ஞாயிறு, 26 மே, 2013

நீங்கள் கோவைக்கு வருகிறீர்களா, ஜாக்கிரதை.


போக்குவரத்து சிக்னல்கள் நகர வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. சந்தடி மிகுந்த சாலை சந்திப்புகளில் அவைகளின் பங்கு மகத்தானது. ஆனால் எந்த தொழில் நுட்பமும் அவைகளை உபயோகிப்போரின் பொறுப்பான செயல்களினால்தான் பயன் பெறும்.

சிக்னல்களில் மூன்று கலர் விளக்குகள் இருப்பதை எல்லோரும் கவனித்திருப்பீர்கள். ஒரு ஜோக்கில் ஒரு சிறுவன் சொன்னதை இங்கே ஞாபகப்படுத்துகிறேன். அவனுடைய டீச்சர் இந்த டிராபிக் விளக்குகளின் அர்த்தத்தைக் கேட்டிருக்கிறார்.

அந்த சிறுவன் சென்ன பதில்: பச்சை விளக்கென்றால் நிற்காமல் போகவேண்டும். ஆரஞ்சு விளக்கென்றால் அதிக வேகத்தில் போகவேண்டும். சிகப்பு விளக்கு விழுந்து விட்டால் கண்ணை மூடிக்கொண்டு உச்சகட்ட வேகத்தில் போகவேண்டும் என்று சொன்னானாம்.

கோவையில் ஏறக்குறைய இது மாதிரிதான் நடக்கிறது. சட்டம் என்னவென்றால், ஆரஞ்சு விளக்கு விழும்போது நீங்கள் பாதி தூரம் வந்திருந்தால் போய் விடலாம். நிறுத்துக் கோட்டிற்கு இந்தப் புறம் இருந்தால் ஆரஞ்சு விளக்கு விழுந்தவுடன் வண்டியை நிறுத்திவிடவேண்டும்.

ஆனால் நடப்பது என்னவென்றால் அந்த பள்ளிச் சிறுவன் சொன்னது போல்தான். நீங்கள் சட்டப்பிரகாரம் ஆரஞ்சு விளக்கைப் பார்த்தவுடன் நிறுத்தினால் பின்னால் வருபவன் உங்கள் வண்டி மீது வந்து மோதுவான். கேட்டால் ஆரஞ்சு விளக்குதானே விழுந்திருக்குது. நீ போகவேண்டியதுதானே என்று உங்கள் மீது குற்றம் சுமத்துவான்.

சந்திப்புகளில் நிற்கும் போலீஸ்காரர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு வேறு வேலை இருக்கிறது. லாரிக்காரர்களை "கவனிப்பது" தான் அவர்களின் முக்கிய வேலை.

நாங்கள், அதாவது உள்ளூர்க்காரர்கள் இதற்கு பழகிப் போய்விட்டோம். வெளியூரிலிருந்து கோவைக்கு புதிதாய் வருபவர்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.

வியாழன், 23 மே, 2013

நான் செய்த தவறு


நான் சமீபத்தில் தமிழீழம் பற்றி ஒரு பதிவு போட்டதில் சில தவறுகள் செய்து விட்டேன். அதாவது ஈழ சரித்திரம் சரியாகப் படிக்காததினால் வந்த தவறுகள் அவை. ஆகவே ஈழச் சரித்திரத்தை படிப்போம் என்று சில புத்தகங்களைப் படித்தேன்.

அதிலிருந்து நான் தெரிந்து கொண்டவை என்னவென்றால் இலங்கையில் தமிழினம் 2000 ஆண்டுகளாக இருந்து வருகிறது.  தேயிலைத்தோட்டத்தில் வேலை செய்வதற்காக 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து போனவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இலங்கையை ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகள் ஆண்டுவிட்டு பிறகு சுதந்திரம் கொடுத்தபோது பல சிக்கல்களையும் விட்டுச் சென்றார்கள். அந்தச் சிக்கல்களில் தலையாயதுதான் தமிழ் ஈழப் பிரச்சினை. இது மிகவும் சிக்கலான பிரச்சினை.

பல கட்டங்களைத் தாண்டி இந்தப் பிரச்சினை இன்று ஒரு குழப்பமான நிலைக்கு வந்திருக்கிறது. இந்தப் பிரச்சினை எப்படி தீரும் என்பதை காலம்தான் சொல்லும்.

வெள்ளி, 17 மே, 2013

ஒரு அறிவிப்பு


நண்பர்களே...
நாளை ‘பதிவர் பட்டாபட்டி’ மறைந்து ஏழாம் நாள்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
நாளை சனிக்கிழமை 18-05-2013 அன்று,
பதிவுலகம், பேஸ்புக் ஆகிய இணைய தளங்களில், பதிவுகள்,ஸ்டேட்டஸ்,கருத்துக்கள்
எதுவும் வெளியிடாமல்...
அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என
இணைய நண்பர்கள் தீர்மானித்து உள்ளார்கள்.

அனைவரும் இச்செய்தியை தங்கள் தளங்களில் பகிருமாறு,
இணைய நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

தமிழீழம் பற்றி ஒரு சந்தேகம்.


எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் மனதைக் குடைந்து கொண்டே இருக்கிறது.

தமிழீழம், தமிழீழம் என்று தமிழர்கள் உயிரை விடுகிறார்களே, இலங்கைக்கு அந்தக் காலத்தில் கேரளாவிலிருந்தும் கணிசமான மக்கள் போயிருப்பார்கள் அல்லவா, அவர்களும் கேரள ஈழம் கேட்பதில்லையா?

படம்: கூகுளாண்டவர் உபயம்

செவ்வாய், 14 மே, 2013

திரு. பட்டாபட்டி - இறுதி சடங்குகள்.


திரு.பட்டாபட்டியின் நிஜப் பெயர் வெங்கிடபதி. அவர் அப்பா பெயரையும் சுருக்கி ராஜ் வெங்கிடபதி என்ற பெயரில் சிங்கப்பூரில் "Global Foundries" என்னும் ஸ்தாபனத்தில் சீனியர் இஞ்சினீயராக வேலை பார்த்துள்ளார். ஏதோ விஷயமாக பேங்காக் சென்றிருந்தபோது ஒரு மாலுக்குள் சென்றிருக்கிறார். அங்கு உள்ளே நுழைந்த சில நிமிடங்களிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உடனடியாக இறந்துவிட்டார். அவரின் ஒரு சகோதரர் சிங்கப்பூரிலேயே இருக்கிறார். அவர் உடனடியாக பேங்காக் சென்றிருக்கிறார்.

