திங்கள், 30 ஏப்ரல், 2012

உதகமண்டலம் - மலைகளின் ராணி

மலை வாசஸ்தலங்களின் ராணி எனப் புகழ் பெற்றது மக்களால் சுருக்கமாக ஊட்டி என்றழைக்கப்படும் உதகமண்டலம். ஒத்தைக்கல் மந்து என்பது மருவி உதகமண்டலம் ஆகி அது சுருங்கி ஊட்டி என்றாயிற்று.

கோடை காலத்தில் தங்க நல்ல இடம். பேங்கில் ஓரளவு கணிசமான அளவு தொகை (சுமார் 10 லட்சம்) இருந்தால் குடும்பத்துடன் ஒரு வாரம் போய் இருந்து விட்டு வரலாம். ஹனிமூன் தம்பதிகள் பெண்ணின் தகப்பனார் செலவை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் போய்வர தகுந்த தலம்.

ரூம் வாடகை 4000 ரூபாயிலிருந்து 20000 ரூபாய் வரை அவரவர் சக்திக்குத் தகுந்த மாதிரி கிடைக்கிறது. நீங்கள் அரசாங்க உயர் அதிகாரியாய் இருக்கும் பட்சத்தில் கவர்ன்மென்ட் விடுதிகளில் உங்கள் டிபார்ட்மென்ட்டைச் சேர்ந்த ஊட்டியில் பணி புரியும் அலுவலர்கள் ஏற்பாடு செய்து விடுவார்கள். மற்றவர்கள் தங்கள் கைக்காசைத்தான் செலவு செய்யவேண்டும்.

என்னை மாதிரி இளைஞர்களுக்கு அங்கு போனவுடன் நாலு பெக் விஸ்கி போட்ட மாதிரி தலை கழுத்தில் நிற்காமல் தள்ளாடும். அப்படிப்பட்டவர்கள் அங்கும் இங்கும் அலையாமல் ரூமில் கம்பளியைப் போர்த்திக்கொண்டு தூங்கவும்.

நானும் என் நண்பரும் இரண்டு நாட்கள் ஊட்டி சென்று வந்தோம். இவ்வாறு சென்று வர வாய்ப்பு இல்லாத நண்பர்கள் இங்கு இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து இன்புறவும்.


1.சேரிங் கிராஸ்:

ஊட்டியில் முதலில் உங்களை வரவேற்கும் அடையாளச்சின்னம்.



2. ஊட்டி லேக்:

தண்ணீரைத் தொட்டு விட்டால் ஒரு பாட்டில் பினாயில் வேண்டும் கை கழுவ. அத்தனையும் சுத்தமான சாக்கடை நீர்.


3. பொட்டானிகல் கார்டன்.


பல சினிமாக்களில் காட்டப்பட்டு விட்டதால் நேரில் பார்க்கும்போது அவ்வளவு த்ரில் இருக்காது.





4. சில இயற்கை / செயற்கைக் காட்சிகள்.





5. நாங்கள் தங்கியிருந்த லாட்ஜ்:

Lakshmi Cottages
272,Church Hill Lane,
Behind Safire Grand Cottage,
Udhagamandalam - 630001.


Phone: LL 0423-2452141
Mobile: 98435 67425


24 hours hot water, Parking Space Available. Located in a serene atmosphere within walking distance of Charring Cross. 





ஆயுட்காலத்தில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய ஊர்.


புதன், 25 ஏப்ரல், 2012

பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!

பணம் ஒரு பேய்.


பணக்காரனுக்குத் தூக்கம் இல்லை.


பணம் வந்தால் குணம் போய்விடும்.

இப்படிப் பல பழிமொழிகளைக் கேட்டிருப்பீர்கள். அவை அனைத்தும் உண்மைதான்.

கூடவே இந்தக் கதையையும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஒரு ராஜாவிடம் ஒரு அதிகாரி வேலை பார்த்து வந்தான். நல்ல வாழ்க்கை நடத்தப் போதுமான சம்பளம் ராஜா கொடுத்து வந்தார். அவனும் தன் மனைவி மக்களுடன் நிம்மதியான வாழ்க்கை நடத்தி வந்தான்.

ஒரு நாள் அவன் ஒரு வேலையாக வெளியூர் போகவேண்டியிருந்தது. கட்டுச்சாதம் கட்டி எடுத்துக்கொண்டு புறப்பட்டான். போகும் வழியில் ஒரு காடு. அதன் வழியாகப் போகும்போது அவனுக்குச் சிறிது களைப்பாயிருந்ததால் ஒரு மரத்தடியில் இளைப்பாறப் படுத்தவன் அப்படியே தூங்கிப்போனான்.

தூங்கி எழுந்து கட்டுச்சோற்றை சாப்பிடலாமென்று பார்க்கையில் கட்டுச் சோத்தைக் காணவில்லை. இந்தக் காட்டில் என் கட்டுச்சோற்றிற்கு எந்தத் திருடன் வந்தான் என்று சத்தமாகப் புலம்ப ஆரம்பித்தான்.

அப்போது அவன் படுத்திருந்த மரத்தில் இருந்து ஒரு பூதம் இறங்கி வந்தது. அது சொல்லிற்று; நான் இந்த மரத்தில் வசிக்கும் பூதம். நான் சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டன. உன்னுடைய கட்டுச்சாத வாசனை என்னை மயக்கியது. அதனால் அதை எடுத்து சாப்பிட்டு விட்டேன். அதற்குப் பதிலாக நான் உனக்கு ஏழு ஜாடி தங்கக்காசுகள் கொடுக்கிறேன்  நீ அதை வைத்துக்கொள். இப்போது நீ வீட்டுக்குப் போனால் அந்த ஏழு ஜாடிகளும் இருக்கும் என்றது.

இவனும் உடனே ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு வந்து பார்த்தான். பூதம் சொன்ன மாதிரி ஏழு ஜாடிகள் இருந்தன. அவைகளை ஆவலுடன் திறந்து பார்த்தான். எல்லா ஜாடிகளிலும் தங்கக் காசுகள் இருந்தன. அவன் சந்தோஷத்துடன் எல்லா ஜாடிகளையும் திறந்து பார்த்தான். ஏழாவது ஜாடியைப் பார்த்ததும் அவன் சந்தோஷம் காணாமல் போனது. காரணம் அந்த ஜாடியில் தங்க நாணயங்கள் ஒரு அரைக்கால் ஜாடி அளவு குறைவாய் இருந்தது.

