புதன், 27 ஜூன், 2012

இந்திப் பாட்டு போடாதே

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த முதல் இந்தி எதிர்ப்புப்போராட்டம் 1968 ல் நடந்தது. நான் அப்போது கோவை விவசாயக் கல்லூரியில் ஹாஸ்டல் வார்டனாக இருந்தேன். மாணவர்களின் கேன்டீன் என் பொறுப்பில் இருந்தது. கேன்டீனில் பாட்டுப் போடுவதற்கு உண்டான வசதிகள் இருந்தன. அக்காலத்தில் சினிமாப் பாட்டுகள் இசைத்தட்டு வடிவில்தான் இருந்தன. மாணவர்கள் அவர்களுக்குப் பிடித்த இசைத்தட்டுகளை வாங்கி வந்து போடுவார்கள். (பொது செலவுதான்). அதில் பல இந்தி சினிமா பாட்டுகளும் உண்டு.

1968 இந்திப் போராட்டத்தில் எங்கள் கல்லூரி மாணவர் தலைவன் ஒரு முக்கியப் பங்கு வகித்தான். அதாவது கோவையைச் சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களுக்கு அவர்தான் போராட்ட இணைப்பாளர். அது என்ன என்றால் மேலிருந்து இவருக்கு ஆர்டர்கள் வரும். அதை இவர் மற்ற கல்லூரிகளுக்கு அனுப்பவேண்டும். இந்தப் பொறுப்பு வகித்ததினால் அவருக்கு ஒரு மவுசு ஏற்பட்டுவிட்டது. தான் ஒரு குறுநில மன்னர் என்ற நினைப்பு ஏற்பட்டுவிட்டது.

ஒரு நாள் அவர் என்னிடம் வந்தார். சார், கேன்டீனில் இந்திப்பாட்டு போடுகிறார்கள். அது கூடாது என்றார். நானும் சூழ்நிலையை அனுசரித்து கேன்டீன் மேனேஜரிடம் இனிமேல் இந்திப்பாட்டு போடாதீர்கள் என்று சொல்லிவிட்டேன்.

இந்தி எதிர்ப்பு களேபரங்கள் எல்லாம் ஒரு மாதிரி முடிந்து பரீட்சைகள் ஆரம்பித்து நடந்து கொண்டிருந்தன. அந்த சமயத்தில் கேன்டீன் மேனேஜர் என்னிடம் வந்து, "சார், பசங்க (மாணவர்களை வாத்தியார்கள் இப்டித்தான் குறிப்பிடுவார்கள்) எல்லாம் இந்திப் பாட்டு வேணும்னு கேட்கறாங்க, சார், என்ன செய்யட்டும்?" என்றார். நான் பசங்க கேட்டாப் போடுங்க என்றேன். இந்திப்பாட்டு அமர்க்களமாக பாடிக்கொண்டிருந்தது.

நமது கதாநாயக்கருக்குப் பொறுக்குமா? என் ரூமுக்கு வந்து, என்ன சார், இந்திப்பாட்டு போடக்கூடாதுன்னு சொல்லியிருந்தோமே, இப்போது போடுகிறீர்களே" என்றார். ஆமாம், மாணவர்கள் கேட்கிறார்கள் என்று கேன்டீன் மேனேஜர் சொன்னார். அதனால்தான் போடுங்கள் என்று சொன்னேன், என்று பதில் சொன்னேன்.

அதற்கு அவர், மாணவர்கள் கேட்டால்கூட இந்திப் பாட்டுக்களைப் போடக்கூடாது சார் என்றார்.

நான் சொன்னேன். அப்படியானால் எல்லா மாணவர்களிடமும் இந்திப்பாட்டு போடக்கூடாது என்று கையெழுத்து வாங்கி வா. பாதி பேருக்கு மேல் அப்படி கையெழுத்து போட்டால் கேன்டீனில் இருக்கும் இந்தி பாட்டு ரெக்கார்டுகளையெல்லாம் உடைத்துப் போடச் சொல்லி விடுகிறேன், என்றேன்.

அதற்கு அவர் அது எப்படி முடியும் சார் என்றார். அப்போது நான் ஒன்றும் செய்வதற்கில்லை என்றேன். அவர் கொஞ்சம் குரலை உயர்த்தி எப்படியும் நீங்கள் இந்திப் பாட்டு போடக்கூடாது என்றார்.

அப்போது எனக்கு வயது 35. இளமை முறுக்கு. என் மூளையில் திடீரென்று ஒரு பொறி தட்டியது. அதற்கு முந்தின தினம் அவருடைய பரீட்சைகள் அனைத்தும் முடிந்து விட்டன. அவர் படிப்பது இறுதி ஆண்டு.

நான் சொன்னேன். இத பாரு மிஸ்டர். நேற்றோடு உன் பரீட்சைகள் எல்லாம் முடிந்து விட்டன. இன்று நீ இந்தக் கல்லூரியின் மாணவன் இல்லை. "கெட் அவுட் ஆப் மை ரூம்" என்று ஓங்கிய குரலில் சொன்னேன்.