திரு. பட்டாபட்டி இறந்தது 12-5-2013, ஞாயிற்றுக்கிழமை. அடுத்த நாளான 13ந் தேதி, திங்கட்கிழமை, தாய்லாந்தில் லீவு. ஒரு காரியமும் நடக்கவில்லை. இன்றுதான் (14-5-2013) பேப்பர் வொர்க் முடிந்து மதியத்திற்கு மேல் பேங்காக்கில் விமானத்தில் ஏற்றுவார்கள். இன்று இரவு(அதாவது 15-5-2013 அதிகாலை)  1 மணி சுமாருக்கு சென்னை வரும். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவருடைய சொந்த ஊரான பெரியநாயக்கன்பாளையத்திற்கு (கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 20 கி.மீ. தூரம்) அநேகமாக நாளை (15-5-2013, புதன்கிழமை) காலையில் 8 லிருந்து 9க்குள் சடலம் வரலாம்.  அன்றே இறுதிச்சடங்குகள் நடக்கும்.

இறந்தவருக்கு வயது 46. மனைவியும் இரு பெண் குழந்தைகளும் இருக்கின்றன. எனக்கு நெருங்கிய நண்பர். அந்த விபரங்களை பிற்பாடு எழுதுகிறேன்.

அவருக்கு சொந்த ஊரில் ஏகப்பட்ட நண்பர்கள். ஊரெங்கும் இரங்கல் நோட்டீஸ் அடித்து ஒட்டியிருக்கிறார்கள்.


அஞ்சிலே ஒன்று பெற்றான்


இந்தப் பாடலை பலமுறை பல இடத்தில் படித்திருக்கிறேன். ஆனால் முறையாக அர்த்தம் தெரிந்து கொள்ளவில்லை. இந்தப் பதிவில் 

 http://sangarfree.blogspot.in/2012/04/blog-post.html 


இந்த உரையைக் கண்டேன். எல்லோருக்கும் பயன்படுமென்று கருதி அதை அந்த ஆசிரியரின் அனுமதி பெறாமலேயே இங்கு பிரசுரித்துள்ளேன். அவருடைய ஈமெயில் விலாசம் கிடைக்கவில்லை. அதனால் அவரிடம் அனுமதி வாங்கவில்லை. அனுமதி வாங்காததற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 

இந்தப் பதிவுதான் என்னுடைய முதல் "காப்பி-பேஸ்ட்" பதிவு என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.


அஞ்சிலே ஒன்று பெற்றான்

                  அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
                ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே  ஒன்று பெற்ற
              அணங்கைகண்டு  ; அயலான் ஊரில
அஞ்சிலே ஒன்று வைத்தான்
              அவன்  நம்மை அளித்து காப்பான் 

இது கம்பராமாயணத்தில் பால காண்டத்தில் வரும் ஒரு பா ..தமிழ் சினிமா காரங்க சொல்லூர மாதிரி ரொம்ப எபெட் எடுத்து தான் கம்பர் இந்த பாடலை புனைந்திருக்க  வேண்டும் .

அனுமனுக்கு வணக்கம் வைக்கும்வகையில இந்த பா உருவாக்க பட்டிருக்கும் .
முதல் அடி கம்பர் ஆரம்பிக்கிறார் அனுமன் பிறப்பில்   அஞ்சிலே ஒன்றுபெற்றான் .அஞ்சு என்று கம்பர்  விளிப்பது ஐம்பூதங்களை என்பது வாசிக்கும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது .

அனுமனை வாயுபுத்திரன் என்றும் வாயுமைந்தன் என்றும் விளிப்பார்கள் .காரணம் அவன் வாயுபகவானின் வாரிசு என்கிற படியால் .அதே கருத்தை கம்பர் தன் பாவில்   அஞ்சிலே ஒன்று பெற்றான் என்றுஆரம்பித்திருக்கிறார்.

அடுத்து   அஞ்சிலே ஒன்றை தாவி        இந்த  கவி இடம் பெறும் படலம் பால காண்டம் சீதா பிராட்டியை தேடும் படலம் எனவே அஞ்சில் ஒன்றாகிய நீரை  கடக்க போவதை அதாவது கடலை கடந்து போவதை கம்பர் தன் பாணியில் எடுத்து விட்டிருக்கிறார்..அத்தோடு   அஞ்சிலே ஒன்று ஆறு ஆக   எனும் போது வான் வீதி வழியாக தாவி கடல் கடக்கிறான் என்கிறார் கம்பர்
எதுக்கு?  ஆருயிர் சீதாதேவியை காக்க கடல் தாண்டி செல்கிறான் ,சொல்கிறார் கம்பர்



கடல் தாண்டி அயலூர் அதாவது இலங்கை வருகிறான்,இங்கும் அந்த அஞ்சு என்பதை கம்பர் விடாமல் தொட்டு கொண்டே இருக்கிறார் .அஞ்சிலே  ஒன்று பெற்ற அணங்கை கண்டு இது சீதாபிராட்டி பற்றியது ,சீதா பூமா தேவி மகள் எனவே இந்த வரி இங்கு ..இதை விட அடுத்த வரி தன் முத்திரையை அழகாய் பதித்து விட்டு போயிருக்கிறார் கம்பர்

அஞ்சிலே ஒன்று வைத்தான்  இலங்கா புரிக்கு தீ வைத்தான் என்று முடித்து அவன் நம்மை காப்பான் என்று நினைத்திருகிறான்  கவியர்...

அருஞ்சொல் விளக்கம்:

ஆறு = வழி
அளித்து = கருணை அளித்து
ஆரியர் = வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள்

மேற்கண்ட பதிவு கீழே கொடுத்துள்ள தளத்திலிருந்து, அதன் ஆசிரியரிடமிருந்து எந்த விதமான அனுமதியும் வாங்காமல் பிரசுரிக்கப்பட்டது. அவருடைய முகவரி தெரியாததால் இவ்வாறு செய்யவேண்டி நேர்ந்தது.
http://sangarfree.blogspot.in/2012/04/blog-post.html

திங்கள், 13 மே, 2013

இப்படியும் ஒரு பதிவர்


http://avinashiathikadavu.blogspot.in    ல் வெளிவந்த  பதிவு  அவினாசி அத்திக்கடவு திட்டம் ...மேலும் வாசிக்க

இன்று தமிழ்மணம் திரட்டியை மேய்ந்துகொண்டிருந்த பொது மேற்கண்ட பதிவைப் பார்த்தேன். ஏதோ நம்ம ஊரு சமாச்சாரமா இருக்குதே, என்ன ன்னு பார்ப்போம் என்று கிளிக் பண்ணினேன். கீழ்க்கண்ட அறிவிப்பு வந்தது.


அதாவது வருகை புரிந்தவரின் பெயரும் பாஸ்வேர்டும் கேட்கிறது. படிக்க வருபவர்களை இந்தப் பதிவர் ஏன் இப்படி வாதிக்கிறார் என்று புரியவில்லை.