இவனுக்கு ரொம்ப வருத்தமாய்ப் போய்விட்டது. அந்த ஜாடியையும் நிரப்பிப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் ஆழமாக மனதில் பதிந்து விட்டது. ராஜாவிடம் சம்பளம் அதிகம் வேண்டுமென்று கேட்டுப் பெற்றான். மூன்று வேளைச் சாப்பாட்டை இரண்டு வேளையாக்கி பறகு ஒரு வேளையாக்கினான். வீட்டில் இருக்கும் பண்ட பாத்திரங்களையெல்லாம் விற்றான். என்ன செய்தும் அந்த ஏழாவது ஜாடியை நிரப்பவே முடியவில்லை. இந்த ஏக்கத்திலேயே உடல் மெலிந்து பயித்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டான்.

ராஜா அவனை அழைத்து என்ன காரணத்தினால் இப்படி இளைத்து விட்டாய் என்று கேட்டார். அதற்கு அவன் ஒன்றுமில்லைங்க என்றான். ஆனால் ராஜாவிற்கு காரணம் விளங்கி விட்டது. அந்த ஏழு ஜாடி தங்கக்காசுகள்தானே என்றார். அவனுக்கு ஆச்சரியமாய் போய் விட்டது. நம் வீட்டில் இருக்கும் ஜாடிகள் ரகசியம் ராஜாவிற்கு எப்படித் தெரிந்தது என்று ஆச்சரியப்பட்டான்.

இவன் ஆச்சரியப்பட்டதைக் கண்ட ராஜா சொன்னார். அந்த பூதத்தையும் அதன் ஏழு ஜாடி தங்கக் காசுகளையும் எனக்குத் தெரியும். நீ உயிரோடு வாழ விரும்பினால் அந்த ஏழு ஜாடிகளையும் கொண்டுபோய் அந்த பூதத்திடமே கொடுத்து விட்டு வா என்றார். இவனும் அதை மாதிரி செய்து கொஞ்ச நாளில் பழைய மாதிரி ஆனான்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், பணத்தின் மீதுள்ள ஆசையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்பதுதான். நமக்காகத்தான் பணமே தவிர பணத்துக்காக நாம் இல்லை என்பதை உணரவேண்டும். நம் வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை சம்பாதிக்கவேண்டும். எதிர்காலத்திற்காக சேமிக்கவும் வேண்டும்.

பணம் இல்லாமல் இவ்வுலக வாழ்க்கை இல்லை. எதிர்காலத்திற்காக சேமிக்கிறேன் என்று சொல்லி நிகழ்காலத்தை நாம் இழந்து விடக்கூடாது.

பதிவுகளில் எரிச்சலூட்டுபவை.


1. முகநூல் விளம்பரம்
நிறைய பதிவுகளில் இந்த முகநூல் விளம்பரம் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னால் வந்து நிற்கிறது. சின்னப் பசங்க அம்மா காலையே சுத்திச்சுத்தி வருவாங்களே அந்த மாதிரி. நாயை விட்டுகிற மாதிரி சூ, சூ என்றால் போகாமல் அப்படியே நிற்கிறது. பதிவை விட்டு ஓடுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை.


2. மேலும் படிக்க
பதிவுக்குள்ள போனமா, பதிவப் படிச்சமான்னு இருக்கணும். அதை உட்டுப்புட்டு மோர், தயிர், மேலும், இப்படீன்னு பல பதிவுகளில் போட்டிருக்கிறார்கள். அந்த மோரும் தயிரும் எங்கிருக்குதுன்னு கண்டுபிடிக்கறதுக்குள்ள தாவு தீர்ந்து போகுது.


3. கருப்பு பின்புலம்
வெள்ளையில் கருப்பு எழுத்துக்கள்தான் படிப்பதற்கு சுகம். சில பேர் கருப்பு பின்புலத்தில் வெள்ளை அல்லது வேறு கலர் எழுத்துகளை உபயோகிக்கிறார்கள். அந்த மாதிரி பதிவுகளைப் படிக்கவே முடிவதில்லை.


4. சிறிய எழுத்துகள்
எழுத்துகள் ஓரளவுக்கு படிக்கிற மாதிரி இருக்கணும். சின்ன சின்ன எழுத்துக்கள் படிப்பதற்கு கடினமாக இருக்கின்றன. அதைப் பெரிது பண்ணிப் படிக்க கம்ப்யூட்டரில் வசதி இருந்தாலும் அது ஒரு கூடுதல் வேலை. இதனால் பதிவைப் படிக்காமல் போவதற்கு வாய்ப்பு அதிகம்.


5. வரிகளுக்கிடையே போதிய இடைவெளி இல்லாமை.
ஒரு பக்கம் முழுவதும் இடைவெளி இல்லாமல் ஒரு பதிவு இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் போதிய இடைவெளி இருந்தால்தான் படிக்க சௌகரியம்.


6. பின்னூட்டம் போடுவதற்கு இடைஞ்சல்கள்
ஐயா பின்னூட்டம் போடுங்கள் என்று கோவில்களில் பிச்சைக்காரர்கள் கூவுகிற மாதிரி கூவுகின்ற பதிவுகளை நிறையப் பார்க்கின்றோம். சரி, ஐயோ பாவம் என்று பின்னூட்டம் போடப் போனால் வரும் உபத்திரவம் அதிகம். முதலில் தமிழில் பின்னூட்டம் போடுகின்றோம். முடித்து பப்ளிஷ் என்று சொன்னால் உடனே வேர்டு வெரிபிகேஷன் என்று ஒன்று. நீங்கள் ரோபோட் இல்லையென்று நிரூபியுங்கள் அப்படீன்னு ஒண்ணு. அதில மேகமூட்டத்தில கலங்கின மாதிரி ஆங்கில எழுத்துக்கள். அப்புறம் நீங்க ஆங்கிலத்திற்கு மாறி, அந்த எழுத்துக்களை ஒண்ணாம் கிளாஸ் பையன் மாதிரி எழுத்துக்கூட்டி டைப் பண்ணவேண்டும். அப்புறம் பப்ளிஷ் பண்ண வேண்டும்.