அவர் கல்லூரித் தலைவரிடம் போய் முறையிட்டிருக்கிறார். அவர், வார்டன் சொன்னது சரிதான், உன்னுடைய மூட்டை முடிச்செல்லாம் எடுத்துக்கொண்டு, உன்னுடைய ஊருக்குப் போய்ச்சேர் என்று சொல்லிவிட்டார்.

அதற்கப்புறம் பல ஆண்டுகள் கழித்து அவரைப் பார்த்தேன். ஒரு தனியார் எருக் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். பழைய வீராப்பு எல்லாம் இருந்த இடம் தெரியவில்லை.


போட்டோக்கள் நன்றி கூகுள்

9 கருத்துகள்:

  1. நல்லா இருக்கு
    அது என்ன போட்டோ ???


    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிளாக்குகளை மொட்டையாகப் போடுவது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் ஏதாவது கூகுள் போட்டோக்களைப் போட்டுக்கொண்டு இருக்கிறேன். கூகுள்காரன் இது வரை சண்டைக்கு வரவில்லை. எதற்கும் இனிமேல் ஒரு நன்றியைச் சேர்த்துவிடலாமென்று இருக்கிறேன். காசி, பணமா? எல்லாம் அவன் தயவிலதானே ஓடுகிறது.

      இந்தப் பிளாக்கில் உள்ள போட்டோக்களின் மூலம் எனக்குத்தெரியாது.

      நீக்கு
  2. nalla poluthupokku pathivu.sir.
    nan kooda, exam paper en kittathaan varum fail aakireven miratuveenganu nenaisean.

    பதிலளிநீக்கு
  3. திரு கந்தசாமி ஐயா,
    வீடுகளுக்கான மழைநீர் மேலாண்மை மற்றும் உப்பாகி விட்டிருக்கும் மண்ணை வளப்படுத்துவதற்குமான ஆலோசனைகள் இருப்பின் விவரமாகப் பதியவோ அல்லது மடலிடவோ வேண்டுகிறேன்.

    நல்ல செடிகள் வளரும் மண்ணாக இருந்த இடத்தில் போர் போட்டதால் வெளி வந்த கருங்கல் (மென்மையான பொடி போன்ற) மணலைக் கொட்டியதில் எந்த செடியும் இப்போது வளர்வதில்லை.

    மேலும் செடிகள் வளராத மண்ணில் வளமாக்க ஏதும் செய்ய முடியுமா? வீட்டைச் சுற்றி இருக்கும் இடமென்றாலும் செடிகள் வளர்க்க முடியாதிருப்பது வருத்தமாயிருக்கிறது.

    நீங்கள் துறை சார்ந்த நிபுணராக இருப்பதால் உங்களுக்கு விண்ணப்பம்.

    nanbann at gmail dot com க்கு அனுப்ப வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பதிவாகவே போட்டுடறேன். பலருக்கும் பயன்படட்டுமே.

      நீக்கு
  4. நல்லா இருக்கு உங்க அனுபவக் கதை! தொடருங்கள் வித்தியாசமான அனுபவங்களை! நன்றி!

    பதிலளிநீக்கு

  5. தங்கள் ஹிந்தி பாட்டு அன்பவம் போல் எனக்கும் ஏற்பட்டது.பழனி கல்லூரி மாணவர்கள் ஹிந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நான் எஸ்.எஸ்.எல் .சி தேர்வு எழுதினேன்.அப்பொழுது தர்ம ஹிந்தி.மும்மொழி திட்டம்.எங்களது நகரட்சிபள்ளி மாணவர் என்னை ஹிந்தித் தேர்வு எழுதவிடவில்லை.அரை மணிநேரத்தில் வெளியில் வரவேண்டும். நான் அரைமணிநேரத்தில் எழுதிவிட்டு வந்தேன்.பின்னர் எனது வேலை வாய்ப்புக்கு அந்த ஹிந்தி தேர்வு மதிப்பெண் உதவியது.
    ஹிந்தி எதிர்த்தவர்கள் இப்பொழுது தமிழகத்தில் ஆங்கிலம் படி தொட்டி எல்லாம்.தமிழ் பெயர்கள் யாரும் வைப்பதில்லை.
    முதலில் வருமானம்.பின்னர் மொழி. அனால் தமிழ் மொழிப்பற்று எங்கு சென்றாலும் விடாது.பல மொழி அறிவு பிழைப்பிற்கு. தாய்மொழி பற்று அவசியம். ஆனால் ,இப்பொழுது 3 முதல் ஐந்து வயதுவரை ஆங்கில்ப்பாடல்தான்.அந்த மலழையைத் தமிழ்பாட்டு பாடச்சொல்லி கேட்பவர்கள் யாரும் இல்லை.எனது பள்ள நண்பர்களும் ஹிந்தி படிக்கவ்ல்லை என்றே உணருகிறார்கள்.கடவுள்,ஹிந்தி இந்த எதிர்ப்பு இனிமேல் எடுபடாது.ananthako.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியல் ஆதாயத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, அனந்தகிருஷ்ணன் அவர்களே.

      நீக்கு