வெள்ளி, 10 மே, 2013

வருமானவரி என்றால் என்ன?


ஐயா.வருமான வரி யார் யாருயெல்லாம் கட்ட வேண்டும்.ரிட்டன் தாக்கல் செய்வது என்றால் என்ன?வரி கட்ட வில்லை என்றால் என்ன செய்து விடுவார்கள்.
தங்களின் பதில் தனி பதிவாக வெளியிட்டால் நலம்.

ஆஹா, கடவுள் எப்படியெல்லாம் கருணை காட்டுகிறார், பாருங்கள். பதிவு போட சப்ஜெக்ட் இல்லாமல் அல்லாடும்போது "ஆரிஃப்" ரூபத்தில் வந்து உதவுகிறார் பாருங்கள்.
==================================================================================

வருமான வரி கட்ட உங்களுக்கு வருமானம் இருக்கவேண்டும். வருமானம் இல்லாதவர்கள் வருமான வரி கட்டவேண்டியதில்லை. இந்த உண்மை அந்த பெயரிலிருந்தே உங்களுக்கு விளங்கியிருக்கவேண்டும். இருந்தாலும் ஒரு ஆசிரியன் என்கிற முறையில் இதைச் சொல்வது என் கடமையாகிறது.

நான் சம்பாதிக்கிறேன். அதற்கு அரசுக்கு எதற்கு வரி செலுத்தவேண்டும் என்று சிலர் கேட்பார்கள். இது ஒரு சிறுபிள்ளைத்தனமான கேள்வி. அரசு இல்லாவிட்டால் உனக்கு வேலை ஏது? சம்பளம் ஏது? நீயே இருக்க முடியாதே? இதைப் புரிவது கொஞ்சம் கடினம்தான்.

எவ்வளவு வருமானம் இருப்பவர்கள் வருமான வரி கட்டவேண்டும்? இது ஒரு சிக்கலான கேள்வி. நம் நாட்டில் சட்டம் ஒன்று சொல்லும். ஆனால் மக்கள் ஒரு விதமாக நடப்பார்கள். முதலில் சட்டத்தை சொல்கிறேன். பிறகு நடைமுறையில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

சிலருடைய வருமானத்தை துல்லியமாக கணக்குப் போட்டுவிடலாம். மாத வருமானத்திற்கு வேலை பார்ப்பவர்களின் சம்பளம் இவ்வளவு என்று மாதாந்திர சம்பள பட்டியலைப் பார்த்தால் தெரிந்து விடும். இவர்கள்தான் நம் நாட்டின் அச்சாணி. இவர்களுக்காகத்தான் பெரும்பாலான சட்டங்கள் இயற்றப்படுகின்றன. சட்டங்களைப் பார்த்து பயப்படுபவர்களும் இவர்கள்தான்.

இவர்களுக்கான வருமானவரிச் சட்டம் என்ன சொல்லுகிறதென்றால்,  வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் இரண்டு லட்சத்திற்கு மேல் வாங்கும் சம்பளத்திற்கு வருமான வரி செலுத்தவேண்டும். வரி விகிதம் இவர்களுக்கு ரூபாய்க்கு பத்து பைசா மட்டுமே. இவர்கள் ஐந்து லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கினால் அந்த அதிக சம்பளத்திற்கு வரி ரூபாய்க்கு இருபது பைசா. சம்பளம் பத்து லட்சத்திற்கு மேல் இருந்தால் வரி ரூபாய்க்கு முப்பது பைசா. இதுதான் அதிக பட்ச வரி விகிதம்.

வருமானவரி சட்டத்தின்படி வருடம் என்பது ஏப்ரல் 1 ந்தேதி ஆரம்பித்து அடுத்த வருடம் மார்ச் 31 ந்தேதி முடிவடையும் வருடமாகும். இதை கணக்கு வருடம் என்பார்கள் அதாவது "Accounting Year" என்பார்கள். அதற்கு அடுத்த வருடத்தை "Assessment Year" சுருக்கமாக "AY" என்பார்கள். இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளவே சில வருடங்கள் ஆகும்.

நீங்கள் பிராவிடண்ட் பண்ட்டில் பணம் போடுபவராக இருந்தால் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமான வரி கட்டவேண்டியதில்லை. அதே போல் மெடிகல் இன்சூரன்ஸ் செய்திருந்தால் 15000 ரூபாய்  வரை வரி இல்லை. பல டொனேஷன்களுக்கும் இவ்வாறு சலுகைகள் உண்டு.

சொந்தமாக வீடு கட்டியிருந்தால், அதற்கு கடன் வாங்கியிருந்தால், அந்தக் கடனின் வட்டிக்கு வரி இல்லை. வாடகை வீட்டில் குடியிருந்தால் அந்த வாடகைப் பணத்தின் ஒரு பகுதிக்கு வரி விலக்கு கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் யாராவது ஊனமுற்றிருந்தால் அவர்கள் பராமரிப்புக்கு என்று ஒரு தொகைக்கு வரி விலக்கு உண்டு.

இப்படியாக இன்னும் பல விலக்குகள் உண்டு. அவைகளைப் பற்றி இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்டில் வேலை செய்பவர்களுக்கே சரியாகத் தெரியாது. நாமும் தெரிந்து கொள்ளவேண்டியதில்லை.

இப்படி இந்த சட்டதிட்டங்களை எல்லாம், எல்லோரும் தெரிந்து வைத்திருப்பது கடினம். ஒவ்வொரு ஆபீசிலும் இந்த சட்டதிட்டங்களைக் கரைத்துக் குடித்தவர் ஒருவர் இருப்பார் (என்னை மாதிரி). அவரிடம் போனால் அவர் உங்களுக்கு எவ்வளவு டாக்ஸ் வரும் என்று ஐந்து நிமித்தில் கணக்குப் போட்டு சொல்லிவிடுவார். என்ன, அவருக்கு ஒரு பார்ட்டி வைக்கவேண்டி வரும். அவ்வளவுதான்.

நீங்கள் ஆபீசில் வேலை செய்பவராக இருந்தால் உங்கள் வருமான வரியை அவர்களே பிடித்தம் செய்து அரசுக் கணக்கில் கட்டிவிடுவார்கள். அதற்கான ஒரு சர்டிபிகேட்டும் கொடுப்பார்கள். இந்த சர்டிபிகேட் பின்னால் தேவைப்படும்.

நீங்கள் ரிடையர் ஆகியிருந்தாலோ அல்லது வியாபாரம் செய்பவராகவோ இருந்தால் இந்த வரியை நீங்களே பேங்கில் கட்டவேண்டும். அதற்கு அவர்கள் ரசீது கொடுப்பார்கள்.