ஏதோ ரோபோட் வந்து இவங்க பதிவுல ஆயிரக்கணக்குல பின்னூட்டம் போட்ட மாதிரியும் அதைத் தடுக்க இந்த யுத்தியைக் கடைப்பிடிக்கற மாதிரியும் பாவலா. இதனால் வருகிற ஒன்றிரண்டு பின்னூட்டங்களும் ஓடிப்போய்விடும்.


பதிவுகள் போடுவது நாலு பேரு படிக்கட்டும் என்றுதானே. அதில் இவ்வளவு சங்கடங்கள் கொண்டு வந்தால் எப்படிங்க படிக்கிறது? எப்படிங்க பின்னூட்டம் போடறது? பதிவுலக கனவான்களே, சிந்தியுங்கள்.

திங்கள், 23 ஏப்ரல், 2012

நல்ல ஆஸ்பத்திரியை அடையாளம் காண்பது எப்படி?



மனிதனாகப் பிறந்தவர்களுக்கு ஆண்டவன் பல சோதனைகளைக் கொடுக்கிறான். அதில் ஒன்றுதான் உடல்நலக் குறைவு. சாதாரண தலைவலி, காய்ச்சல் போன்ற வியாதிகளென்றால் நாம் வழக்கமாகப் போகும் டாக்டரிடம் சென்று வைத்தியம் செய்து கொள்ளலாம்.


ஆனால் சற்றுப் பெரிய, குறிப்பாக நெஞ்சுவலி போன்ற நோய்கள் வந்து விட்டால், வீட்டில் பெரிய குழப்பம் ஏற்பட்டுவிடும். என்ன செய்வது, எந்த ஆஸ்பத்திரியில் சேர்ப்பது என்பது பற்றி ஆளாளுக்கு யோசனை சொல்வார்கள். வசதி வாய்ப்புகள் அதிகம் உள்ளவர்களானால் பிரச்சினை இல்லை. ஊரில் உள்ள பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கலாம். எவ்வளவு செலவானாலும் கொடுத்துவிட்டு வந்து விடலாம்.


ஏழைக்குடும்பங்களுக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை. நேராக கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போய் விடுவார்கள். அங்கு என்ன ஆனாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப் பக்குவம் அவர்களுக்கு உண்டு.


ஆனால் நடுத்தர வசதியுள்ள குடும்பங்களில் இந்த மாதிரி சமயங்களில் முடிவு எடுப்பது மிகவும் கடினம். கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போவது அவர்களுக்கு கௌரவக்குறைச்சல். பெரிய ஆஸ்பத்திரிகளுக்குப் போய் அங்கு ஆகும் செலவுகளைத் தாக்குப் பிடிப்பதுவும் கடினம். இவர்கள் நிலை பரிதாபத்திற்குரியது.


இவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள எல்லா நபர்களுக்கும் மெடிகல் இன்சூரன்ஸ் எடுப்பது மிக மிக அவசியம். அதுவும் ஆஸ்பத்திரிகளில் பணம் செலுத்த வேண்டியிராத பாலிசி எடுப்பது அவசியம். அது தவிர இந்த வசதிகளைச் செயல்படுத்தும் ஆஸ்பத்திரிகள் எவை என்று கண்டு பிடித்து, அவைகளுடன் தொடர்பு வைத்திருப்பது அவசியம். 


இவைகளையெல்லாம் தங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்போதே செய்து வைத்திருப்பது அவசியம். தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது போல் இருக்கக்கூடாது.


இந்தக் குறிப்புகளை நான் குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. டாக்டர்கள் கண் கண்ட தெய்வங்கள்தான். அதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம். ஆனால் அவர்கள் ஆஸ்பத்திரி என்று ஒன்று கட்டிவிட்டார்களேயானால் அவர்களே சாத்தான்களின் மறு அவதாரமாகி விடுகிறார்கள்.


உலகத்தில உசிரோட இருக்கிற நோயாளிகளுக்குத்தான் வைத்தியம் பண்ணுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனா எனக்குத் தெரிந்து இங்குள்ள பெரிய கார்பரேட் ஆஸ்பத்திரியில் செத்துப் போனவர்களுக்குக் கூட வைத்தியம் பார்ப்பார்கள். சினிமா இல்லைங்க. நிஜம்.


ஒருவர் சீரியஸ் நோயாளியாக இருந்தால் அவரை உடனடியாக ICU வில் வைத்து விடுவார்கள். இது எல்லாருக்கும் தெரியும். நெருங்கிய உறவினர்களை மட்டும் தினம் ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ பார்க்க விடுவார்கள். என்ன வைத்தியம் பார்க்கிறார்கள் என்ற விவரம் சொல்ல மாட்டார்கள். தினம் காலையில் டாக்டர் வந்து விட்டுப் போனவுடன் ஒரு முழ நீளத்திற்கு மருந்து லிஸ்ட் கொடுப்பார்கள். அந்த மருந்துகளை அந்த ஆஸ்பத்திரியில் இருக்கும் கடையில்தான் வாங்க வேண்டும்.


அதை ICU வாசலில் கொண்டு போய்க் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள். நாம் என்ன நினைப்போமென்றால், இந்த மருந்துகளை எல்லாம் நம் உறவினருக்குக் கொடுப்பார்கள் என்றுதானே? உங்கள் நினைப்பு தவறு. அந்த மருந்துகள் அப்படியே மருந்துக் கடைக்குப் போய் விடும். தினந்தோறும் இப்படி லிஸ்ட் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். நாமும் வாங்கிக்கொடுத்துக்கொண்டே இருப்போம்.


இதை நம்புவது கடினம். பெரிய ஆஸ்பத்திரிகளில் இப்படியும் மனச்சாட்சி இல்லாமல் இருப்பார்களா என்ற சந்தேகம் வரும். இது நடக்கிறது என்று நான் உறுதியாகச் சொல்லுகிறேன்.


ஆகவே நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால் உங்கள் ஊரில் இருக்கும் ஆஸ்பத்திரிகளைப் பற்றி நன்கு விசாரித்து,ICU இல்லாத ஆஸ்பத்திரியைக் கண்டுபிடித்து அந்த ஆஸ்பத்திரியின் டாக்டரிடம் தொடர்ந்து தொடர்பில் இருங்கள். 


