியில் வசந்தபவன் என்ற ஓட்டல் கண்ணுக்குப் பட்டது. அங்கு சென்று இரண்டு இட்லி, ஒரு வடை, ஒரு காப்பி சாப்பிட்டேன். அந்தக் காலத்தில் பிளாட்பாரக் கடைகளில் "எது எடுத்தாலும் நாலணா" என்று பல சாமான்களைப் போட்டு வியாபாரம் செய்வார்கள். வசந்த பவன் முதலாளியும் அப்படி வியாபாரம் செய்து மேலுக்கு வந்தவர் என்று நினைக்கிறேன். நான் சாப்பிட்ட மூன்று ஐட்டங்களும் ஒரே விலை. இருபத்தியைந்து ரூபாய். மொத்தம் எழுபத்தியைந்து ரூபாய்.

சாப்பிட்டு விட்டு அரங்கிற்கு வந்தால் அரங்கிற்கு முன்னால் "அமுதா" நடமாடும் பலகாரக்கடையில் சுடச்சுட இட்லி ஒன்று மூன்று ரூபாய் என்று விற்றுக்கொண்டிருந்தார்கள். சரி. நம் காசு எப்படி எப்படியோ யார் யாருக்குப் போகவேண்டுமோ, அப்படி போய்க்கொண்டு இருக்கிறது என்று மனதைச் சமாதானப் படுத்தினேன்.

பதிவர் சந்திப்பு நல்லபடியாக, சிறப்பாக நடந்தது. அனைத்து விழாக்குழுவினரும் சிறந்த ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். இதைப்பற்றி பலரும் பதிவு போடுவார்கள் அதனால் நான் விளக்கமாக எழுதவில்லை. அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.

கொஞ்சம் சீரியஸ் மேட்டருக்கு வருவோம்.

பதிவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரைகள்.

பொதுவில் முகம் காட்டா பதிவர்களையும், முக்கியமாக, பெண் பதிவர்களையும் அவர்கள் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுக்க வேண்டாம். தவறி எடுத்திருந்தாலும் பதிவில் வெளியிட வேண்டாம் நண்பர்களே.


இது போதாதா? வாழ்க்கையில  இப்போ இருக்கிற பிரச்சினைகளைத் தீர்க்கவே சக்தி இல்லை. இதுல ஊரு விட்டு ஊரு போயி வேற வம்பை காசு கொடுத்து வாங்கோணுமா? (காசு எப்படீ அப்படீங்கறீங்களா, ரயில்காரன் சும்மா சென்னைக்கு கூட்டீட்டு வருவானுங்களா)  வேண்டவே வேண்டாங்க. என்னமோ பதிவர் சந்திப்புக்கு போனமா, நாலு பேரப் பாத்து பேசினமா அப்படீன்னு இருக்கோணும். இது எங்க ஊட்டு அம்மா நான் ரயிலுக்குப் புறப்படறப்ப சொல்லி அனுப்பிச்ச அட்வைஸ்.

நாமதான் அம்மா கிழிச்ச கோட்டை எப்பவும் தாண்டினதில்லையே. அதனால வம்பு வராத போட்டோக்களை மட்டும் போட்டிருக்கேன். இந்த போட்டோக்களில் இருப்பவர்கள் அனைவரிடமும் போட்டோ எடுப்பதற்கும்,பதிவில் போடுவதற்குமான அனுமதி, ஸ்டாம்ப் பேப்பரில் சாட்சிக் கையெழுத்துடன் வாங்கி வைத்திருக்கிறேன். இதுலயும் யாராவதுக்கு ஆட்சேபணை இருந்தால் தயங்காமல் பின்னூட்டத்தில் போடவும். அந்தப் போட்டோக்களை அப்படியே அலாக்காத் தூக்கிடறனுங்க.

1. நான் சென்னை வந்த ரயில்.




2. என்னுடன் (ரயிலில்) வந்தவர்கள்.



.
3. சினிமா இசைக்கலைஞர்கள் அரங்கு.



4.அரங்கிற்கு எதிரில் உள்ள விஜயா மால்.



5. அரங்கு மேடை.

6. எனக்கு ஒதுக்கப்பட்ட சிம்மாசனம்.



7.மதிய விருந்துக்கான ஐட்டங்கள். (இதுதான் எல்லாவற்றிலும் டாப்.
   இதுக்காகத்தானே சென்னைக்குப் போனதே)





ஆனாலும் பிரியாணி அநியாயத்திற்கு கொள்ளை ருசி.

அடுத்த அறிவுரை:


 முக்கியமாக விழா நடைபெறும் நாளன்று யாரும் மது அருந்தி வரக் கூடாது. இதனால் பல பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. நமது வீட்டு விழா என்பதை நினைவில் கொள்ளவும்.

இதைக் கடைப்பிடிக்க ரொம்பக் கஷ்டப்பட்டுட்டேன். என்னென்ன பிரச்சினைகள்னு லிஸ்ட் கொடுத்தா, அடுத்த தடவை அந்த பிரச்சினைகளை எல்லாம் பண்ண உபயோகமாக இருக்கும்.  அது சரி, மத்த நாள்ல யாரு ஹோஸ்ட் பண்ணுவாங்கன்னு தெரியலயே?

அடுத்த அறிவுரை:

 மேடையில் பங்கேற்று உரை ஆற்றுபவர்களை  விசிலடித்தோ, கை தட்டியோ உற்சாகப்படுத்த வேண்டும். .................. தவறக் கூடாது.


ரெண்டு நாளா இதுதாங்க வேலை. அதுதாங்க விசிலடிச்சுப் பழகறதுங்க. எப்பவோ ஒரு காலத்தில விசில் அடிச்சது. சுத்தமா மறந்து போச்சுங்க. இப்ப பிரேக்டீஸ் பண்ணலாமுன்னா பல்லெல்லாம் போயிட்டுதுங்களா, வெறும் காத்துதான் வருது. என்னால இந்தக் கண்டிஷன நிறைவேத்த முடியாததற்கு வருந்துகிறேன். சரி, கையையாவது தட்டலாம்னு பாத்தா கை வலிக்குதுங்க. இதுக்கும் சேர்த்து என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


அடுத்த வருடப் பதிவர் சந்திப்பு ஈரோடில் என்று அறிவித்தார்கள். இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. பொழைச்சுக் கெடந்தா பாத்துக்கலாம்.