இப்படி நீங்கள் மார்ச் 31ந் தேதிக்குள் அந்த வருடத்திற்கான வருமான வரியைக் கணக்குப்போட்டு கட்டிவிட்டால் பாதி கிணறு தாண்டிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

இந்த வரி கட்டின விபரங்களை அதற்குரிய படிவத்தில் சரியாக எழுதி அதை வருமானவரி அலுவலகத்தில் ஒப்படைத்து அதற்குண்டான படிவத்தில் ஒப்புதல் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும். இதைத்தான் இன்கம்டாக்ஸ் ரிடர்ன் சமர்ப்பிப்பது என்று சொல்வார்கள். நாம் வாங்கும் ஒப்புதலுக்கு "Acknowledgement" என்று பெயர். இது மிகவும் முக்கியமான தஸ்தாவேஜு. இந்த வேலையை ஜூலை 31க்குள் செய்து முடித்துவிடவேண்டும்.

நீங்கள் பாட்டுக்கு வரி கட்டிவிட்டு, நாம்தான் வரி கட்டிவிட்டோமே என்று இருந்தீர்களானால், நீங்கள் வரி கட்டாதவராகத்தான் வருமானவரி இலாக்கா உங்களைக் கருதும். இந்த ரிடர்ன் பல பக்கங்களுடையதாய் சில வருடங்கள் முன்பு வரை இருந்தது. அத்தகைய படிவங்களை வைப்பதற்கு போதுமான இடம் வருமானவரி அலுவலகங்களில் இல்லாமையால் இப்போது இந்த படிவங்களை ஒரு சிங்கிள் காகிதமாக மாற்றிவிட்டார்கள்.

இந்த சிங்கிள் காகிதத்தை அச்சடிக்கத்தான் அவர்களுக்கு நேரம் இல்லை.

இத்துடன் வருமான வரி சமாச்சாரம் முடிந்து விடாது. உங்கள் கர்மவினை சரியாக இல்லாவிட்டால், உங்கள் வருமானவரிப் படிவம் ஒரு கிளார்க் கண்ணில் பட்டு அவனுக்கு அதில் ஏதாவது சந்தேகம் வரும். அப்போது அவன் உங்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்புவான். அதில் ஒரு தேதியில் வருமானவரி ஆபீசுக்கு வரச்சொல்லி இருக்கும். அன்று நீங்கள் நேரில் போய் விளக்கம் கொடுக்கவேண்டி இருக்கும்.

இந்த நடைமுறைகளெல்லாம் நம் போன்ற சாதாரண பிரஜைகளுக்குத்தான். கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பெரிய பெரிய வியாபாரிகள், தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள் ஆகியோருக்கு இந்த வருமானவரிச் சட்டங்கள் எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும்.

நீங்கள் மந்திரியாக இருந்தால், நான் வருமானவரி படிவம் தாக்கல் செய்ய மறந்துவிட்டேன் என்று கூட சொல்லிக்கொள்ளலாம். தேச சேவையில் இந்த மாதிரி சாதாரண விஷயங்கள் நினைவில் இருப்பது கடினம்தானே.

பின்சேர்க்கை:

சில வார்த்தைகளுக்கு வருமானவரி இலாக்காவில் அர்த்தம்.

1. Financial Year: இது ஏப்ரல் 1 ம் தேதி முதல் அடுத்த வருடம் மார்ச் 31ம் தேதி முடிய உண்டான வருடம். இதை Accounting Year என்றும் சொல்லுவார்கள்.

2. Assessment Year: உங்கள் வருமான வரியை கணிப்பது, ரிடர்ன் சமர்ப்பிப்பது ஆகியவைகளுக்கு உண்டான வருடம். 31-3-2013 அன்று முடிவடைந்த கணக்கு வருடத்திற்கு 1-4-2013 முதல் 31-3-2014 வரை உண்டான வருடம்தான் Assessment year.

3. FY 2012-13  என்றால் 1-4-2012 முதல் 31-3-2013 வரை. இதற்கான Assessment Year = AY 2013-14.

4. AY 2013-14  என்றால் 1-4-2013 முதல் 31--3-2014 வரை.

இந்த வருடக் கணக்கை சரியாகப் புரிந்து கொள்ள எனக்கு 78 வயது தேவைப்பட்டது. உங்களில் அநேகர் என்னைவிட கெட்டிக்காரர்களாக இருப்பீர்கள். ஆகவே இந்தக் கணக்கை சீக்கிரம் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

AY 2013-14 வருடத்திற்கான வருமான வரிப் படிவம் இன்டர்நெட்டில் வந்துவிட்டது. அதை டவுட்லோடு செய்து பிரின்டிங் சென்டரில் கொடுத்தால் பிரின்ட் செய்து கொடுப்பார்கள். நம்மைப்போல் சாதாரணர்களுக்கு உண்டான படிவம் ITR 1 என்பதாகும். இது இரண்டு பக்கம் உள்ளது. இதை ஒரே காகிதத்தில் பிரின்ட் செய்யவேண்டும். தவிர இது  கண்டிப்பாக கலர் பிரின்ட்டாக இருக்கவேண்டும்.

கூடவே ITR V என்று ஒரு படிவம் இருக்கிறது. அதை கருப்பு வெள்ளையில் பிரின்ட் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் வருமானவரி அலுவலகத்தில் ITR1 படிவத்தைக் கொடுத்ததும், இந்தப் படிவத்தில்தான் வரி ரிடர்ன்ஐ பெற்றுக்கொண்டதற்கான கம்ப்யூட்டர் ரசீதை ஒட்டிக்கொடுப்பார்கள். இதுதான் வரி ரிடர்ன் சமர்ப்பித்ததற்கான அத்தாட்சி. பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்தப் படிவங்களில் உள்ள எல்லா விவரங்களையும் தவறாமல் கொடுக்கவேண்டும். குறிப்பாக உங்கள் பேங்க் அக்கவுன்ட் நெம்பர். பேங்கின் IFSC  கோட் ஆகியவை கண்டிப்பாக வேண்டும்.  IFSC என்றால் Indian Financial System Code  என்பதின் சுருக்கம். இது அந்தந்த பேங்கிலோ அல்லது இன்டர்நெட்டிலோ கண்டு பிடிக்கலாம்.

இந்த விளக்கங்கள் போதுமென்று நினைக்கிறேன். மேலும் விவரங்கள் தேவைப்படின் பின்னூட்டத்தில் எழுதுங்கள். தனிப்பட்ட ஆலோசனை தேவைப்படுபவர்கள் நேரில் தக்ஷிணையுடன் வரவும்.

புதன், 8 மே, 2013

கடன் வாங்கி கார் வாங்கினீங்களா?


இந்தப் பதிவு உங்களுக்காகத்தான்.