சில ஆஸ்பத்திரி டாக்டர்கள் நோயாளிகளிடம் அதீத அன்புடையவர்களாய் இருப்பார்கள். அவர்கள் ஆஸ்பத்திரிக்குப் போய் விட்டால் நோய் குணமானபின்பும் உங்களை டிஸ்சார்ஜ் செய்யமாட்டார். நீங்களாக டாக்டரை நச்சரித்தால் ஒழிய உங்களை டிஸ்சார்ஜ் பண்ண மாட்டார். அப்படிப்பட்ட ஆஸ்பத்திரியில் போய் சிக்கிக் கொள்ளவேண்டாம்.


நீங்கள் எப்பேர்ப்பட்ட வியாதியிலிருந்தும் குணமாவது உங்கள் விதியைப் பொருத்துத்தான் அமையும் என்பதை மனதில் கொள்ளவும். அதனால் உங்களுடைய வசதிக்கு மீறீன வைத்தியத்திற்குத் தலைப்படாதீர்கள்.


உங்களுக்கு எப்போதும் நல்ல உடல் நலம் வாய்க்க ஆண்டவன் அருள் புரியட்டும்.



சனி, 21 ஏப்ரல், 2012

நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?



இது ரொம்ப சுலபம். ஒரே ஒரு கொள்கை வைத்துக்கொள்ளவேண்டும். அதாவது நான் நல்ல கணவனாக இருப்பேன் என்று.  இதில் ஆழமான பிடிப்பு வேண்டும். கொள்கைப்பிடிப்பு இல்லாதவன் மனிதனே அல்ல.

முதலில் செய்யவேண்டியது என்னவென்றால்வெட்கம், மானம், மரியாதை, சூடு, சொரணை, இப்படி வேண்டாத சாமான்களை எல்லாம் காயலான் கடைக்குப் போட்டு விடவேண்டும். அப்புறம் நல்ல கணவனாவது வெகு சுலபம்.

வளவளவென்று சும்மா பேசி என்ன பிரயோஜனம்? சுருக்கமாக பாய்ன்ட் பை பாய்ன்ட்டாக (Point by Point) நெம்பர் போட்டு சொல்லிவிடுகிறேன்.

   1.   காலையில் மனைவிக்கு முன் எழுந்திருந்து நல்ல டிகாக்ஷன் காப்பி   போட்டு மனைவி எழுந்திருக்கும்போது சூடாகக் கொடுக்கவும்.
   
   2.   காய்கறிகள் வாங்கி வருவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவைகளை சமையலுக்குத் தேவையானபடி அரிந்து, கழுவிக் கொடுக்கவேண்டும்.

   3.   அவ்வப்போது உபயோகித்த பாத்திரங்களை அப்போதைக்கப்போது கிளீன் செய்து அதது வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவும்.

   4.   சாப்பிடும்போது ஆஹா, பேஷ் என்று சொல்லிக்கொண்டே சாப்பிடவும்.

   5.   துணி துவைக்கும் வேலைக்காரி வரவில்லையென்று துணிகளை பாத்ரூமிலேயே விட்டு விடக்கூடாது. உங்கள் துணிகளைத் துவைத்து காயப்போடவும். (உங்களில் உங்கள் மனைவியும் அடக்கம் என்பதை மறக்காதீர்கள்)

   6.   மனைவிக்கு உடம்பு சரியில்லையென்றால் ஆபீசுக்கு மருத்துவ விடுப்பு போட்டுவிட்டு மனைவிக்குத் தேவையானவை பணிவிடைகளைச் செய்யவும்.

   7.   மனைவி ஷாப்பிங்க் போகும்போது கூடவே போய் அவர்கள் வாங்கும் பொருட்களை பத்திரமாக வீட்டிற்குக் கொண்டுவந்து சேர்க்கவேண்டும்.
   
   8.   மாமியார் வீட்டு ஜனங்கள் வந்தால் ரயில்வே ஸ்டேஷன் அல்லது பஸ் ஸ்டேண்டிற்குப் போய் வரவேற்று டாக்சி வைத்து வீட்டிற்குக் கூட்டிவரவேண்டும். ஆட்டோவில் எக்காரணம் கொண்டும் கூட்டி வரக்கூடாது.

   9.   அந்த ஜனங்களை உள்ளூரில், பக்கத்து ஊர்களில் பார்க்க வேண்டிய இடங்களுக்கு டாக்சியில் கூட்டிக்கொண்டு போய் காண்பித்துக் கூட்டி வரவேண்டும்.

   10. அவர்கள் சில மாதங்கள் கழித்து ஊருக்குப் போகும்போது உண்மையாக வருத்தப்பட வேண்டும். கண்களில் கண்ணீர் வந்தால் நல்லது.

இந்த முறைகளெல்லாம் அக்மார்க் முத்திரை வாங்கியவை. இவை கட்டாயம் உங்களுக்கு நல்ல கணவன் பட்டத்தை உங்கள் மனைவியிடமிருந்து மட்டுமல்ல, உங்கள் மாமியாரிடமிருந்தே பெற்றுத்தரும். நான் கேரன்டி.

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

கழுத்துவலி - பாகம் 2


நண்பர் நீடுர் அலி அவர்கள் ஒரு யோகா பயிற்சியின் சுட்டியை அனுப்பினார்கள். மிகவும் எளிய பயிற்சி. கழுத்து வலியில்லாதவர்கள் கூட செய்யலாம். நல்ல பலன் கொடுக்கும்.

வியாழன், 19 ஏப்ரல், 2012

கழுத்து வலியைக் குணப்படுத்த வழி


நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல். - குறள்.

ஆகவே எந்த நோயாக இருந்தாலும் அது எப்படி, எதனால் வந்தது என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

இந்த நாளில் கழுத்து வலி வருவதற்கு முக்கியமான மூன்று காரணங்கள்.

1. இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களில் போகும்போது குண்டு குழிகளில், வேகத்தடுப்பான்களில், வேகத்தைக் குறைக்காமல் வேகமாகப் போகும்போது ஏற்படும் அதிர்ச்சி.

2. கணிணி முன் மணிக்கணக்காக ஒரே நிலையில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பது.

3. தலையணையின் உயரம் ஒத்துக் கொள்ளாமல் போவது.

முதல் இரண்டு காரணங்களையும் பலர் அறிந்திருப்பார்கள். அதற்கு உண்டான வைத்தியத்தையும் அறிந்திருப்பார்கள். இந்த மூன்றாவது தலையணை காரணத்தையும் பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கக் கூடும். இது நாள் வரை டாக்டர்கள் சொல்லி வந்தது என்னவென்றால் தலையணை அதிக உயரம் கூடாது என்பதுதான்.

