மன அலைகள்

செவ்வாய், 15 அக்டோபர், 2019

போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே!


இந்தப்பதிவின் தலைப்பை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை. நான் கடந்த சில வருடங்களாக பதிவுலகில் அதிகம் ஈடுபடவில்லை, காரணங்கள் பல. அவை இங்கு தேவையில்லை.

பிளாக்கரில் ஏதோ நோண்டிக்கொண்டு இருக்கையில் என்னுடைய பிளாக்கைப் பற்றி கூகுளார் சில விபரங்களை என் முன் எடுத்து வைத்தார். முக்கியமாக அவர் சொன்னது என்னுடைய பிளாக் இன்னும் உயிருடன் இருக்கிறது. அதை இன்னும் சில அன்பர்கள் பார்த்துக்கொண்டும் பின்னூட்டங்கள் போட்டுக்கொண்டும் இருக்கிறார்கள்.

நான் இந்தப் பதிவுலகம் அஸ்தமித்துப் போய்விட்டது என்று நம்பிக்கொண்டிருக்கையில் இந்த விபரங்கள் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தன.

15-10-2019 அன்று எடுத்த ஸ்கிரீன் ஷாட்

இந்த விபரங்கள் 15-10-19 அன்று கூகுளாரின் தயவில் ஸ்கிரீன் ஷாட்டாக எடுக்கப்பட்டது. இது வரைக்கும் என்னுடைய பதிவை 13 லட்சம் பேருக்கு மேல் பார்த்திருக்கிறார்கள் என்கிற விஷயம் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. தவிர போன மாதம் ஏறக்குறைய 5000 பேர் இந்த தளத்தைப் பார்வையிட்டு இருக்கிறார்கள்.

இந்த எண்களைப் பார்த்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் நம் தளத்திற்கு இன்னும் மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றுவது சரியல்ல. அவர்களுக்காகவாவது இனி பதிவுகள் எழுதியே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

இந்தப் பதிவுலகில் நான் 2009 ம் ஆண்டு அடியெடுத்து வைத்தேன். இன்றைக்கு ஏறக்குறைய 10 வருடங்கள் ஓடி விட்டன. அன்று பதிவுலகில் கொடி கட்டிப் பறந்தவர்களில் அநேகம் பேர் காணாமல் போய்விட்டார்கள். ஒரு சிலர்தான் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

அதில் முக்கியமானவர்கள்.

1, துளசி டீச்சர் அவர்கள்
2.திரு.வெங்கட் நாகராஜ் அவர்கள்
3. திரு G.N.பாலசுப்பிரமணியன்
4. திரு ஸ்ரீராம் அவர்கள்
5.திரு கண்ணன் அவர்கள்
6.திரு வே.நடனசபாபதி அவர்கள்

இன்னும் மற்ற சிலர்.

இது தவிர வருடந்தோறும் பதிவர் சந்திப்புகள் நடத்தப்பட்டு பதிவர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கவும் வசதியாக இருந்தது. அனைத்தும் இப்போது கனாக் கண்ட மாதிரி காணாமல் போயின. எல்லாம் காலத்தின் கோலம். இதில் முகப்புத்தகம், வாட்ஸப்  போன்றவைகளின் பங்கும் உண்டு.

ஆனால் மற்ற மொழிகளில் பதிவுகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன, சில பதிவுகளின் மூலம் சிலர் பணம் கூட ஈட்டுகிறார்கள் என்று கேள்விப் படுகிறேன். எனக்கு அந்த ஆசையெல்லாம் கிடையாது. நான் எழுதுவதைப் படித்து விட்டு ஏதோ நான்கு பேர் என்னைத் திட்டி பின்னூட்டம் போட்டால் அதுவே போதும் எனக்கு. பாராட்டுகளை விட கண்டன பின்னூட்டங்கள்தான் என்னை விழிப்பாக வைத்திருக்கும். என் வயதில் அது ஒன்றே எனக்குத் தேவையானது.

பார்ப்போம்.