பேங்கிலோ அல்லது தனியார் நிதி நிறுவனங்களிலோ கடன் வாங்கி கார் அல்லது பைக் வாங்கியுள்ளீர்களா? அதில் உள்ள நுணுக்கங்களைத் தெரிந்திருக்கிறீர்களா? பெரும்பாலானவர்கள் அதைப் பற்றி கவலைப் படுவதில்லை. இந்த விவகாரத்தில் உள்ள வில்லங்கங்களை தெரிந்து கொள்வது நல்லது.

காருக்கு கடன் வாங்கும்போது பேங்க் ஆக இருந்தால், ஒரு பத்து கையெழுத்துகளும் தனியார் நிதி நிறுவனமாக இருந்தால் ஒரு நூறு கையெழுத்துகளும் வாங்கியிருப்பார்கள். புது கார் அல்லது பைக் வாங்கும் கிளுகிளுப்பில் நீங்கள் அவர்கள் காட்டிய இடத்திலெல்லாம், ஏதோ நீங்கள்தான் ரிசர்வ் பேங்க் கவர்னர் என்ற நினைப்பில், கையெழுத்து போட்டிருப்பீர்கள்.

ஒவ்வொரு கையெழுத்தும் ஒவ்வொரு கண்ணிவெடி என்பது பின்னால்தான் உங்களுக்குத் தெரியவரும். கார் அல்லது பைக் உங்கள் பேரில்தான் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு உங்கள் பெயர்தான் ஆர்.சி. புஸ்தகத்தில் (இப்போது புஸ்தகம் ஏது, வெறும் ஒரு சிங்கிள் ஷீட்தான்) இருக்கும். நீங்களும் ஆஹா, நம் கார் என்ற மாயையில் சந்தோஷப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். இதுதான் ஒரிஜினல் மாயை. அந்தக் காரின் நிஜ சொந்தக்காரன், அந்த பேங்கோ அல்லது நிதி நிறுவனமோதான்.

அவர்கள் நீங்கள் எப்போது தவணை கட்ட மறக்கிறீர்கள் என்று கண் கொத்திப் பாம்பாக காத்திருப்பார்கள். ஒரு தவணை கட்ட மறந்தீர்களோ, உங்கள் காரைப் பிடுங்கிக்கொள்வார்கள். நீங்கள் ஒன்றும் செய்யமுடியாது. சட்டம் அவர்கள் பக்கம். இந்த மாதிரி தவணை கட்டாதவர்களின் காரைப் பிடுங்க ஒரு தனி ஏஜென்சி வைத்திருக்கிறார்கள். அவர்கள் உங்களைக் கண்காணித்து, நீங்கள் ஆள் அரவமில்லாத ரோட்டில் தனியாகப் போய்க் கொண்டிருக்கும்போது, நான்கு பேராக வந்து உங்களை காரிலிருந்து இறக்கி விட்டு விட்டு, காரை ஓட்டிக்கொண்டு போய்விடுவார்கள்.

பிறகு நீங்கள் அவர்களிடம் நடையாய் நடந்து, பல ஏச்சுகள் வாங்கி, தண்டங்கள் பல அழுது உங்கள் காரைத் திருப்பி எடுத்து வரவேண்டும்.

பிறகு நீங்கள் தவறாமல் தவணைகளைக் கட்டி முடித்து விடுவீர்கள். ஆஹா, கார் நம்முடையதாகி விட்டது என்று சந்தோஷப்படுவீர்கள். அது அற்ப சந்தோஷம் என்று உணறுங்கள். நீங்கள் தவணைகளை முழுவதும் கட்டி முடித்து விட்டாலும், கார் சட்டப்பிரகாரம் அவர்களுடையதுதான். பழைய கால ஓட்டல்களில் "இந்த டம்ளர் ஆனந்தபவனில் திருடியது" என்று என்கிரேவ் செய்திருப்பார்கள். அதுபோல  ஆர்.சி. புத்தகத்தில் அந்த பேங்கின் பெயரைக் குறிப்பிட்டு, இந்தக் கார் இந்த பேங்க்கிற்கு அடமானமாக வைக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருப்பார்கள்.

இதற்கு "ஹைபாதெகேஷன்" என்று பெயர். இதை கேன்சல் செய்தால்தான் கார் உங்களுடையது என்று உறுதியாகும். பலர் இந்த விவரம் நெரியாமல் இருப்பார்கள். இந்த "ஹைபாதெகேஷன்" ஐ கேன்சல் செய்வது என்பது ஒரு மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது போன்ற வேலை.

இதற்கு அந்த நிதி நிறுவனம் அல்லது பேங்கில் இருந்து NOC அதாவது No Objection Certificate வாங்கவேண்டும். அதில் இந்த காருக்கான தவணைகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டாம். இந்த காரின் "ஹைபாதெகேஷன்" ஐ கேன்சல் செய்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று குறிப்பிட்டிருப்பார்கள். கூடவே Form 35 என்று ஒன்று இருக்கிறது. அதை அவர்கள் உங்கள் கையெழுத்துடன் நீங்கள் முதலில் கடன் வாங்கும்போதே வாங்கி வைத்திருப்பார்கள். அதையும் அவர்கள், தங்கள் கையெழுத்துப் போட்டுத் தரவேண்டும்.

இந்த இரண்டையும் நீங்கள் வெற்றிகரமாக வாங்கி விட்டீர்களானால், பாதி கிணறு தாண்டி விட்டீர்கள் என்று அர்த்தம். உடனே ஆர்டிஓ ஆபீசுக்கு ஓடிவிடாதீர்கள். இன்னும் பல படிகள் இருக்கின்றன. கீழ்க்கண்ட ஆவணங்கள் தேவை.

1. Form 35 இரண்டு காப்பிகள் (இது பேங்கில் கொடுத்திருப்பார்கள்)
2. NOC (இதற்கு இரண்டு ஜீராக்ஸ் காப்பி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னால் தேவைப்படும்.
3. ஒரிஜினல் ஆர்சி புக் (ஷீட்)
4. இன்சூரன்ஸ் சர்டிபிகேட் ஜீராக்ஸ் காப்பி
5. உங்களுடைய அட்ரஸ் புரூப் (ரேஷன் கார்டு அல்லது ஒட்டர் ஐடி கார்டு) ஜீராக்ஸ் காப்பி
6. உங்களுடைய பேன் (Pan) கார்டு ஜீராக்ஸ் காப்பி
7. காரின் புகைச் சான்றிதழ் ஜீராக்ஸ் காப்பி
8. பேங்க் அல்லது நிதி நறுவனத்தின் விலாசம் எழுதப்பட்ட, 35 ரூபாய் தபால் ஸ்டாம்ப் ஒட்டிய கவர்

அனைத்து ஜீராக்ஸ் காப்பிகளையும் ஒரு கெஜட்டட் ஆபீசர் அல்லது நோட்டரி பப்ளிக் அவர்கள் அட்டெஸ்ட் செய்யவேண்டும். எல்லா ஒரிஜினல்களையும் கூடவே எடுத்துச்செல்லுங்கள்.