என்னுடைய தனிப்பட்ட அனுபவம் என்னவென்றால் இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்பதே. ஆகவே நீங்கள் உங்களுக்கு எவ்வளவு உயரமான தலையணை வேண்டும் என்பதை அனுபவத்தில் கண்டு பிடித்து அதை உபயோகப்படுத்தவேண்டும்.

நான் உயரம் குறைவான தலையணையைத்தான் உபயோகித்து வந்தேன். கழுத்து வலி இருந்து கொண்டே இருந்தது. ஒரு பரிசோதனைக்காக ஒரு உயரமான தலையணையை உபயோகித்தேன். இரண்டு மூன்று நாளில் கழுத்து வலி குறைந்து, ஒரு வாரத்தில் முற்றிலும் சரியாகி விட்டது.

இதுலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், ஒவ்வொருவரும் தங்களுக்குப் பொருத்தமான தலையணையைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்கவேண்டும்.

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

தீராத தும்மலைத் தீர்க்க! (பாகம் 2)

1956 ம் வருடம். கோயம்புத்தூர், கோவை ஆகாத சமயம். ஏழைகளின் ஊட்டி என்று சொல்லப்பட்ட ஊர். அப்போது எனக்கு 22 வயது. இப்போது எவ்வளவு என்று கணக்குத் தெரிந்தவர்கள் கணக்குப்போட்டுக்கொள்ளுங்கள். கணக்கு தெரியாதவர்கள் தெரிந்தவர்களை அணுகி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

அப்போது ஒரு கை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இங்கிலீஷ் டாக்டர்கள் கோயமுத்தூரில் இருந்தார்கள். ஊரில் ஒரே ஒரு ஆஸ்பத்திரிதான். அதுதான் பெரிய ஆஸ்பத்திரி என்று வழக்கில் கூறப்படும் கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி. பெரும்பாலான ஜனங்கள் எந்த சீக்கென்றாலும் வீட்டிலேயே கை வைத்தியம், அதைத்தாண்டி மந்திரம், மாந்தரீகம், நாட்டு வைத்தியம் இதையெல்லாம் பார்த்துவிட்டு நோய் குணமாகாவிட்டால், அப்புறம்தான் பெரியாஸ்பத்திரி கொண்டு செல்வார்கள்.

பெரிய ஆஸ்பத்திரி போகும்போதே கேஸ் ரொம்ப மோசமாக இருக்கும். அங்கு வியாதி குணமாகி திரும்புபவர்கள் பாதி பேர்தான். ஆகவே ஒருவரை பெரிய ஆஸ்பத்திரி கொண்டு போயிருக்கிறார்கள் என்று சொன்னாலே சொந்தக்காரர்கள் எல்லாம் கடைசிக் காரியத்திற்கு தயாராகி விடுவார்கள். எல்லா உறவினர்களுக்கும் தகவல் போய்விடும்.

இது தவிர ஊரில் நாட்டு வைத்தியர் என்று அழைக்கப்படும் ஆயுர்வேத டாக்டர்கள் அங்கோன்றும் இங்கொன்றுமாக சிலர் இருந்தார்கள். அதில் எங்கள் வீட்டிற்குப் பக்கத்திலேயே மைசூர் வைத்தியர் என்று அழைக்கப்படும் ஒரு நாட்டு வைத்தியர் இருந்தார். நல்ல கைராசிக்காரர் என்று பெயர் பெற்றவர். அவர்கள் குடும்பமே நாட்டு வைத்தியத்தில் பெயர் பெற்றவர்கள். திப்பு சுல்தான் கொங்கு நாட்டிற்கு படையெடுத்து வந்தபோது அந்தப் படையுடன் வந்தவர்கள். இங்கேயே தங்கி விட்டார்கள்.

நிற்க, என்னுடைய வியாதியும் அவ்வளவு சீரியஸ் ஆக இல்லாததினால் பெரிய ஆஸ்பத்திரி போகும் அளவிற்கு ஆகவில்லை. அப்படி ஏதாவது ஆகியிருந்தால் உங்களுக்கு இந்தப் பதிவைப் படிக்கும் பாக்கியம் இருந்திருக்காது.

ஒரு நாள் என் தந்தையார் என்னை இந்த மைசூர் வைத்தியரிடம் அழைத்துச்சென்றார். அவர் என்னுடைய தும்மல் வரலாற்றைக் கேட்டு விட்டு, வைத்தியம் சொன்னார்.

இரண்டு மருந்துகள் கொடுக்கிறேன். ஒன்று உள்ளுக்குச் சாப்பிடவேண்டியது. இன்னொன்று வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்து குளிக்கவேண்டியது. தலைக்கு இந்தத் தைலம் தேய்த்துக் குளிப்பதற்கு சில பத்தியங்கள் உண்டு. தலையைக் கழுவுவதற்கு அரப்பு தேய்க்கக் கூடாது. சீவக்காய்த்தூள் மட்டும்தான் தேய்த்துக் கொள்ளவேண்டும். குளித்து முடித்தவுடன் தலையை ஈரம் போக நன்றாக காய வைக்கவேண்டும்.

அன்று முழுவதும் காய்ச்சின நீர்தான் வெதுவெதுப்பாக குடிக்கவேண்டும். தயிர், மோர் சேர்க்கக் கூடாது. வெளியில் அலையக்கூடாது. பகலில் தூங்கக் கூடாது. மதியம் சீரக ரசம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு ஆறு மாதம் இருந்தால் குணம் தெரியும் என்றார்.

அவர் கொடுத்த மருந்துகள் நன்றாக ஞாபகம் இருக்கிறது. உள்ளுக்கு சாப்பிட சியவனப்பிரகாச லேகியம். தலைக்கு குளிக்க சிந்துவாரத்தைலம். இரண்டையும் வாங்கிக்கொண்டோம். முதல் தடவை அந்தத் தைலத்தை தலையில் வைத்தவுடன் சில்லென்று ஒரு உணர்ச்சி. தைலம் தலைக்குள் போவது மாதிரியே இருந்தது. பிறகு எப்போதும் அந்த மாதிரி உணர்ச்சி ஏற்பட்டதே இல்லை.

மூன்று மாதத்தில் ஓரளவு குணம் தெரிந்ததால் மருந்துகளைத் தொடர்ந்து உபயோகித்தேன். ஆறு மாதத்தில் தும்மல் அடியோடு நின்றுவிட்டது. எப்போதாவது சளி பிடிக்கும். இரண்டு மூன்று நாளில் சரியாகிவிடும். ஒரு வருடத்தில் என்னுடைய தும்மல் அறவே காணவில்லை. வைத்தியர் இந்த மருந்துகளைத் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும் என்று சொல்லியிருந்ததால் ஏறக்குறைய ஒரு எட்டு வருடம் இந்த மருந்துகளைத் தவறாமல் உபயோகித்தேன்.

பிறகு மனிதனுக்கு வழக்கமாக வரும் வியாதியான "மெத்தனம்" என்னைப் பீடித்தது. மருந்துகளை உபயோகிப்பதை நிறுத்து விட்டேன். இரண்டு வருடங்கள் நன்றாக இருந்தேன். பிறகு பழைய தும்மல் வர ஆரம்பித்தது. ஆஹா, தவறு செய்து விட்டோம் என்று உடனே தைலமும் லேகியமும் வாங்கி உபயோகிக்க ஆரம்பித்தேன்.

ஆனால் உடனே குணம் தெரியவில்லை. தும்மல், சளி, நுரையீரலில் கபம், நடந்தால் மூச்சு இரைத்தல், இப்படி ஏறக்குறைய ஆஸத்மா நிலைக்குப் போய்விட்டேன். இங்கிலீஷ் மருந்துகளும் சாப்பிடவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் விடப்பிடியாக இந்த தைலத்தை மட்டும் உபயோகித்து வந்தேன். ஏறக்குறைய ஐந்து வருடம் கழித்து இந்த தொந்திரவுகள் குறைந்தன.

அப்போதிலிருந்து இன்று வரை இந்த தைல வைத்தியத்தைத் தொடர்ந்து வருகிறேன். முதலில் பார்த்த மைசூர் வைத்தியர் (சுப்பாராவ் என்று பெயர்) காலனுக்கு வைத்தியம் பார்க்கச் சென்றுவிட்டார். பிறகு அவருடைய ஒன்று விட்ட சகோதரர் சீனிவாச ராவிடம் இந்தத் தைலம் வாங்கி உபயோகித்தேன். அவர் இந்த தைலத்திற்கு "நிர்குண்டித்தைலம்" என்று பெயர் வைத்திருந்தார். அவர் அமரிக்காவில் இருக்கும் தன் பெண் வீட்டிற்குப் போய்விட்டார்.

பிறகு தற்போது கோவையில் பிரபலமாக இருக்கும் கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலையில் இந்தத் தைலம் வாங்கி உபயோகிக்கிறேன். அங்கு இந்தத் தைலத்திற்கு "வாசாதி தைலம்" என்று பெயர். வாரம் ஒரு முறை, சனிக்கிழமை இந்த தைல ஸ்நானம் நடக்கும். தும்மல், சளி என்பவற்றை நான் மறந்து பல வருடங்கள் ஆகி விட்டன.

ஆயுர்வேத முறை நல்ல முறைதான். ஆனால் நாட்பட மருந்துகள் சாப்பிடவேண்டும். தவிர ஒவ்வொருவருக்கும் உடல்வாகு வேறுபடுவதால் ஒருவருக்கு குணம் கொடுக்கும் மருந்துகள் மற்றவர்களுக்கும் அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது. தவிர இந்த வைத்தியத்தில் நம்பிக்கை, பத்தியம், நீடித்த உபயோகம் ஆகியவை இன்றியமையாதவை.

திங்கள், 16 ஏப்ரல், 2012

தீராத தும்மலைத் தீர்க்க! (பாகம் 1)


எனக்கு சிறு வயதில் தீராத தும்மலும் சளியும் இருந்தன. காலையில் எழுந்ததும் ஒரு ஐம்பது தும்மல் போடுவேன். பிறகு அவ்வப்போது தும்மல் வரும். மூக்கிலிருந்து எப்போதும் நீராகக் கொட்டிக் கொண்டே இருக்கும். எப்போதும் கைக்குட்டை கையிலேயே இருக்கும். (கைக்குட்டை கையில் இல்லாமல் வேறெங்கு இருக்கும்னு யாரோ முணுமுணுக்கிறார்கள். இது ஒரு சீரியஸ் பதிவு. நக்கலெல்லாம் வேண்டாம்).

என் பாட்டி என்னை தன் கிராமத்தில் ஒரு நாட்டு வைத்தியரிடம் கூட்டிக்கொண்டு போய் காண்பித்தார்கள். அந்த அம்மா (வைத்தியர்) என் பாட்டியிடம் ஒரு கவுளி வெத்திலையும் அரைப்படி பசு நெய்யும் வாங்கி வரச்சொன்னார்கள். அவைகளை வாங்கி வைத்துக்கொண்டு இரண்டு நாள் கழித்து வரச்சொன்னார்கள்.

இரண்டு நாள் கழித்து மீண்டும் போனோம். அந்த அம்மா அந்த வெற்றிலைச் சாற்றையும் நெய்யையும் சேர்த்துக் காய்ச்சி ஒரு திரவப் பதத்திற்கு மாற்றி, ஒரு பாட்டிலில் போட்டுக் கொடுத்தார்கள். அதை உபயோகிக்கும் விதம் எப்படியென்றால், அதில் இரண்டு சொட்டு வீதம் எடுத்து என் இரண்டு மூக்கிற்குள்ளும் விடவேண்டும். நான் கீழே படுத்துக் கொண்டு தாடையை மேல் நோக்கி வைத்துக் கொள்ளவேண்டும்.

ஐந்து நிமிடம் அப்படியே படுத்திருக்கவேண்டும். இந்த மருந்து மூக்கிற்குள் போனதுமே சுறுசுறு என்று மூக்கைப் பிராண்டும். மூக்கிற்குள் பெரிய அரிப்பாயிருக்கும். ஆனால் நான் மூக்கை ஒன்றும் செய்யக்கூடாது. ஐந்து நிமிடம் கழித்து எழுந்திருந்து மூக்கை சுத்தம் செய்து விட்டால், அப்புறம் சில மணி நேரம் தும்மல் வராது. ஆனால் அந்த மருந்தின் வேகம் குறைந்தவுடன் மறுபடியும் "பழைய குருடி கதவைத் திறடி" கதைதான்.