இவைகளை ஒன்றாகப் பின் பண்ணி எடுத்துக்கொண்டு உங்கள் ஆர்டிஓ ஆபீசுக்குப் போகவேண்டும். சுற்றுலாத் தலங்களில் கைடுகள் உங்களை மொய்ப்பார்களே அந்த மாதிரி, இங்கும் தரகர்கள் உங்களை மொய்ப்பார்கள். உங்களால் ஆர்டிஓ ஆபீஸ் கெடுபிடிகளை சமாளிக்க தைரியம் இல்லாவிட்டால் இந்த தரகர்களின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆளைப் பொறுத்து, வண்டியைப் பொறுத்து நூறு ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை சார்ஜ் பண்ணுவார்கள்.

நீங்கள் கார் வாங்கிய பின் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்திருந்தீர்களானால் அதை விட வேறு வினை வேண்டியதில்லை. அந்த நிலையை டீல் பண்ணுவது இன்னொரு பதிவிற்கான விஷயம். அதை அப்புறம் பார்க்கலாம்.

நான் எப்பொழுதும் நேரடியாகத்தான் ஆர்டிஓ ஆபீசை டீல் பண்ணுவது வழக்கம். இந்த மாதிரி கவர்மென்ட் ஆபீசுகளுக்குப் போகும்போது கீழ்க்கண்டவைகளைக் கொண்டு போவது நல்லது.

1.ஸ்டேப்ளர், போதுமான அளவு பின்கள் இருக்கிறதா என்று செக் பண்ணிக்கொள்ளுங்கள்.
2. திக்காக எழுதும் ஸ்கெட்ச் பேனா, சாதாரணப் பேனாக்கள் இரண்டு, சிகப்பு இங்க் பேனா ஒன்று
3. பெவிஸ்டிக் கோந்து
4. குண்டூசிகள்
5. கெட்டி நூலும் அதற்குத் தகுந்த ஊசியும்.

ஆர்டிஓ ஆபீசுக்குள் முதல் முறையாகச் செல்லுகிறீர்க்ள என்றால் அங்குள்ள நடைமுறைகள் தலையும் புரியாது வாலும் புரியாது. கொஞ்சம் நிதானமாக நாலு பேரை விசாரித்து, உங்களுக்கான பணம் வாங்கும் கவுன்டரைக் கண்டு பிடியுங்கள். அங்கு இருக்கும் க்யூவில் சேர்ந்து கொள்ளுங்கள். க்யூவின் நீளம் உங்கள்  அதிர்ஷ்டத்தைப் பொருத்து பெரிதாகவோ சிறிதாகவோ இருக்கும்.

"ஹைபாதெகேஷன்" கேன்சல் செய்ய கட்டணம் 125 ரூபாய். சரியான சில்லறை கொண்டுபோவது அவசியம். பணத்தை வாங்கிக்கொண்டு ஒரு கம்ப்யூட்டர் ரசீது கொடுப்பார்கள். அது இரண்டு பாகமாக இருக்கும். ஒரு பாதியை கிழித்து உங்கள் Form 35 ல் ஒட்டவும். பிறகு இதைக்கொண்டு போய் எந்த கவுன்டரில் கொடுக்கவேண்டுமென்று விசாரித்து அங்கே கொடுக்கவும். அங்கேயும் க்யூ இருக்கும். அங்குள்ள நபர் உங்களை ஒரு நொடியில் எடை போட்டு விடுவார். சரி, ஒன்றும் பெயராது என்று முடிவு கட்டி, உங்கள் விண்ணப்பத்தை வேண்டா வெறுப்பாக வாங்கி வைத்துக் கொள்வார்.

மறு நாள் 5 மணிக்கு வந்து உங்கள் ஆர்சி புக்கை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்வார். அவரிடம் அதற்கு மேல் ஒன்றும் கேட்க முடியாது. அவ்வளவுதான். மறுநாள் மாலை 5 மணிக்குப் போய், இதற்குண்டான கவுன்டரை விசாரித்து அறிந்து அங்கு போனால் அந்தக் கவுன்டரில் உள்ள ஆள் அப்போதுதான்   டீ சாப்பிடப்போயிருப்பார். அரை மணி நேரம் கழித்து அவர் வருவார். வந்து என்ன வேண்டும் என்று நம்மை பார்வையாலேயே கேட்பார்.

நாம் ஆர்சி புக் என்று இழுத்து, ரசீதைக் காண்பித்தால் பத்து நிமிடம் தேடி அதை எடுத்துக் கொடுப்பார். அதை வாங்கிக்கொண்டு அப்பாடா என்று வீட்டிற்குத் திரும்ப வேண்டியதுதான். ஆனால் இந்த விஷயம் இத்துடன் முடியவில்லை.

"ஹைபாதெகேஷன்" கேன்சல் செய்யப்பட்ட ஆர்சி புக்கின் ஜீராக்ஸ் காப்பியும் NOC யின் ஒரு காப்பியையும் இணைத்து உங்கள் காரை இன்சூரன்ஸ் செய்திருக்கும் கம்பெனிக்கு அனுப்பவேண்டும். அவர்களிடம் இருந்து இதற்கான ஒப்புதல் வரவேண்டும். அப்போதுதான் இந்த விவகாரம் முடிந்தது என்று அர்த்தம்.

இந்த வேலை செய்தவர்கள், வீடு கட்டுவதோ, கல்யாணம் நடத்துவதோ கஷ்டம் என்று சொல்லவே மாட்டார்கள்.

திங்கள், 6 மே, 2013

ஒரு இனம் எப்படி முன்னேறும்?


இந்தியாவில் இனப் பாகுபாடு எப்படி தோன்றியது, அதை யார் வளர்த்தார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் கண்டு பிடிப்பது சிரமம் தவிர அதனால் பெரிய பலன் ஏற்படப்போவதுமில்லை. இன்று நம்மிடையே இந்த பேதங்கள் இருக்கின்றன என்பது நிதரிசனம்.

ஒரு சில இனங்கள் முன்னேறுவதையும் மற்றவர்கள் அப்படி முன்னேறாததையும் நாம் பார்க்கிறோம். ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்று சமூகவியல் வல்லுநர்கள் ஆராயவேண்டும்.

சமீப காலங்களில் இரண்டு இனங்கள் தங்களை முற்றிலுமாக மாற்றி அமைத்திருக்கின்றன. அந்த சமூகத்தில் தோன்றிய தலைவர்கள் இந்த மாறுதலைத் தோற்றுவித்துள்ளார்கள். மற்ற இனத்தவர்களை வசை பாடாமல் அமைதியாக முன்னேறியுள்ளார்கள். அவர்கள் நாடார் சமூகத்தினரும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் சமூகமும் ஆகும்.