ஒரு ஆறு மாதம் இந்த வைத்தியம் நடந்தது. பிறகு என் பாட்டி சலித்துப் போய் இந்த வைத்தியத்தை விட்டு விட்டது. இப்படியே நானும் என் அடுக்குத் தும்மலும் வளர்ந்தோம். நான் படிப்பை முடித்து விட்டு வேலைக்குப் போன பிறகு என் தும்மல் வாழ்வில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது.

அது என்னவென்று இரண்டாம் பாகத்தில் சொல்லுகிறேன். காத்திருங்கள்.




சனி, 14 ஏப்ரல், 2012

உடுமலையில் வாகன விபத்து


கேரளா மாநிலம் கண்ணனூரிலுருந்து இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் பழனி, கொடைக்கானல், தேக்கடி ஆகிய ஊர்களுக்குச் சுற்றுலா புறப்பட்டிருக்கிறார்கள். சொந்த வாகனம். குடும்ப அங்கத்தினர் ஒருவர் டிரைவர்.

இரவு சாப்பிட்டுவிட்டு புறப்பட்டிருக்கிறார்கள். சுமார் 10 மணிக்குப் புறப்பட்டிருக்கலாம். வண்டி ஓட்டினவர் அன்று முழுவதும் பகலில் தூங்கியிருக்கமாட்டார் என்று நம்புகிறேன். கண்ணனூரிலிருந்து உடுமலை சுமார் 350 கி. மீ. இருக்கும்.


இரவு தூங்காமல் 7 மணி நேரம் வண்டி ஓட்டுவது தூக்கம் விழித்து நன்கு பழக்கமான டிரைவர்களால் மட்டுமே முடியும். இளமை வேகத்தில் நான் தூக்கம் முழித்து ஓட்டுவேன் என்கிற அகம்பாவத்தினால் பலர் வண்டி ஓட்டுவது உண்டு. இந்த டிரைவரும் அப்படிப்பட்ட ஒரு அகம்பாவத்தினால் வண்டி ஓட்டியிருக்கவேண்டும்.


அதிகாலை 4 மணிக்கு யாருக்கும் தூக்கத்தில் கண் சொருகும். இதை உணர்ந்து வண்டியை நிறுத்தி ஓரிரு மணி நேரம் ஓய்வெடுத்திருக்கவேண்டும். அதை சட்டை செய்யாமல் ஓட்டி தூக்கக் கலக்கத்தில் பாலத்தில் தடுப்புக் கம்பிகளில் மோதி அந்தக் கம்பிகளைத் தாண்டி பாலத்தில் விழுந்து பாதி பேர் மேலுலகம் சென்று விட்டார்கள்.


இதில் குற்றம் புரிந்தவர்கள் ஓட்டுனர் மட்டும் இல்லை. கூட பயணம் செய்த பெரியவர்கள் அனைத்துப் பேர்களும் குற்றவாளிகளே. ஓட்டுனர் சோர்வடையும்போது எச்சரிக்கை செய்து ஓய்வெடுக்கச் செய்திருக்க வேண்டும்.


இந்த சம்பவத்தை விதியின் விளையாட்டு என்பதா அல்லது மக்களின் முட்டாள்தனம் என்பதா?


புது வருடத்திலாவது மக்கள் விவேகத்துடன் செயல்படுவார்கள் என்று நம்புவோமாக!

வியாழன், 12 ஏப்ரல், 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள்



இனிய நந்தன வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வருமான வரி இலாக்கா


இந்திய நாட்டின் கற்பக விருக்ஷமே வருமான வரி என்று சொல்வதுண்டு. என்னைப் போல் ரிடைர்டான அரசு ஊழியர்களுக்கு சிறிது வருமான வரி கட்டவேண்டியுள்ளது. இந்த வயசான கிழடுகளுக்கே உண்டான ஒரு பொது குணம், எந்த வேலையாயிருந்தாலும் அதை உடனே முடித்து விட வேண்டும் என்பதுதான்.

அது ஏன் என்று யோசித்தபோது எனக்குத் தோன்றியது என்னவென்றால், நாளைக்கு என்று ஒரு வேலையைத் தள்ளிப்போட்டால் நாளைக்கு நாம் இருப்போமென்ற உத்திரவாதம் இல்லாததுதான். அதனால்தான் இந்தக்கிழடுகள் ஒவ்வொன்றுக்கும் அப்படிப் பறக்கின்றன.

நானும் இன்னும் இரண்டு நண்பர்களும்தான் வருடாவருடம் வருமான வரி ஆபீசுக்குப் போய் வருமான வரி படிவங்களைத் தாக்கல் செய்துவிட்டு வருவோம். ஒரு வருடமாவது அந்தந்த வருடத்துக்கான படிவங்கள் கிடைத்தது இல்லை. பழைய படிவங்களிலேயே வருடத்தை மாற்றி எழுதிக் கொடுப்போம். அவர்களும் வாங்கிக்கொள்வார்கள்.

அங்கே படிவங்கள் கொடுக்கும் இடத்தில் போய்ப் பார்த்தால் போன வருடத்திய படிவங்கள் ஆயிரக்கணக்கில் கொட்டிக் கிடக்கும். அங்கிருப்பவரிடம், ஐயா, இந்த வருடத்திய படிவம் எப்போது கிடைக்கும் என்று கேட்டால் அவர் மிகவும் அமைதியாக, "அடுத்த வருடம்" என்று பதில் சொல்லுவார்.

இந்த வருடமும் நாங்கள் மாமூலாக பழைய படிவங்களில் வருடத்தை மாற்றி மற்ற விவரங்களையும் எழுதிக் கொண்டு வருமான வரி அலுவலகத்திற்குப் போனோம். போன வருடம் தாலூக்கா ஆபீஸ் மாதிரி காட்சி தந்த வரிமான வரி அலுவலகம் இந்த வருடம் மேக்கப் போட்ட மணப்பெண் மாதிரி ஜொலித்தது. படிவங்களை வாங்குவதற்கு தனியாக கவுன்டர்கள். அதற்குப் பின்னே 18 லிருந்து 20 வயதிற்குள் இளம் பெண்கள். வருபவர்கள் உட்காருவதற்கு வசதியான சோபாக்கள். குளிரூட்டும் சாதனங்கள். இப்படியாக அலுவலகம் ஜொலித்தது.

நாங்கள் அப்படியே மயங்கிப் போனோம். கொஞ்ச நேரம் இந்த சூழ்நிலையை அனுபவித்தோம். பிறகு அந்த அழகிகளில் ஒருத்தியை அணுகி எங்கள் வருமான வரி படிவத்தைக் கொடுத்தோம். அந்த நாரீமணி அதைக் கையில்கூட வாங்காமல் ஏதோ மலம் துடைத்த குப்பைக் காகிதத்தைப் பார்க்கிற மாதிரி பார்த்துவிட்டு, இந்தப் பழைய படிவத்தில் கொடுத்தால் வாங்க மாட்டோம், இந்த வருடம் வந்துள்ள புதிய படிவத்தில் கொடுத்தால்தான் வாங்கிக்கொள்வோம் என்று திருவாய் மலர்ந்தருளினாள்.

நாங்கள், "சரீங்க, புது படிவம் எங்கு கிடைக்கும்" என்று கேட்டோம். அதற்கு அந்த நாரீமணி சொல்லிற்று, "புது படிவம் இன்னும் அச்சிடப்படவில்லை, எப்படியும் வருவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் ஆகும்" என்றது. நாங்கள் விடாக்கண்டர்களாக, அப்படியானால் "இப்பொழுது என்ன செய்வது"  என்று கேட்டோம்.

உங்களுக்கு அவசரமாக வேண்டுமென்றால் இன்டர்நெட்டிலிருந்து டவுன்லோடு செய்து படிவங்களைத் தயார் செய்து கொள்ளலாம். இதோ இங்கே டவுன்லோடு செய்ய வேண்டிய இன்டர்நெட் அட்ரஸ் எழுதிப்போட்டிருக்கிறோம் என்ற சொன்னார்கள். அப்படியே அங்கு எழுதிப்போட்டிருந்தார்கள்.

இங்க பக்கத்தில் ஏதாவது இன்டர்நெட் சென்டர் இருக்கிறதா என்று கேட்டோம். எங்களுக்குத் தெரியாது என்று பதில் வந்தது. நாங்கள் அக்கம் பக்கத்தில் சுற்றிப் பார்த்தோம். இருந்த ஒன்றிரண்டு சென்டர்களில் கரன்ட் இல்லையென்று பதில் வந்தது. சரி, வீட்டுக்குப்போய் நம் கம்ப்யூட்டரில் டவுன்லோடு பண்ணிக் கொள்ளலாம் என்று வீட்டுக்கு வந்து (வீட்டில் யூபிஎஸ் இருப்பதால் கரன்ட் பற்றி கவலை இல்லை) டவுன்லோடு பண்ணி படிவங்களில் எல்லாவற்றையும் எழுதி அவசர அவசரமாக வருமான வரி அலுவலகத்திற்குப்போனோம்.

மணி பிற்பகல் 1.10 ஆகிவிட்டது. நாரீமணிகளுக்கு உணவு இடைவேளை 1 லிருந்து 2 வரைக்குமாம். அங்கு எழுதிப் போட்டிருக்கிறார்கள். நாங்கள் இதை முதலில் கவனிக்கவில்லை. என்ன செய்யமுடியும்? நாங்களும் அங்குள்ள கேன்டீனில் சென்று சாப்பிட்டு விட்டுக் காத்திருந்தோம்.

இரண்டு மணி ஆனதும் ஒரு பத்து நிமிடம் கழித்துப் போய் படிவங்களை நீட்டினோம். வாங்கி பரிசோதித்தார்கள். பிறகு பெரிய மனது பண்ணி வாங்கிக்கொண்டு அக்னாலெட்ஜ்மெடன்டும் கொடுத்தார்கள். வாங்கிக்கொண்டு பெரிய இமாலய சாதனை புரிந்த பெருமிதத்துடன் வீடு வந்து சேர்ந்தோம்.

எனக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால் இவ்வளவு பணம் வசூலிக்கும் ஒரு அரசுத் துறை இந்த மிக முக்கியமான படிவங்களைக் காலாகாலத்தில் அச்சிட்டு மக்களுக்கு விநியோகிக்க முடியாதா? ஆனால் எப்படியோ இன்னும் கொஞ்ச நாளில் நாம் வல்லரசாவது உறுதி.

புதன், 11 ஏப்ரல், 2012

திருட்டு மாங்காய்க்கு சுவை அதிகம்.



இது மனிதனின் மனப்பாங்கைக் குறிக்கும் ஒரு பழமொழி. எவ்வளவுதான் ஒருவனுக்கு செல்வம் இருந்தாலும் இன்னும் ஏதாவது கிடைத்தால் நன்றாயிருக்குமே என்றுதான் அவன் சிந்தனை போகும். இந்தப் பேராசையைக் குறிக்கும் விதத்தில் சொல்லப்பட்ட பழமொழிதான் இது.

இந்தப் பேராசையை நம் அரசியல்வாதிகள் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் இலவசங்கள் என்ற திருட்டு மாங்காய்களை அவர்கள் பக்கம் வீசுகிறார்கள். மக்களும் அந்த இலவசங்களுக்கு மயங்கி அவர்களைப் பதவியில் அமர்த்துகிறார்கள்.

இது பல காலமாக நமது தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. தமிழன் தன்மானம் மிக்கவன் என்று ஏடுகளில் வேண்டுமானால் மார் தட்டிக் கொள்ளலாம். ஆனால் நடைமுறையில் இலவச வேட்டி சீலைகளுக்காக உயிரையும் விடுபவன்தான் தமிழன்.

இந்த இலவசங்களில் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பலவீனம் இருக்கும். அதை அறிந்து அவனை வீழ்த்துவதில் அரசியல்வாதிகளை மிஞ்ச யாரும் இல்லை. நம் நாட்டில் லஞ்சம் உருவானது இப்படித்தான்.

சிலருக்கு வேட்டி சீலை கொடுத்தால் போதும். சிலருக்கு பிரியாணியும் குவார்ட்டரும் வேண்டும். ஊட்டுப் பொம்பளைகளுக்கு டி.வி. பொட்டி போதும். சில தொரைகளுக்கு 5 ஸ்டார் ஓட்டலில் ரூம் போடவேண்டியிருக்கும். இப்படி பல வகைகளில் திருட்டு மாங்காய்களை அனுதினமும் ருசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.