மற்ற இனத்தவர் ஏன் இந்த மாதிரியைப் பின்பற்றி முன்னேறவில்லை என்று பார்த்தால் அந்த இனங்களில் தோன்றிய தலைவர்கள் சுயநலத்தோடு இருந்ததால் என்று தோன்றுகிறது. தங்கள் இனத்தவர்களை முன்னேறாமல் வைத்திருந்தால்தான் தாங்கள் கோலோச்சமுடியும் என்று உணர்ந்து அவர்கள் அந்த சமூகத்தினரின் உணர்ச்சிகளை மட்டும் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.

இந்த இழிநிலை மாறாத வரை அந்த சமூகங்கள் முன்னேற மாட்டா.

சனி, 4 மே, 2013

செலவு 300 ரூபாய் வரவு 3 லட்சம்


பேராசையே பல சங்கடங்களுக்குக் காரணம் என்று பல அனுபவங்கள் மூலமாக உணர்ந்திருந்தாலும், மனிதன் அதற்கு சில சமயங்களில் இடம் கொடுத்து விடுகிறான். அதற்கு உண்டான பலனையும் உடனே அனுபவிக்கிறான்.

==================================================================
3-5-2013 தினத்தந்தி செய்தி

மதுரை திருநகரில் ஆட்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் சம்பவம்.

வங்கி முன்பு, அ.தி.மு.க. பிரமுகரிடம் 3 லட்சம் கொள்ளை.

மதுரை, மே 3.

மதுரை திருநகரில் வங்கி முன்பு, ரூபாய் நோட்டுகளை சிதறவிட்டு, நூதனமுறையில் ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

அ.தி.மு.க. செயலாளர்.

மதுரை திருநகர் 6 வது வார்டு அ.தி.மு.க. செயலாளர் செல்வராஜ். நேற்று காலை இவர் திருநகர், சித்ரகலா காலனியில் உள்ள ஒரு வங்கிக்குச் சென்றார். வங்கியில் 3 லட்சம் பணத்தை எடுத்து ஒரு பேக்கில் வைத்துக்கொண்டு, தனது காருக்குத் திரும்பினார்.

காரின் பின் சீட்டில் பணப்பையை வைத்துவிட்டு, காரை எடுப்பதற்காக முன் சீட்டுக்கு வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருநபர்கள், ரோட்டில் 100 ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடப்பதை காட்டி, "இந்த ரூபாய் உங்களுடையதா பாருங்கள்" என்று கூறினர். அதைப் பார்த்த செல்வராஜ் தனது பணப்பையில் இருந்து சிதறாயிருக்குமோ என்று நினைத்து சிதறிக்கிடந்த மூன்று 100 ரூபாய் தாள்களையும் எடுத்தார். இதை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், காரின் பின் சீட்டில் இருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.

சிதறிக்கிடந்த பணத்தை எடுத்தபின் காருக்கு வந்த செல்வராஜ், பின் சீட்டில் இருந்த பணப்பை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம மனிதர்கள் கீழே சில ரூபாய் நோட்டுகளை சிதறவிட்டு தனது கவனத்தை திசை திருப்பி, பணப்பையை எடுத்துச்சென்றதை உணர்ந்தார்.

300 ரூபாயை எடுத்து முடிப்பதற்குள் 3 லட்சத்தை இழந்துவிட்டதை நினைத்து திகைத்துப்போனார்.

====================================================================

இந்தச் செய்தியில் எனக்குப் புரியாத ஒரு பாய்ன்ட். நூதனமுறையில் இந்த திருட்டு நடந்தது என்று தினத்தந்தி குறிப்பிட்டிருக்கிறது. இந்த திருட்டில் நூதனம் எங்கே வந்தது? காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் அரதப்பழசான டெக்னிக்தானே இது.

அடுத்து ஒரு பாய்ன்ட் - இது நல்ல பிசினஸ் மாதிரி தெரிகிறது. ஆர்வமுள்ள பார்ட்னர்ஸ் விண்ணப்பிக்கவும்.

வெள்ளி, 3 மே, 2013

20. கனவு கலைந்தது.


ஆஹா, இந்திய நாடு சீக்கிரமே வல்லரசாகப்போகிறது என்ற நினைப்பில் ஆனந்தமாக இருந்தேன். திடீரென்று ஒரு இடிச்சப்தம் கேட்டது. உடனே மழையும் பெய்ய ஆரம்பித்தது.

என்னடா இது, வேளை கெட்ட வேளையில் மழை பெய்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, என் மனைவியின் குரல் ஓங்கி ஒலித்தது. ரிடையர் ஆனாலும் ஆனீங்க, எப்பப் பாரு தூக்கம்தானா, எழுந்திரீங்க, வாசல்ல யார் யாரோ வந்து நிக்கறாங்க, என்னன்னு போய்ப்பாருங்க, என்றாள்.

அப்பத்தான் நான் இவ்வளவு நேரமும் கனவு உலகத்தில் இருந்திருக்கிறேன் என்று புரிந்தது. எழுந்து முகம் கழுவி விட்டு வாசலுக்கு வந்தேன். அங்கு கார்ப்பரேஷன் பிளம்பர் நின்று கொண்டிருந்தார். என்ன விஷயம் என்று கேட்டேன். நாளைக்கு உங்கள் ரோட்டில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்போகிறோம், உங்கள் பைப் கனெக்ஷன் உடைந்தாலும் உடையலாம் என்றார்.

சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றேன். கொஞ்சம் சம்திங் கொடுத்தால் அந்தப் பசங்களை உங்கள் பைப்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளச் சொல்கிறேன் என்றான். சரியென்று அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு திரும்பினால் இன்னொருவன்.

நீங்க யாருங்க என்றேன். நான் டெலிபோன் டிபார்ட்மென்டுங்க. நாளைக்கு ரோடைத் தோண்டும்போது உங்கள் டெலிபோன் வயர் அறுந்தாலும் அறுகலாம் என்றான். அய்யய்யோ, டெலிபோன் இல்லாவிட்டால் இன்டர்நெட் இருக்காதே. அத்துடன் நம் உயிரும் இருக்காதே என்று நினைத்து அதற்கு என்ன பண்ணலாம் என்றேன். வயர் அறுகாமல் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் என்னை கொஞ்சம் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றான்.

சரி என்று அவன் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு திரும்பினால் இன்னொருத்தன். நீ யாரப்பா என்றேன். நான் எலெக்ரிசிட்டி டிபார்ட்மென்ட்டுங்க என்று தலையைச் சொறிந்தான். எனக்கு விஷயம் புரிஞ்சு போச்சு. அவனுக்கும் அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு வந்து காபி குடித்தேன்.

நம் நாடு என்னவாகும் என்று யோசனையில் மூழ்கினேன். நம் மக்கள் என்ன கஷ்டம் வந்தாலும் விதியின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று வாழ்வார்கள் என்று புரிந்தது. கனவில் வரும் ஒரு மாற்றத்தைப் பற்றிய பதிவைப் படிப்பதற்கே பயப்படும் ஒரு இனம், நிஜ வாழ்வில் மாற்றங்களைப் பற்றி நினைக்கவே மாட்டார்கள் என்பது என் மர மண்டையில் பசுமரத்தாணி போல் பதிந்தது.

(எங்க வீட்டு ரோஜாப்பூ)

புதன், 1 மே, 2013

19. அவசரச் செய்தி

வந்த அவசரச்செய்தி என்னவென்றால், அனைத்து மாநிலங்களிலும் சில ஓட்டுச் சாவடிகளை "பூத் கேப்சர்" செய்வதற்காக குண்டர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே.

இந்தக் குண்டர்களை ஓட்டுச் சாவடியில் இருக்கும் நமது கிங்கரர்களே கவனித்துக்கொள்வார்கள் என்றாலும் ஓட்டுச் சாவடிக்குப் பக்கத்தில் சலசலப்பு எதற்கு என்று, அவர்கள் அனைவரையும் நமது தூதரகத்திற்கு கொண்டுவரச் சொன்னேன்.

எல்லோரும் வந்து மீட்டிங் ஹாலில் உட்கார்ந்தார்கள். எதற்காக பூத் கேப்சர் பண்ண முயன்றீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஒவ்வொரு எலெக்ஷன் நடக்கும்போதும் இதுதான் எங்களுக்கு வேலை. இந்தந்த பூத்துகளை கேப்சர் செய்யுங்கள் என்று வேட்பாளர்கள் சொல்லுவார்கள். அதன்படி செய்வோம். அடுத்த எலெக்ஷன் வரும்வரை நாங்கள் வாழ்வதற்கான செலவிற்கு பணம் கொடுப்பார்கள். அதை வைத்து பிழைத்துக்கொண்டிருந்தோம்.

இந்த எலெக்ஷனில் எங்களை ஒருவரும் கூப்பிடவில்லை. எங்களுக்குத் தெரிந்த தொழில் இது ஒன்றுதான். அதனால்தான் இந்த வேலைக்குக் கிளம்பினோம் என்றார்கள்.

அப்படியா சேதி, உங்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான பணம் கொடுக்கப்படும். நீங்கள் அனைவரும் எல்லைக் காவல் படையில் சேர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சம்பளம் உங்கள் வீட்டில் கொடுக்கப்படும் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன்.

பிறகு எந்த அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தல் நடந்து முடிந்தது. 98 சதம் ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன. நடக்க முடியாதவர்களும் ஆஸ்பத்திரியில் இருந்தவர்களையும் தவிர அனைவரும் ஓட்டுப்போட்டிருந்தார்கள்.

மறு நாள் காலையில் ஓட்டு எண்ணிக்கை ஆரம்பித்தது. மதியத்திற்குள் முடிவுகள் வெளியாகிவிட்டன. தேசீயக் கட்சி, எதிர் பார்த்தது போல் 90 சதம் இடங்களில் வெற்றி பெற்றார்கள். எதிர்க்கட்சிகளுக்கு 10 சதம் இடங்கள் கிடைத்தன. இது எப்படி நடந்தது என்று அனைத்து மக்களும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அந்த ரகசியம் தேவலோக தூதரகத்தில் இருக்கும் சூபர் கம்ப்யூட்டருக்கும் எனக்கும் மட்டுமே தெரியும்.

மாநில சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதினைந்து நாள் பயிற்சி கொடுக்கப்பட்டது. அவர்களின் கடமைகள் என்ன, உரிமைகள் என்ன, மாநில அரசின் பொறுப்புகள் என்ன, அவைகளை நிறைவேற்றுவது எப்படி ஆகிய விஷயங்களில் அவர்களுக்குத் தீவிரப் பயிற்சி கொடுக்கப்பட்டது.

அதே மாதிரி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. எல்லோரும் நாட்டை ஆளுவதற்கு தயாராகி விட்டார்கள்.

இந்தப் பயிற்சிகளில் வலியுறுத்தப்பட்ட அம்சங்கள் வருமாறு.

1. இந்திய நாட்டில் இனி லஞ்சம் எந்த ரூபத்திலும் இருக்கக்கூடாது.

2. இலவசங்கள் எந்த ரூபத்திலும் இல்லை.

3. அனைவரும் வேலை செய்யவேண்டும்.

4. தொழிற்சாலைகள் தரமான பொருள்களையே உற்பத்தி செய்யவேண்டும்.

5. நாட்டில் பிச்சை எடுப்பது ஒழிக்கப்பட்டு விட்டது.

6. எல்லோரும் சமம். யாருக்கும் எந்தவிதமான சலுகைகளும் இல்லை.

7. பொருட்களுக்கு உற்பத்தி செலவிற்கு மேல் 30 சதம் லாபம் உற்பத்தியாளர்களுக்குக் கொடுக்கப்படும்.

8. வியாபாரத்தில் வாங்கும் விலைக்கு மேல் 10 சதம் மட்டுமே அதிகப் படுத்தி விற்கலாம்.

9. அனைத்து அரசு நிறுவனங்களும் மக்களின் சேவைக்காகவே தரமாக பணியாற்றும்.

10. ரயில்கள் குறித்த நேரத்தில் ஓடும்.

11. போக்குவரத்து நெரிசலான நேரங்களில் நகரின் மையப் பகுதிகளில்  தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

12. நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் அரசு அலுவலர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்.

13. அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து விதிகள் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும்.

14. கல்விக்கூடங்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்படும். தனியார் கல்விக்கூடங்களை அமைப்பது தடுக்கப்படுகிறது.

15. போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்படும்.

16. பாராளுமன்ற, சட்டசபை உறுப்பினர்களுக்கு எந்த ஆடம்பர வசதிகளும் தரப்படமாட்டாது. மத்திய மந்திரிகள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்யலாம்.

17. டில்லியில் மீட்டிங் வைத்து மாநிலங்களிலிருந்து மந்திரிகளையும், செயலர்களையும் கூப்பிடும் வழக்கம் அடியோடு நிறுத்தப்படுகிறது.

இந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அவைகளை எனக்குத் தெரிவிக்குமாறு எல்லோருக்கும் அறிவித்தேன். பாராளுமன்றமும் சட்டசபைகளும் செயல்பட ஆரம்பித்தன. நாடு ஒழுங்கான பாதையில் போக ஆரம்பித்தது.